பிரேசிலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பது, கடந்த நான்கு ஆண்டுகளாக ஜெய்ர் போல்சனாரோவின் ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்ய அந்நாட்டுக்கு ஒரு வாய்ப்பு. தவிர மீண்டும் நாட்டை, சமத்துவம் சார்ந்த வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லவும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். லூலா என்று அழைக்கப்படும் இடதுசாரி தொழிலாளர் கட்சியின் தலைவர், பெரும் செல்வாக்குடனும், செயல்திறன் சார்ந்த சாதனையாளராகவும் வருகிறார். 2003 முதல் 2011 வரையிலான அவரது முந்தைய இரண்டு ஆட்சிகளின் போதும், சந்தையுடனான நட்புக் கொள்கைகளையும் அதிக சமூக செலவினங்களையும் இணைத்த கலவையான பொருளாதார அணுகுமுறையை பின்பற்றினார். இது அதிக பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தியதுடன், 25 மில்லியன் பிரேசிலிய மக்களை வறுமையிலிருந்து மீட்டது. ஆனால் அதை தொடர்ந்து வந்தவை சிக்கலான வருடங்களே. அவருக்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்த முன்னாள் புரட்சியாளரான டில்மா ரூசெப், விரோத போக்கு கொண்ட நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரேசிலின் மிருகத்தனமான ராணுவ சர்வாதிகாரத்தின் ஆதரவாளரான அதி தீவிர வலதுசாரி, தீவிர தேசியவாத அதிபரான திரு. போல்சனாரோவின் கீழ் பொருளதார வளர்ச்சி காணாமல் போனது, பசி அதிகரித்ததோடு சுகாதார முறை சீர்குலைந்தது. கோவிட் - 19 பற்றிய அச்சுறுத்தலை அதிபர் குறைத்து மதிப்பிட்டதால், அந்நோய் காரணமாக குறைந்தது 7,00,000 பேர் இறந்தார்கள். நெருக்கடிக்கான எதிர்வினையை அவரது நிர்வாகம் மோசமாக கையாண்டது. திரு.போல்சனாரோவின் கொள்கைகள் காரணமாக, அமேசான் மழைக் காடுகள் விரைவாக அழிந்து போயின.
ஊழல் குற்றசாட்டுகளில் தண்டிக்கப்பட்டிருந்த லூலா, போல்சனரோவின் ஆட்சிக் காலத்தில், உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பின்னால் பிரேசிலின் தாராளவாத, தொழிலாளர் வர்க்கமும் முற்போக்காளர்களும் திரண்டார்கள். 2011ல் 83 சதவீத அங்கீகார மதிப்பீட்டுடன் பதவியிலிருந்து விலகிய லூலா, எதிர்கட்சிகளை அணிதிரட்டி அதிபர் தேர்தலில் குறுகிய ஆனால் நம்பகமான ஒரு வெற்றியை ஈட்டினார். ஞாயிறு அன்று பதவியேற்ற பின்னர், ஒற்றுமை மற்றும் புனரமைப்பில் தனது கவனம் இருக்கும் என்று லூலா சொன்னார். தென்னமெரிக்காவில் இப்போது இடதுசாரிகளுக்கு ஆதரவான ஒரு அலை வீசிக்கொண்டிருப்பது, அவருக்கு சாதகமான ஒன்று. வெனிசுலா மற்றும் சிலி போன்ற நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களிடத்தில் அவரது செயல் திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கும். பிரேசிலின் செலவின வரம்பை நிறுத்தி வைப்பதற்கான அரசியலைமைப்பு திருத்தத்தை ஏற்கனவே லூலா கொண்டு வந்திருக்கிறார். கூடுதலாக 28 பில்லியன் டாலர் செலவிட அவர் திட்டமிட்டிருக்கிறார். இருப்பினும் பாதை சீராக இருக்காது. திரு. போல்சனாரோ அதிகாரப்பூர்வமாக பதவியை ஒப்படைக்க மறுத்து லூலாவின் பதவியேற்புக்கு முன்பு பிரேசிலை விட்டு வெளியேறினார். அவரது ஆதரவாளர்கள் வன்முறை நிறைந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி “அரசை இழுத்து மூடுமாறு” ராணுவத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். சமூக பதற்றங்கள் தொடர்ந்து அதிகமாக இருந்தால், பொருளாதார சவால்கள் இன்னும் பெரிதாக இருக்கும். 2000களின் முற்பகுதியில் லூலாவின் சமூக நலன் சார்ந்த செலவுகளுக்கு நிதியளித்து உதவிய சரக்குப் பெருக்கம் இன்று இல்லை. அரசு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அவர் மீட்டெடுக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். பிளவுப்பட்டிருக்கும் நாட்டை ஒன்றிணைக்க வேண்டும். லூலா எச்சரிக்கையுடனேயே முன்னகர வேண்டும். பிரபுத்துவ ஆதிக்கம் செலுத்தும் பிரேசிலின் அரசியலில் இருக்கும் வெவ்வேறான அணிகளை எச்சரிக்கையுடன் அணுகுவதோடு வளம் சார்ந்த கட்டமைப்புகளில் படிப்படியான ஆனால் கணிசமான மாற்றங்களை கொண்டு வருவதை அவர் இலக்காக கொள்ள வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.