கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமையன்று கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், ஜூலை 2017ல் தொடங்கப்பட்ட இந்த வரிவிதிப்பு முறையின் சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை அமைப்பது குறித்து பரந்த, ஒருமித்த கருத்தை எட்டியது. மாநிலங்களுடனான ஆலோசனையில் சில நுணுக்கமான மாற்றங்களைச் செய்த பிறகு, அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ள நிதி மசோதாவில் தீர்ப்பாயங்களை அமைக்க அவையின் ஆதரவை பெறமுடியும் என்று நிதி அமைச்சகம் நம்புகிறது. ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகளால் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது நம்பிக்கையை எற்படுத்துகிறது. ஆனால், ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற உறுதிமொழியின் இந்த முக்கிய அம்சத்தை தாமதப்படுத்துவதற்கான காரணத்தை புரிந்துகொள்வது கடினம். சில வரிவிகித மாற்றங்கள், வேறு சில மாற்றங்களுடன் சேர்த்து சிறிய அளவில் வரி செலுத்துபவர்கள் தாமதமாக கணக்கைத் தாக்கல் செய்தால் அபராதக் கட்டணங்கள் குறைக்கப்படுவது போன்றவற்றுக்கு கவுன்சிலின் ஒப்புதல் கிடைத்தது. குட்கா போன்ற வரி ஏய்ப்பு செய்யக்கூடிய துறைகளுக்கு ஒரு புதிய அமைப்பை உருவாக்குவது போன்ற வேறு சில நகர்வுகளின் தாக்கங்கள் அவற்றின் அறிவிப்புகளில் உள்ள நுணுக்கமான அம்சங்களைப் பொறுத்தது. ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்கள் மீதான ஜிஎஸ்டியின் மறுஆய்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தை கையாளும் அமைச்சரவைக் குழுவின் தலைவருக்கு சட்டமன்றத் தேர்தல் பணிகள் இருந்தன என்ற காரணத்தைக்கூறி, இந்த முறை அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்த வருடம் ஒன்பது சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், பல பிரச்னைகளை விரைவாகத் தீர்க்க வேண்டிய கவுன்சிலின் திறனுக்கு இது உகந்ததில்லை. அதைவிட கவலைக்குரிய விஷயம் இருக்கிறது. பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலான ஜிஎஸ்டி விகித கட்டமைப்பின்
முறைப்படுத்துதலை நிறுத்தி வைப்பதும் அதில் முக்கியமான உள்ளீடுகள் விடுப்பட்டிருப்பதும்தான் அது. தலைகீழ் வரி கட்டமைப்புகள் போன்ற ஜிஎஸ்டி வரிகளில் உள்ள முரண்பாடுகளுக்கு ஒரு தீர்வை முன்மொழியவும், குறைந்த அடுக்குகளுடன் திருத்தப்பட்ட விகிதங்களை முன்மொழியவும் 2021ம் ஆண்டின் பிற்பகுதியில் அமைச்சர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஜிஎஸ்டி இன்னும் போதுமான வருவாயை வழங்கவில்லை என்று கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டது. 2017க்கும் 2021க்கும் இடையில் சில பொருட்களின் விகிதக் குறைப்பு காரணமாக “தெரிந்தோ தெரியாமலோ” மொத்த வரி விகிதம் முதலில் திட்டமிடப்பட்ட 15.5 சதவீதம் வருவாய்-நடுநிலை விகிதத்தைவிட குறைந்து, 12 சதவீதத்துக்கு அருகில் உள்ளது. அமைச்சர்கள் குழு எடுத்துச் சொன்ன சில முரண்பாடுகள் கடந்த ஜூன் மாதத்தில் சரி செய்யப்பட்ட நிலையில், பணவீக்கம் அதிகரித்துள்ளதால் விகிதங்களை மாற்றுவது ஒத்தி வைக்கப்படும் என்று மத்திய அரசின் சமிக்ஞைகள் சொல்கின்றன. காரணம், எந்தவொரு திருத்தமும் சில பொருட்களுக்கு கூடுதலான வரிக்கு இட்டுச் செல்லும். விகித சீர்திருத்தங்கள் பற்றிய அறிக்கை இன்னும் வரவில்லை. பணவீக்கம் தொடர்ந்து தலைவலியாக இருக்கிறது. தவிர, 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் காலமும் தொடங்கிவிடுவதால், இதுபோன்ற வலுவற்ற காரணங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படும். கணக்குகளைத் தாக்கல் செய்வதை கடுமையாக அமல்படுத்தியதாலும் விலைவாசி உயர்வாலும் சராசரி ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்திருக்கிறது. ஒருவேளை அதனால்கூட இந்த வரிச் சிக்கலை சரி செய்ய வேண்டிய அவசரத் தேவை நீர்த்துப் போயிருக்கலாம். ஆனால், சிமெண்ட் போன்ற அத்தியாவசியமான ஒரு பொருளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டியை செலுத்தும் வரி செலுத்துவோருக்கு - அது ஒருவரின் தலைக்கு மேல் கூரை கட்ட பயன்படுத்தப்பட்டாலும் அல்லது அதிவேக நெடுஞ்சாலையை கட்ட பயன்படுத்தப்பட்டாலும் - உண்மையிலேயே ஒரு நல்ல, எளிமையான வரி முறையைப் பெற குறைந்தது 2025 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - February 21, 2023 11:40 am IST