ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தனது மக்கள் தொகையின் சாதி வாரியான எண்ணிக்கையை பிஹார் வெளியிட்டிருப்பதன் முக்கியத்துவம் ஆழமானது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த கணக்கெடுப்பு, வீடுகளை பட்டியலிடுவது, அதைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து தகவல்களைப் பெறுவது என இரண்டு கட்ட செயல்முறையை கொண்டிருந்தது. பிஹாரின் 13 கோடி மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஈபிசி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த கணக்கெடுப்புக் காட்டுகிறது. மக்களின் சமூக, பொருளாதார சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் வெளியிடப்படவில்லை. தேசிய அளவில், இது நாடு தழுவிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசியல் கோரிக்கைக்கு ஊக்கமளிக்கக்கூடும். தவிர கல்வி மற்றும் அரசு பணிகளில் மொத்த இடஒதுக்கீட்டின் 50 சதவீத சட்ட உச்சவரம்பை மறுபரிசீலனை செய்வதற்கான நீதித்துறை விவாதத்தையும் அது தூண்டக்கூடும். கட்சி அரசியலைப் பொறுத்தவரை, இந்துக்களின் அனைத்து பிரிவுகளையும் ஒரு பெரிய ஆதரவுத் தளமாக ஒருங்கிணைக்க விரும்பும் பா.ஜ.கவுக்கும் ஓபிசியின் வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்திருக்கும் பிற கட்சிகளுக்கும் இடையிலான பாரம்பரிய மோதலில் இது ஒரு புதிய அத்யாயத்தைத் திறக்கக்கூடும். ஓபிசி வலிமையை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை இந்துத்துவம் முறியடித்துவிட்டதாகக் கருதப்படும் நேரத்தில், செல்வாக்குமிக்க சமூகக் குழுக்கள் இப்போது தங்கள் நலன்களை அரசியல் வர்க்கம் முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு தங்களது வலிமையை பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இதில் உணரக்கூடும். சட்டத்தைப் பொறுத்தவரையில், பல்வேறு மாநிலங்களில் பெறப்படும் இடஒதுக்கீட்டின் அளவை நியாயப்படுத்துவதற்கு நீதித்துறை கேட்கும் ‘அளவிடக்கூடிய தரவுகளை’ முன்வைக்க இந்த எண்கள் பயன்படுத்தப்படலாம்.
சாதி வாரி கணக்கெடுப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு பிஹாரின் இந்த நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. மாநிலத்தின் சாதிப் பட்டியலில் உள்ள 214 சாதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீட்டைக் கொடுப்பது இந்த செயல்முறையின் ஒரு பகுதி. உட்சாதிகளும் பிரிவுகளும் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு பரந்த சாதிப் பெயரின் கீழ் இணைக்கப்பட்டன. இதன் பொருள், பதிலளிப்பவர் கொடுக்கும் எந்த சாதி பெயருக்கும் ஒரு குறியீட்டை கணக்கெடுப்பாளர்கள் ஒதுக்க முடியும் என்பதுதான். 2011ல் ‘சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு’ பற்றிய சாதி தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிடாததற்கு ஒரு முக்கிய காரணம், அது அளித்த தரவுகள் மிகவும் குழப்பமானதாகவும், கடினமானதாகவும் இருந்தன என்பதுதான். மக்கள் கிட்டத்தட்ட 46 லட்சம் சாதிப் பெயர்களை அதில் சொல்லியிருந்தார்கள். அவர்களுடைய சாதிகள் பற்றி கேட்கப்பட்டபோது மக்கள் சாதிகள், உட்சாதிகள், பிரிவுகள், குலங்கள் மற்றும் குடும்பப் பெயர்களை சொன்னதால் இது நடந்திருக்கலாம். சாதிகளின் சரியான எண்ணிக்கைகளை அறிந்து கொள்வதில் சில செயல்பாட்டு மற்றும் நடைமுறை சார்ந்த நன்மைகள் இருந்தாலும், அரசியலமைப்பின் பெரும் குறிக்கோள் சாதியற்ற சமூகத்தை அடைவதே என்பதை மறந்துவிடக்கூடாது. சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய நேர்மறை நடவடிக்கைகள் நிச்சயம் உதவுகின்றன. சாதி அடையாளத்தை வலியுறுத்தாமல் சமவாய்ப்பு மற்றும் வளங்களை சமமாக பகிர்ந்தளிப்பதை உறுதி செய்வதற்கான வழிகளையும் அரசு ஆராய வேண்டும்.