மூன்று வருடங்களுக்கு ஊழல் குற்றம் சாட்டப்பட்டு இவர் சிறையில் இருந்தார். இன்று தென்னமெரிக்காவின் மிக பெரிய நாட்டின் அதிபராக பொறுப்பேற்கவிருக்கிறார். இதற்கு முன்பு இரண்டு முறை பிரேசிலின் அதிபராக இருந்த இடதுசாரி தொழிலாளர்கள் கட்சியின் தலைவரான லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவின் கதை, சமகால லத்தீன் அமெரிக்க அரசியலில் மிக வியக்கத்தக்க மறு வருகைகளில் ஒன்று. 99.5 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், லூலா 50.9 சதவிகித வாக்குகளை பெற்று 49.1 சதவிகித வாக்குகளை பெற்ற தற்போதைய அதிபரான ஜேர் போல்சனாரோவை வீழ்த்தியிருந்தார். கடந்த ஐந்து வருடங்களில் பிரேசிலை வலதுசாரி அரசியல் நோக்கித் திருப்பிய தீவிர வலதுசாரி வெகுஜனவாதியான திரு.போல்சனாரோ பெரும்பாலான கருத்துக் கணிப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வாக்குகளையே பெற்றிருந்தார். ஆனால் முடிவு எட்டப்படாத நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட போட்டியில் வாக்காளர்களுக்கு முற்றிலும் எதிரெதிரான இரண்டு தேர்வுகள் வழங்கப்பட்டன. அதிதீவிர தேசியவாதம், பழமைவாதம், கட்டடற்ற சந்தை முறை கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வாய்ப்பு அல்லது சமூக தாராளமயவாதத்தால் செலுத்தப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சியை உறுதியளித்த மற்றொரு வாய்ப்பு என இரு தேர்வுகள் வழங்கப்பட்டன. இந்த இரண்டில் மக்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார்கள். தன்னைத் தவிர வேறு யாரையுமே திரு.போல்சனாரோ குற்றம் சொல்ல முடியாது. பிரேசிலின் மூர்க்கமான இராணுவ சர்வாதிகாரப் போக்கின் அபிமானியான அவர், கோவிட்-19ன்போது மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய அரசின் செயல்பாட்டுக்கு காரணமாக இருந்தார். கிட்டத்தட்ட 7,00,000 மரணங்களை ஏற்படுத்தியதுடன் பொருளாதார வாய்ப்புகளும் இதனால் சுருங்கியது. இடதுசாரி அரசியலை தாக்கியதன் மூலம் திரு. போல்சனாரோ அதிகாரத்தை பெற்றிருந்தாலும், அவரது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்துக்கு பிறகு பார்க்கும்போது பெரும்பாலான பிரேசில் மக்களுக்கு இடதுசாரி தொழிலாளர்கள் கட்சியின் ஆட்சியே சிறந்த ஆட்சிக் காலமாக இருந்தது. பிரெசிலின் இடதுசாரி அரசியலுக்கு தேவையாக இருந்ததெல்லாம் ஒரு தலைமை. உச்ச நீதிமன்றத்தால் லூலா
மீதான ஊழல் குற்றசாட்டுகளுக்களுக்கான தண்டனை ரத்து செய்யப்பட்ட பின்னர், அவரிடம் அந்த தலைமையை அவர்கள் பெற்றார்கள். 2003 முதல் 2010 வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், சுமார் 25 மில்லியன் பிரேசிலிய மக்களை தனது கொள்கைகளின் மூலம் வறுமையிலிருந்து மீட்டெடுத்தார் லூலா. அவர் வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் கவனம் செலுத்தினார். வளங்களை மறுபங்கீடு செய்வதன் மீது அழுத்தம் கொடுத்த அதே வேளையில், நாட்டின் பிரபுத்துவ பிரதிநிதிகளுடன் மோதல் போக்கை கைகொள்ளாமல் இணக்கத்தை வலியுறுத்தும் ஒரு ஒத்துழைப்பு மாதிரியை அவர் தேர்ந்தெடுத்தார். கடந்த காலத்தைப் போலவே இப்போது அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசியலை நோக்கிய அலை வீசும் போது லூலா ஆட்சிக்கு திரும்புகிறார். அமெரிக்க கண்டத்தில் தற்போது பெரும்பாலான பெரிய நாடுகளை இடதுசாரி கட்சிகளே ஆட்சி செய்கின்றன. பிராந்திய ரீதியாக அவருக்கு சாதகமான சூழல் இருந்தாலும், பிரேசிலிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது இப்போது லூலாவின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால். இன்று அவருக்கு கிடைத்திருக்கும் பிரேசில், வேறொரு நாடு. லட்சிய நோக்கம் கொண்ட அவரது பொதுநலத் திட்டத்துக்கு கடந்த முறை நிதி அளித்த பொருட்களின் அதீத விற்பனை இப்போது இல்லை. பிரேசிலின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவின் மந்தநிலை பொருளாதாரத்தை பாதித்திருக்கிறது. அடுத்த வருடம் அது 0.6 சதவிகிதம் என்ற அளவிலேயே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு சேர்ந்து திரு.போல்சனாரோவின் மோசமான நிர்வாகமும் கோவிட்-19ன் பொருளாதாரத் தாக்கமும் சேர்ந்து மிகப்பெரிய அளவில் வறுமைக்கும் பசிக்கும் இட்டுச் சென்றிருக்கிறது. 33 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பழமைவாதிகள் வலுவாக இருக்கும் காங்கிரஸிலும் (நாடாளுமன்றத்தில்) லூலாவுக்கு எதிர்ப்பு வலுவாக இருக்கும். எதிரில் உள்ள பாதை கடுமையானது. ஆனால் அவர் ஒரு திறமையான நிர்வாகி மற்றும் புத்திசாலித்தனமான அரசியல்வாதி என்பதை அவரது கடந்த காலம் காட்டியிருக்கிறது. பிரெசிலின் தற்போதைய மேட்டுக்குடிகளைத் தாண்டி தனக்கான பாதையை கண்டடைந்து கூடுதலான மாற்றங்களை அவரால் கொண்டு வர இயலும் என்று எதிர்பார்க்கலாம்.
This editorial has been translated from English, which can be read here.