82 வயதான தெலுங்கு கவிஞரும் செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு மருத்துவ காரணங்களுக்காக பிணை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (ஊபா) கீழ் பதிவுசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய பீமா கொரேகாவ்ன் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்க்க சதி செய்த ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு வயது ஒரு காரணமாக கருதப்படக்கூடாது என்றும் அவரது உடல்நிலை அவ்வளவு மோசமில்லை என்றும் தேசிய புலனாய்வு முகமை முன்வைத்த வாதங்களை உச்ச நீதிமன்றம் சரியாகவே நிராகரித்திருக்கிறது.
இதே வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த எண்பது வயதுகளில் இருந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பிணை கோரி, அந்த வழக்கு விசாரணையில் இருந்த போதே அவர் உடல்நிலை மோசமாகி இறந்தார் என்பதை மறந்துவிட முடியாது. வரவர ராவின் வழக்கைப் பொறுத்தவரையில் அவர் ஆகஸ்ட் 2018ல் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 2021ல் உடல் நிலை காரணமாக ஆறு மாதங்கள் இடைக்கால பிணை வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் காவலுக்கு திரும்ப பம்பாய் உயர் நீதிமன்றம் அவ்வப்போது தேதி குறித்து வந்தாலும் அவர் சிறை திரும்புவது தள்ளிவைக்கப்பட்டது. அவரது வயதைக் கருத்தில் கொண்டு இப்போது உச்ச நீதிமன்றம் அவரது பிணைக்கான கால வரம்பை நீக்கி, வழக்கமான பிணையை வழங்கியிருக்கிறது.
அவர் மும்பையிலேயே தங்க வேண்டும் என்றும் சாட்சிகளுடன் தொடர்பில் இருக்க கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்திருக்கிறது. வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை நீதிமன்றம் இன்னும் குற்றம் சாட்டும் நடைமுறையை முடிக்கவில்லை (Framing of Charges) என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும், இடைக்கால பிணையை எந்த விதத்திலும் அவர் தவறாக பயன்படுத்தியதாக யாரும் சொல்லவில்லை.
ஊபா வழக்கைப் பொறுத்தவரையில் அதில் பிணை பெறுவதென்பது பெரும்பாலும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே சாத்தியம். மற்றபடி வழக்கின் தகுதிகளைப் பொறுத்து பிணை கிடைப்பது இயலாத ஒன்று. இந்த சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்தான் தன் மீது காவல்துறை சுமத்தும் குற்றங்கள் அடிப்படையில் உண்மைத் தன்மையற்றவை என்று நிரூபிக்க வேண்டும்.
இந்த கடுமையான நிபந்தனையை அவ்வளவு எளிதாக நிறைவேற்ற முடியாது. குறிப்பாக தேசிய புலனாய்வு முகமை vs ஸஹூர் அகமத் ஷா வதாலி வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பில், நீதிமன்றங்கள் பிணை குறித்து விசாரிக்கும்போது ஒரு நபருக்கு எதிரான விஷயங்களை தீவிரமாக ஆராயக் கூடாது என்றும் வழக்கின் ‘பரவலான சாத்தியங்களின் அடிப்படையில்’ அரசத் தரப்பு வழக்கு உண்மையா என்பதை வைத்து முடிவு செய்ய வேண்டும் என்றும் சொன்னது.
ஆனால் விசாரணை நடத்துவதில் உள்ள அசாதாரணமான தாமதத்தையும் உரிமை மீறல்களையும் அடிப்படையாக கொண்டு இந்த வரையறையையும் மீறி ஊபா வழக்குகளில்கூட பிணை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். புனேவில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நடந்த ஒரு நினைவேந்தல் நிகழ்வில் நடந்த சில சலசலப்புகளை முன்வைத்துத்தான் பீமா கொரேகாவ்ன் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர்களையும் செயற்பாட்டாளர்களையும் பயன்படுத்தி, அரசை கவிழ்க்க மாவொயிஸ்ட் சதி என்கிற வழக்கு கட்டமைக்கப்பட்டது.
இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் சிக்கவைப்பதற்காக அவர்களது எலெக்ட்ரானிக் சாதனங்களில் உளவுக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த வழக்கு முகாந்திரம் கொண்டதா அல்லது சில செயற்பாட்டாளர்களை நெருக்கடிக்குள்ளாக ஜோடிக்கப்பட்டதா என்கிற அடிப்படை கேள்வியை நீதிமன்றங்கள் ஆராய வேண்டிய நேரம் இது. சந்தேகத்துக்குரிய தன்மையுடைய ஒரு வழக்கில் ஒருவர் நீண்ட காலம் சிறையில் இருப்பதற்கு நீதித்துறை துணைபோய்விடக்கூடாது.
This editorial in Tamil has been translated from English which can be read here.