75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதை பற்றிய தனது உணர்வெழுச்சி மிகுந்த உரையில் இந்த கருத்துகளைச் சொன்னார்: “இன்று நாம் கொண்டாடும் இந்த சாதனை, நமக்காக காத்துக் கொண்டிருக்கும் மேலதிக வெற்றிகளுக்கும் சாதனைகளுக்குமான ஒரு வாய்ப்பு, ஒரு வாசலின் திறப்புதான். இந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு எதிர்காலத்துக்கான சவாலை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு நம்மிடம் துணிவும் அறிவும் இருக்கிறதா?”
சர்வதேச அளவில் சில இடங்களில் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுப்பட்டு புதிய தேசிய அரசுகள் பிறப்பதற்கு வழிவகுத்த வரலாற்று மைல்கல் நிகழ்வான ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுபட்ட அந்த காலகட்டத்தைப் போலவே இப்போதும் இந்த வார்த்தைகள் உண்மையை சுமந்திருக்கினறன. தனது விடுதலைக்காக பாடுபட்ட போராளிகளின் கனவுகளையும், தனித்துவம் வாய்ந்த தாராளவாத ஜனநாயகத்தன்மை கொண்ட அரசியல் சாசனத்தை உருவாக்கி, அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் தொடங்கி வைத்த நோக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு இந்தியா தனது புதிய பயணத்தை தொடங்கியது. குறிப்பிடத்தகுந்த சாதனைகள் இருந்திருக்கின்றன – பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் மதசார்ப்பற்ற நிர்வாகம் உள்ளிட்ட உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் அரசியல் சாசன திட்டம், தேர்தல்களில் குறிப்பிட்ட வயதடைந்த அனைவருக்குமான வாக்குரிமை, வெற்றிகரமாக இயங்கும் சட்டமன்றங்கள், அதிகாரங்களை முறைப்படி வகுக்கும் நிறுவனங்கள், மொழி அடிப்படையில் மறுவரைசெய்யப்பட்ட மாநிலங்களின் ஒன்றிய அமைப்பில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் கூட்டாட்சி தத்துவம், வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிறுவனங்களை (தொழில், மருத்துவ மற்றும் கல்வி நிறுவனங்கள்) உருவாக்குதல் மற்றும் உலக பொருளாதாரத்துடன் இந்தியாவை இணைத்த தொடர்பு மற்றும் அறிவுசார் துறைகளின் வளர்ச்சி போன்றவை.
பல தவறான நடவடிக்கைகளும் தோல்விகளும் கூட இருந்திருக்கின்றன – 1947லிருந்து பார்க்கும் போது குறைந்திருந்தாலும் மிக மோசமான வறுமையை ஒழிக்க முடியாத நிலை மற்றும் விளிம்புகளில் வாழும் மக்கள் நிலை, அரசியல் சாசன உறுதிகளையும் விழுமியங்களையும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், விடுதலைப் போராட்ட வீரர்களும் அரசியல் சாசனத்தை வகுத்தவர்களும் தெளிவாக நிராகரித்த வகுப்புவாத பேரினவாதத்தின் பெருக்கம், அதிகாரப் பகிர்வின் முழுமையற்றத்தன்மை மற்றும் அதிகரிக்கும் பொருளாதார சமமின்மை. மக்கள் தொகை சார்ந்த ஆதாயங்களின் அடிப்படையில் இந்தியா இன்று சர்வதேச அளவில் வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரம்; தேர்தல்களில் உற்சாகமான பங்களிப்பை உறுதிப்படுத்தும் ஒரு உயிர்ப்பான ஜனநாயகம்; பன்முக அரசியல்தன்மையும் பலவகைப்பட்ட பொருளாதாரங்களும் கொண்ட ஒரு நாடு. ஆனால் அது மிகப் பெரிய சவால்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் ஒரு சவாலாக இருக்கும், தாராளவாத வர்த்தக உறவுகளும் ஒத்துழைப்பும் அடி வாங்கும் ஒரு குழப்பமான உலகில் அதன் மக்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க்கிறார்கள். தவிர, பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்வைத்த அரசியல் சாசன அமைப்பை குலைக்கும் வகையில் அதிகாரத்தை குவித்து மையப்படுத்தி, இந்தியா என்னும் கருத்தாக்கத்தை ஒற்றைமயமாக்க விரும்பும் ஒரு அரசியல் சக்தி உதித்து திரண்டு ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறது. 1990களில் பொருளாதார சீர்த்திருந்தங்கள் மூலமாகவும் 2000களில் மக்கள் நலன்களுக்கு உரிமைகளின் அடிப்படையிலான அணுகுமுறைகள் வாயிலாகவும் விரைவாக நடந்த உள்ளடக்கிய வளர்ச்சி மூலமாக பொருளாதார முன்னேற்றம் என்பது கடந்த சில வருடங்களில் தோய்வடைந்திருக்கிறது. இதற்கிடையில் மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. பிற மாநிலங்களைவிட இந்தியாவின் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மாநிலங்கள் கல்வி, மருத்துவம் மட்டும் முழுமையான பொருளாதார வளர்ச்சியில் சிறப்பாக செயல்படுகின்றன. எதிர்காலத்தில் கவனமாக பரிசீலிக்க வேண்டிய ஒரு பிரச்னை இது.
