செப்டம்பர் 1 ஆம் தேதி சீனாவின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய தைவானின் ராணுவ நடவடிக்கை, தைவான் நீரிணையில் ஏற்கனவே கனன்று கொண்டிருக்கும் பதற்ற சூழலில் ஒரு புதிய அத்தியாத்தை திறந்திருக்கிறது. திட்டமிடப்படாமலும்கூட பதற்றம் அதிகரிக்ககூடும் என்பதையும் அது தெளிவுபடுத்தியிருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் செய்த பிறகு, கடந்த பல வாரங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீன ராணுவம் தனது ராணுவ பயிற்சிகளை தைவானைச் சுற்றி நிறைய நடத்தி வந்திருக்கிறது. சில ராணுவ நடவடிக்கைகள் தைவான் நீரிணையின் மையப் பகுதியை கடந்து தன்னுடைய கடல் பகுதி என தைவான் கூறிக்கொள்ளும் கடல் பகுதியிலும் நடந்திருப்பதாகவும் சீன ராணுவம் அறிவித்திருக்கிறது. மக்கள் விடுதலை ராணுவத்தின் கப்பல்களுடன் மோத வேண்டாம் என்று தைவான் நிதானமான முடிவை எடுத்தது. இந்த ராணுவப் பயிற்சிகளின் தொடர்ச்சியாக, சீனா தனக்கு இருப்பதாக நம்பும் எல்லை சார்ந்த அதிகாரத்தை நிறுவுவதற்காக தைவானின் வான்வெளிக்கு டிரோன்களை அனுப்பியது சீன ராணுவம். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தைவான் ராணுவத்தினரின் மிக நெருக்கமான புகைப்படங்கள், சீனாவின் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டவை போல தெரிந்தாலும் பதிலடி தர வேண்டும் என்கிற அழுத்தத்தை அது தைவானுக்கு உண்டாக்கியது. பல கட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு ஷியு தீவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத, சிவிலியன் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தும் முடிவை எடுத்ததாக தைவானின் ராணுவம் சொன்னது. இப்போது வரையில் இந்த விவகாரத்தை பற்றி பெரிதாகப் பேசாமல் இருக்கும் சீனா, ஒரு வேளை சுட்டு வீழ்த்தப்பட்டது ராணுவ ஆளில்லாத விமானம் என்றால் வேறு மாதிரியாக எதிர்வினை ஆற்றியிருக்கும். சிவிலியன்கள் பயன்படுத்தும் ட்ரோன்களையும் ராணுவ ட்ரோன்களையும் சீன ராணுவம் செலுத்துவதாகச் சொல்லப்படும் நிலையில், நீரிணைக்கு அருகில் இருக்கும் ஃபுஜியனில் வாழும் சாதாரண மக்களும் இதைச் செய்கிறார்கள்.
இதனால், ஒரு தவறான கணக்கீட்டின் காரணமாக மிகப் பெரிய சம்பவங்கள் நடக்கலாம். ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் ஒரு சூழ்நிலையில் ட்ரோன்களின் பயன்பாடு இன்னொரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதத்தின் நிகழ்வுகள், அந்த பகுதியின் தற்போதைய நிலையின் பலவீனத்தன்மைக்கான ஒரு நினைவுறுத்தலாக இருக்கிறது. கூடவே அதை மாற்ற விரும்பும் சீனாவின் ஆர்வத்துக்கான நினைவுறுத்தலாகவும் இருக்கிறது. உடனடியான எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் சீன படையெடுப்பு அதன் கம்யூனிச தலைமைக்கு பெரிய ஆபத்தாக முடியலாம் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் திட்டமிடப்படாத ஒரு மோதல் நடப்பது சாத்தியமில்லை என்று இனியும் சொல்ல முடியாது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தைவான் பிரச்னையில் தலையிட வேண்டாம் என்கிற முடிவை எடுத்திருக்கின்றன. ஒரே சீனக் கொள்கையும் சீனாவுடனான சிக்கலான உறவின் தேவையும்தான் இதற்கு காரணம். ஆனால் இந்த சிக்கலின் பொருட்டு தங்களது பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பிட வேண்டிய சூழல் விரைவிலேயே வரலாம். சர்வதேச குறைகடத்தி (semiconductor) தொழிலில் தைவான் ஒரு மையப்புள்ளியாக இருப்பது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம். “நீரிணையின் ராணுவமயமாதல்” பற்றிய இந்தியாவின் சமீபத்திய கருத்து அதன் அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை குறிக்கவில்லை என்றாலும், தைவானுடன் தொடர்பு வைத்துக் கொள்ள இந்தியா இப்போது அதிக ஆர்வம் காட்டுவது போல தெரிகிறது. குறிப்பாக குறைகடத்தி உற்பத்தியில் ஒரு மாற்று தளத்தை இந்தியாவில் அமைப்பது போன்ற விஷயங்களில் பொருளாதாரம் சார்ந்த தொடர்பு வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறது. சரியான திசை நோக்கிய நடவடிக்கைகள் என்றாலும் இவற்றை எப்போதோ எடுத்திருக்க வேண்டும்.
This editorial in Tamil has been translated from the English which can be read here.