மும்பையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கும் ஒரு சிறப்பு நீதிமன்றம், அமலாக்க இயக்குனரகத்தின் செயல்பாடுகள் பற்றி மிகக் கடுமையான பார்வைகளை வைத்திருக்கிறது. சிவ சேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத்துக்கு பிணை வழங்கியபோது, அவரது கைது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டதோடு, வழக்கு “எந்த காரணமும் இன்றி” பதிவு செய்யப்பட்டது என்றும் சொன்னது. சிறப்பு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே வழங்கிய பிணை மற்றும் தெரிவித்த கருத்துகளின் காரணமாக உடனடியாக அமலாக்க இயக்குனரகம் பாம்பாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் தேஷ்பாண்டே அளித்த நீண்ட தீர்ப்பில், மத்திய அரசு முகமைகளைக் கொண்டு அரசியல் எதிரிகள் பழி வாங்கப்படுகின்றனர் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளை நிறுவுவதற்கான போதிய தரவுகள் இருந்தன. சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கில் தவறான செயல்களை செய்தது வேறொரு பிரிவினர் என்பதை நீதிபதி கண்டறிந்திருக்கிறார். ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை. திரு. ராவுத் மற்றும் அவரது சகா பிரவீன் ராவுத் (அவருக்கும் பிணை வழங்கப்பட்டிருக்கிறது) ஆகிய இருவரையும் பொருத்தவரையில், அது அடிப்படையில் ஒரு சிவில் பிரச்னை. பரிவர்த்தனைகளில் இருந்த பணம் “குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்” என்பதை நிறுவுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்றது நீதிமன்றம். காரணம் அடிப்படையில் திட்டமிடப்பட்ட குற்றம் எதுவும் இல்லை. மும்பையின் பத்ரா சாவ்லில் மறு வளர்ச்சி திட்டம் தொடர்பான அடுக்குமாடிக் குடியிருப்புகளை மோசடியாக விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் 1,039 கோடி ரூபாய் என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. திரு. பிரவீன் ராவுத், சஞ்சய் ராவுத்துக்கு பதிலியாக செயல்பட்டவர் என்றும் சஞ்சய் ராவுத்தும் அவரது மனைவியும் இந்த வருமானத்திலிருந்து 95 கோடி ரூபாயை பயன்படுத்தி சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் அது மேலும் குற்றம் சாட்டியது.
நீதிமன்றத்தின் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, மத்திய அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுவது அப்பட்டமான உண்மை போல தோன்றுகிறது. மத்திய அரசின் புலனாய்வு முகமைகளால் பா.ஜ.க அல்லாத தலைவர்கள் சீரற்ற முறையில் இலக்கு வைத்து தாக்கப்படுகிறார்கள். வழக்கறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்றால், வெகுஜன அரசியல் எதிரிகள் அவ்வபோது வருமான வரி சோதனைகள் மற்றும் பண மோசடி வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் பண மோசடி வழக்குகள் பதிவாவதன் காரணம், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ள குற்றங்களுக்காக காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டாலும் அதை பண மோசடி வழக்காக பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கைது செய்வதில் அமலாக்கத்துறை விரைவாக செயல்படுவதாகவும், விசாரணையில் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் கேலியாக பதிவு செய்திருக்கிறார் நீதிபதி. அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரிவு 19 (கைது செய்யும் அதிகாரம்) மற்றும் பிரிவு 45 (பிணை வழங்க கடுமையான விதிகள்) இருப்பது மட்டுமே தெரிகிறது போலிருக்கிறது. விசாரணையும் நடத்த வேண்டும் என்பது தெரியவில்லை. பண மோசடி குற்றங்கள் மிகக் குறைந்த தண்டனை விகிதத்தையே கொண்டிருப்பதையும் நீதிபதியின் கருத்துகள் வலியுறுத்தின. சாதகமில்லாத தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடுகளை அவசர கதியில் பதிவு செய்வதை விட, அரசியல் நோக்கங்களுக்காக தாங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறோம் என்பது பற்றி மத்திய அரசு முகமைகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.