புதிய சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில், நாகாலந்தில் பரப்புரை மந்தமாகவும் அரசியல், பரபரப்பின்றியும் இருக்கிறது. கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையைச் சுற்று பிராந்திய தன்னாட்சி போன்ற பிரச்னைகள் நீண்டகாலமாக இருக்கின்றன. ஆனால் பரிவர்த்தனை அரசியலை அடிப்படையாக கொண்ட ஒரு சமநிலையை நாகாலந்து அடைந்துவிட்டது போல தோன்றுகிறது. பா.ஜ.கவும் அதன் பிராந்திய கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக மக்கள் கட்சியும் 2018ஆம் வருடத்தின் தொகுதிப் பங்கீட்டு முறையையே தொடர்கிறார்கள். அதாவது முறையே 20 மற்றும் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். எதிர்கட்சியான நாகா மக்கள் முன்னணி சிக்கலான ‘இந்திய-நாகா அரசியல் பிரச்னைக்கான’ தீர்வுக்கு ஒரு ஒருமித்த உந்துதலை தரும் பொருட்டு ஆகஸ்ட் 2021ல் தேசியவாத ஜனநாயக மக்கள் கட்சி-பா.ஜ.க அரசில் இணைந்தது. தீவிரவாதக் குழுக்களுடன் குறிப்பாக என்.எஸ்.சி.என் (ஐசாக்-முய்வா) அமைப்புடனான இறுதித் தீர்வைதான் அப்படி வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். எதிர்கட்சிகள் இல்லாத அரசியலை வாக்காளர்கள், கட்சிகள் மற்றும் பிற குழுக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. நாகா மக்கள் முன்னணியின் 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் ஏப்ரல் 2022ல் தேசியவாத ஜனநாயக மக்கள் கட்சியில் இணைந்தார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுள் ஒருவர் பா.ஜ.கவுக்கு தாவி அதன் 20 வேட்பாளர்களில் ஒருவராகியிருக்கிறார். 2018ல் மோசமாக வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் 24 வேட்பாளர்களையும் ஒரு காலத்தில் வலுவாக இருந்த நாகா மக்கள் முன்னணி 22 வேட்பாளர்களையும் நிறுத்தியிருக்கிறது. எல்லைப்புற நாகாலாந்து மாநிலத்திற்கான கோரிக்கைக்காக போராடும் அந்த அமைப்பு 20 தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பை திரும்பப் பெற்ற போதிலும், அந்த கோரிக்கை ஒரு பிரச்சினையாகவே உள்ளது. 2003 முதல் கடந்த தேர்தல்களைப் போலவே தீவிரவாதக் குழுக்களுடானான சமாதான உடன்படிக்கைதான் இப்போதும் மிகவும் பேசப்படும் பிரச்னை. நாகாலாந்தைப் பொறுத்தவரையில், அரசியல் சித்தாந்தங்களின் பங்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஆளுமைகள் மற்றும் அவர்களது மத்தியில் ஆளும் கட்சிகளுடான நெருக்கம் கொள்ளும் திறன் ஆகியவை சார்ந்தே தேர்தல்கள் நடக்கின்றன. வாடகையை அடிப்படையாக கொண்ட மாநிலத்தின் அரசியல் பொருளாதாரத்தின் அடித்தளமாக இருக்கும் மத்திய நிதிகளைச் சுற்றியே குழுக்கள் தேர்தல் கணக்குகளை செய்கின்றன. 2018 தேர்தலை சுயாட்சி என்கிற பிரச்னையின் ‘தீர்வுக்கான தேர்தலாக’ முன்வைத்து போட்டியிட்டன பா.ஜ.க-தேசியவாத ஜனநாயக மக்கள் கட்சி கூட்டணி. பிரச்னையை தீர்க்கும் பொருட்டு ஆகஸ்ட் 2015ல் என்.எஸ்.சி.என் (ஐ-எம்) உடன் கட்டமைப்பு ஒப்பந்தத்திலும், 2017 நவம்பரில் நாகா தேசிய அரசியல் குழுக்களுடன் (பேச்சுவார்த்தையில் இணைந்த ஏழு அமைப்புகளின் கூட்டமைப்பு) ஒப்புக் கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் மத்திய அரசு கையெழுத்திட்டது. ஆனால் நாகாலாந்துக்கு தனி கொடி மற்று தனி அரசியல் சாசனம் என்பதில் அது தடைப்பட்டு நின்றது. நாகா நம்பிக்கைக்கு பா.ஜ.க துரோகமிழைத்துவிட்டதாக குற்றம் சாட்டும் தீவிரவாதிகள் தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்பு அரசியல் தீர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். புதிய அரசுக்கு நிறைய பணிகள் காத்திருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.