ஏற்ற இறக்கங்களைக் கொண்ட இந்தியாவின் டி20 அதிர்ஷ்டம் தற்போது இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக எகிறியிருக்கிறது. ஞாயிறு அன்று ஹைதராபாத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி, தோல்வி நிலையிலிருந்த ரோஹித் ஷர்மாவின் வீரர்களுக்கு 2-1 என்ற கணக்கில் தொடர் வெற்றியை ஈட்டித் தந்தது. இந்த குறிப்பிட்ட தொடரில் இந்திய அணி எதிர்கொண்ட மோசமான பின்னணியோடு பொருத்திப் பார்த்தால், இது மகிழ்வூட்டும் ஒரு விளைவே. ஆஸ்திரேலியாவை இந்தியாவில் எதிர்கொள்வதற்கு முன்பு, ஆசிய கோப்பைக்கான இறுதி போட்டிக்கு செல்லும் தகுதியை இழந்த நிலையில், ரோஹித் ஷர்மாவின் அணி பல பிரச்னைகளை கையாள வேண்டியிருந்தது. ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஏற்பட்ட முழுங்கால் வலியின் பொருட்டு ஆட முடியாமல் போனது, நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி - 20 உலக கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கும் ஒரு ஆண்டில், கிரிக்கெட்டின் இந்த மிக சுருக்கமான வடிவத்தில் தனிப்பட்ட அளவிலும் அணி என்கிற அளவிலும் எதிர்கொள்ள நேர்ந்த ஒவ்வொரு தடையும் பல கத்திகளை கூர் தீட்டியதோடு சதி கோட்பாடுகளுக்கும் வழிவகுத்தன. எம்.எஸ் தோனியும் அவரது அணியும் முதல் ஐசிசி டி - 20 உலக கோப்பையை வென்ற 15வது ஆண்டு என்பதால் அந்த மிளிரும் சாதனையும் அதற்கு பிறகான வறட்சியும் இந்திய அணியினர் மீதான அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது. 2007ல் வெற்றிபெற்ற அணியிலிருந்த வீரர்களில் கேப்டன் ரோஹித்தும் தினேஷ் கார்த்திக்கும் மட்டுமே தற்போதைய அணியில் இருக்கிறார்கள். இது அவர்களுடைய நீடித்த தன்மைக்கான சாட்சியாக மட்டுமல்லாமல் கடந்த பத்தாண்டில் இந்திய அணி கண்ட மாற்றங்களுக்கான ஒரு குறியீடாகவும் இருக்கிறது. கூடவே மொஹாலியில் ஆரோன் ஃபின்ச்சின் அணியினருக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் டி - 20 போட்டியில் இந்திய அணி தோற்றபோது, கவலை ரேகைகள் மேலும் விரிந்தன.
இந்தியாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, குறிப்பாக அதன் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் போராடினார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியாவும் சூர்யகுமார் யாதவும் சேர்ந்துபெற்ற ரன்கள், இருள் மேகங்கள் சூழ நாக்பூருக்கு கேரவன் செல்வதற்கு முன்னர் கொஞ்சம் நம்பிக்கையை அளித்தன. ஒரு வழியாக வானிலை சற்று மேம்பட்ட போது, ஒவ்வொரு அணியினருக்கும் எட்டு ஓவர் என்கிற போட்டி நடத்தப்பட்டு, இந்த மிகச்சிறிய போட்டியில், இந்தியா சமநிலையை அடைந்தது. பேட்டிங் அணிவகுப்பில் முதலில் இருந்த ரோஹித்தும் நிறைவுசெய்பவருமான கார்த்திக்கும் தங்களது ஆற்றல்களையெல்லாம் திரட்டி, பரபரப்பான ஒரு எண்ணிக்கையை துரத்தித் தாண்டினார்கள். இளைஞர்களின் ஆட்டம் என்று சொல்லப்படும் ஒரு விளையாட்டில் மூத்தவர்களே நின்று வெற்றியை ஈட்டினார்கள். பிறகு ஹைதராபாதில் நடந்த போட்டியின் உச்சகட்டத்தில் இந்தியா தனது சொந்த நாட்டில் நற்பெயரைத் தக்க வைத்துக்கொண்டது. துரத்துதலை கட்டுக்குள் கொண்டு வந்து ஆஸ்திரேலியர்களையும் அடக்கியது. விராட் கோலியின் தற்போதைய ஆட்ட வடிவம், யாதவின் தன்னம்பிக்கை மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேலின் நிலைத்தன்மை ஆகியவை இணைந்து ஒரு நல்ல வெற்றியை பெற்றுத் தந்தது. ஜடேஜா போட்டியில் இல்லாதது ஒரு இழப்பு என்றாலும், ஜஸ்பிரித் பும்ராஹ்வின் மறுவருகை கூர்ந்து கவனிக்கப்பட்டது. அவர் தொடங்கிய தாக்குதல்கள், வழமையான கூர்மையோடு இல்லைதான். ஆனால் டி - 20 உலக கோப்பையை நோக்கி முன்னேறுகையில் அவரது ஆட்டம் மேம்பட்டு ஆக வேண்டும். வெற்றியை துரத்திக்கொண்டிருக்கும்போது கேட்சுகளை கைவிடுவது இந்தியாவின் இன்னொரு களங்கமாக இருக்கிறது. ஃபின்ச்சின் அணி கிளம்பிகொண்டிருந்த போது, மூன்று டி - 20 போட்டிகளுக்காகவும் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்காகவும் வந்திறங்கியது தென்னாப்பிரிக்க அணி. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற அழுத்தம் இந்தியாவின் மீதிருக்கும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆட்டங்களுக்கான தயாரிப்பு தொடர்கிறது.
This editorial has been translated from English, which can be read here.