135 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்திய ஒற்றுமை பேரணி ஸ்ரீநகரில் மகாத்மாவின் நினைவு நாளில் நிறைவடைந்தது. அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வில் பல எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பேரணி, தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய அதன் வடிவம், இப்படி முடிந்திருப்பது, பிரச்னையில் இருக்கும் காங்கிரசின் எதிர்காலத்தை மீட்டெடுக்க விரும்பும் ஒரு தலைவரின் கடினமான பயணத்திற்கு பொருத்தமான முடிவே. “வேற்றுமையில் ஒற்றுமை“ என்ற கோஷத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவுக்கான கட்சியின் பார்வைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை வலியுறுத்துவதே இந்த பேரணியின் நோக்கம். இதனால் கட்சிக்கு கிடைத்திருக்கும் நன்மை உடனடியாக தேர்தல் வெற்றிக்கு இட்டுச் செல்லாமல் போகலாம். அதன் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருவதும் தலைவர்கள் தொடர்ந்து பாஜகவுக்கு செல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மக்களுடனும் சிவில் சமூகத்துடனும் காங்கிரஸ் தலைவர் உரையாடும் காட்சிகளும், பேரணியின் ஏற்பாடுகளுமே கூட இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் அரசியல் இயந்திரத்துக்கு ஒரு புதிய ஆற்றலை ஊட்டியது. பேரணியின் செய்திகள் சாதாரணமானதாக இருந்திருக்கலாம், கோஷங்கள் கலவையானதாக இருந்திருக்கலாம். ஆனால் அது கட்சியின் சில தனித்துவமான மதிப்பீடுகளை பெருமளவில் தெளிவாக வெளிப்படுத்தியது. ஸ்ரீநகரில் நடந்தவை, இதை இன்னும் தெளிவாகக் காட்டியது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மிக மோதல் நிறைந்த ஒரு பகுதி. 2019ல் அதன் சிறப்பு அந்தஸ்து திடீரென நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேங்களாக பிரிக்கப்பட்ட பின் அது தெளிவில்லாத வகையில் யூனியன் பிரதேசமாகவே தொடர்கிறது. அடுத்தடுத்த வருடங்களில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை அதிகரித்தது; வெகுஜன அரசியல் பலவீனமடைந்தது (ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அது பிரிவினைவாத நீரோட்டத்தோடு பிணைக்கப்பட்டது). தவிர, ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக தகவல்தொடர்பு சார்ந்த ஊரடங்குகளும் பிற நடவடிக்கைகளும் திணிக்கப்பட்டன. பல மாத கொந்தளிப்புக்குப் பிறகு காஷ்மீர் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பியிருக்கிறது. அங்கு சுற்றுலா மீண்டும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியிருக்கிறது. ஆனால் திடீர் மாற்றங்களால் ஏற்பட்ட அமைதியின்மை பள்ளத்தாக்கிலும் அதன் அப்பாலும் நீடித்து வருகிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகளும் அங்கு நிலவும் கொந்தளிப்புக்கான குறியீடாக இருக்கின்றன. ஸ்ரீநகரில் நடந்த கொடியேற்று நிகழ்வில் மக்கள் ஜனநாயகக் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் கலந்து கொண்டது, பள்ளத்தாக்கில் உள்ள பிரதான கட்சிகளுக்கு பேரணியின் மீதான ஈர்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கான சான்று. ஒரு வகையில், காஷ்மீர் அரசியலுக்கும் தேசிய எதிர்கட்சிக்கும் இடையில் ஒற்றுமையை உண்டாக்குவதற்கான அசலான முயற்சியாகவும் அது இருக்கிறது. ஆனாலும் காங்கிரசுக்கு புத்துயிர் அளிப்பதற்கான அசலான நடவடிக்கைகளைப் பொருத்தவரையில், இன்னும் பல தொலைவுகளை கடக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக வட இந்தியாவில் அமைப்புரீதியான பொருத்தப்பாட்டை கட்டமைக்க கட்சி இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.