தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி. எஸ்) கீழ் உறுப்பினர்களின் திரட்டப்பட்ட தொகுப்பை மாநிலங்களிடத்தில் “திருப்பியளிக்கவும் வைப்புத் தொகையாக தரவும்” எந்த ஏற்பாடும் சட்டரீதியாக இல்லை என்று மத்திய நிதி அமைச்சரவை சமீபத்தில் மாநிலங்களவையில் வலியுறுத்தியது. இது பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்புவது குறித்து யோசிக்கும் மாநிலங்களை தடுத்து நிறுத்தும் ஒரு விளைவை ஏற்படுத்தக் கூடும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டி.ஏ) சட்டம், 2013, பி.எஃப்.ஆர்.டி.ஏ (தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல்) ஒழுங்குமுறைகள், 2015 மற்றும் பிற விதிமுறைகள் சொல்வதைதான் நிதி அமைச்சரவையின் நிலைப்பாடும் பிரதிபலிக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுக்கும் எந்த திட்டமும் இல்லை என்பதை சரியான காரணங்களுடனேயே மத்திய அரசு தெளிவுப்படுத்தி வருகிறது. நிபுணர்களும் இந்திய ரிசர்வ் வங்கியும் சுட்டிக்காட்டுவது போல பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்புவதால் நிதி ஆதாரங்களில் ஏற்படும் வருடாந்திர சேமிப்பு குறுகிய காலத்துக்கு மட்டும்தான் இருக்கும். இந்த நிதிரீதியான நன்மையையும் கூட, ஓய்வூதிய கட்டணங்கள் என்கிற வடிவத்தில் பெரிய கடனாகவே மாறும். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பும் யோசனையை “பிற்போக்குத்தனமானது” என்றுகூட சொன்னார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பராவ். காரணம், இதில் பெரும்பாலும் சமூக பாதுகாப்பு வசதி இல்லாத பொதுமக்களை விட அரசு ஊழியர்களுக்கு நிறைய சலுகைகள் இருக்கின்றன. ஆனால், அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் இருப்பவர்களும் அரசு ஊழியர்களும் போராடிக் கொண்டிருப்பதால் இந்த பிரச்னை தீர்ந்தபாடில்லை. மகராஷ்டிரா, உத்திரபிரதேசம் அல்லது கர்நாடகா போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டார்கள். ஆனால் ஓய்வுக்கு பிறகு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பும் அவர்களது நியாயமான எண்ணத்தின் அடிப்படையில் பார்க்கும்போது புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கிடைக்கவிருக்கும் ஓய்வூதியத்தின் நிச்சயமற்றத்தன்மை குறித்த அவர்களது கவலைகள் ஏற்றுக் கொள்ள கூடியதே. பி.எஃப்.ஆர்.டி.ஏ மூலம் புதிய ஓய்வூதிய திட்டம் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தாலும், அது சந்தையுடன் இணைக்கப்பட்டதும், வரையறுக்கப்பட்ட பங்களிப்பு சார்ந்த ஒரு திட்டம். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் ஒரு தெளிவான ஓய்வூதிய திட்டம். இதில் பயனாளிகள் தங்களது இறுதி சம்பளத்தில் 50 சதவீதத்தை பெறுவார்கள். தவிர இதற்கான முழு செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை முழுமையாக நிராகரிப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். பழைய, புதிய திட்டங்களில் உள்ள அம்சங்களை இணைத்து ஒரு திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டிய நேரம் இது. ஊழியர்களின் பங்களிப்பு என்கிற அம்சத்தை தக்கவைத்துக் கொண்டு அரசிடமிருந்து கூடுதல் பங்களிப்போடு இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம். நிர்ணயிக்கப்பட்ட குறைந்த ஓய்வூதியத் தொகையை இதில் கிடைக்கும் வருமானம் உறுதி செய்யவில்லையென்றாலும், அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும். ஆந்திர பிரதேசம் கடந்த வருடம் வைத்த ஒரு முன்மொழிவு கவனத்துக்குரியது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பங்களிப்பு தன்மையை வைத்துக் கொண்டு, இந்த முன்மொழிவு அடிப்படை ஊதியத்தில் 33 சதவீதத்தை உத்தரவாதமளிக்கிறது. மற்ற மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப இதை மேம்படுத்தவும் செய்யலாம். தாராளமான காப்பீட்டுத் திட்டத்தை உள்ளடக்கிய நல்ல சுகாதார வசதிகளையும் பரிசீலிக்க வேண்டும். ஊழியர்கள் தங்கள் பங்குக்கு விவேகமாக நடந்து கொண்டு பிரச்னையை தீர்ப்பதற்கு விருப்பத்துடன் இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.