சுதந்திர இந்தியாவில் நமது முந்தைய தலைமுறையினரின் வெற்றி தோல்விகள், எதிர்கால சவால்களை சந்திக்க இந்த நாட்டுக்கு சில பாதைகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. நிர்வாக முக்கியத்துவம் அல்லது சந்தை மட்டுமே முக்கியம் என்கிற நிலைப்பாடை கொண்ட வளர்ச்சியும் முன்னேற்றமும் உகந்ததல்ல என்பது ஒன்று. 1990களில் வகுக்கப்பட்ட கொள்கைகளை இந்தியா தொடர வேண்டும். தொழில்முனைவோர் சார்ந்த ஆற்றல்கள் வளர உதவுவதோடு 2000களின் இறுதியில் முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்கள் நலன் அடிப்படையிலான உரிமைகள் சார் பரந்த அணுகுமுறையையும் கைவிட கூடாது. அதன் மூலம் மக்கள்தொகைசார் ஆற்றலை பயன்படுத்த முடியும். சுதந்திர பெற்ற பிறகான தொடக்ககால வருடங்களில் மேற்கல்வி, தொழில், மருத்துவ நலனுக்கான பல நவீன நிறுவனங்கள் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டன. ஆனால் அடிப்படை மருத்துவநலன் மற்றும் கல்வியில் அழுத்தமான கவனத்தை தரத் தவறியதன் மூலம் வறுமை தொடரவும், சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குதல் தொடரவும் இந்தியா வழிவகுத்தது. நலிந்தோருக்கான சிறப்பு கவன நடவடிக்கை (affirmative action) மற்றும் நிர்வாக எதிர்வினை அடிப்படையிலான குடிமக்களின் திறன்களை வளர்க்கும், முன்னேற்றத்துக்கான கீழிலிருந்து மேல்நோக்கும் அணுகுமுறையே பொருளாதாரத்தில் இன்னும் சிறப்பான உற்பத்தி சக்திகளை உருவாக்கும். மாநிலங்கள் கூடுதலாக நிதி ரீதியான பரப்பெல்லையை பெறுவதும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகள் பெறுவதும் இந்த நோக்கத்தை அடைவதற்கு உதவும். 1991ன் சீர்த்திருத்த காலத்திலிருந்து உலகமயமாகப்பட்ட நிலையில் உருவான சார்புத்தன்மை ஏற்றுமதி துறைகள் செழிக்க உதவினாலும், பல்வகைப்பட்ட வேலைவாய்ப்புகள் இல்லாமல் போனதும் சீனா, தென் கோரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கூடுதல் தொழிலாளர் சார் உற்பத்தி இல்லாமல் போனதும் ஒரு தோல்வியே. 5ஜி, உணரித் தன்மை கொண்ட இணையம் சார்ந்த பொருட்கள், செயற்கை நுண்ணுணர்வு, ரொபோடிக்ஸ் மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் மீதான சார்பு காரணமாக உலகம் புதிய தொழில் புரட்சி மூலம் நகரும் இந்த காலகட்டத்தில் இந்தியா சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே பலன் பெறும் வகையில் இல்லாமல் பொருளாதாரத்தை பன்மயப்படுத்தும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் குறிப்பிடத்தகுந்த செயல்திறனை கட்டமைக்க இந்தியா முன் வர வேண்டும். அயல்நாட்டு உறவுகளைப் பொறுத்தவரையில், சர்வதேச அளவில் தனது வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முரண்பாடுகளை சரியாக கையாள வேண்டும். அணி சேரா நாடுகளின் தலைமை ஏற்க உதவிய நீண்டகால விழுமியங்களான தலையிடாமை, வேறுபாடுகள் இல்லாத உலகம் மற்றும் சமாதானம் போன்றவற்றை அது கைவிடகூடாது. பிற நாடுகளுக்கு இடையிலான பரஸ்ரபர மரியாதையைப் பொறுத்தவரையில் 1947இலிருந்து பார்க்கும் போது இந்தியா நீண்ட தூரம் வந்திருக்கிறது. ஆனால் சுதந்திரத்துக்கு முதல் நாள் பண்டிட் நேரு பேசிய உறுதிமொழியை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம், பன்முகத்தன்மையில் ஒற்றுமை போன்றவற்றின் அடிப்படையில் உருவான அரசியல் சாசனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக செயல்முறை இருந்தாலொழிய ஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட சுதந்திரம் பொருளற்றது என்பதில் இந்தியாவின் சுதந்திரத்தைப் பெற்ற தலைமுறையினர் தெளிவாக இருந்தார்கள். காரணம் இவற்றின் அடிப்படையில்தான் காலனிய ஆதிக்கத்தை வீழ்த்த உதவிய அறிவுசார் அடித்தளமும் மக்கள் ஆதரவும் கிடைத்தது. இந்தியாவின் 21 ஆம் நூற்றாண்டின் முன்னேற்றம் என்பது இந்த விழுமியங்களை மீண்டும் கிளர்த்தி கடைப்பிடிப்பதிலேயே இருக்கிறது.
This editorial in Tamil has been translated from English which can be read here.