ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று ஜார்கண்டில் உள்ள தியோகர் விமான நிலையத்திலிருந்து சூரியன் மறையும் நேரத்தில் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிஷ்கந்த் துபே, மனோஜ் திவாரி மற்றும் அவர்களோடு பயணித்தவர்கள் தங்களது விமானம் கிளம்ப, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகத்திலிருந்து வலுக்கட்டாயமாக “புறப்பாடு அனுமதியை” பெற்ற சம்பவம், வான் பாதுகாப்பு வழிமுறைகளுடன் உரசலை ஏற்படுத்தும் ஒன்று. தன்னை தொடர்ச்சியாக துன்புறுத்திய ஒருவரால் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை பார்க்க வந்த அரசியல்வாதிகள் தங்களுடைய பிரத்யேகமான இரட்டை எஞ்சின் வர்த்தக அதி வேக விமானத்தில் தில்லிக்கு திரும்புவதற்காக மாலை 5.25 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்திருக்கிறார்கள். விமானம் புறப்பட வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டகத்திடமிருந்து கட்டாய அனுமதி பெற்றார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில், விமான பாதுகாப்பு பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தியோகரின் துணை ஆணையர் ஆகியோர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த ஜார்கண்ட் காவல்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்கள். “உயிருக்கு அல்லது சொந்த பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும்” பிரிவு உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருக்கிறது. பதிலுக்கு திரு. துபே, துணை ஆணையர் மீதும் ஜார்கண்ட் காவல்துறையினர் மீதும் தில்லி காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். விசித்திரமாக, இந்த முதல் தகவல் அறிக்கையின் படி அவர்கள் மீது பிரிவு 124 (ஏ)வின் (தேச துரோகம்) கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் வான் பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வது போல இந்த பிரச்னையை ஒதுக்கி வைத்து விட்டு, அடிப்படை பிரச்னையான விமானப் பாதுகாப்பு மீது உறுதியான கவனம் செலுத்த வேண்டும்.
வானூர்தி தகவல் பதிப்பகத்தில் உள்ள தரவுகளின் படி தியோகர் இப்போதும் பார்வை விமான பாதுகாப்பு விதிகளின் கீழ் வரும் விமான நிலையமாக இருக்கிறது. அதனால் இங்கு இரவு செயல்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை. பார்வை பாதுகாப்பு விதிகள் வழி – 1.2யின் கீழ் வரும் புள்ளி 3ன் படி, “பார்வை விமான பாதுகாப்பு விதிகளின் கீழ் வரும் விமானங்கள் சூரிய அஸ்தமனத்திற்கு 20 நிமிடங்களுக்கு பின்னரும் சூரிய உதயத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்னரும் இயங்க கூடாது” என்றும் “வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் விலக்களிக்கும் உள்ளூர் விமானங்கள் மட்டும் இயங்கலாம்” என்றும் விதி இருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள நியதி, பார்வை விமான பாதுகாப்பு விதிகளின் கீழ் புறப்படும் விமானங்களுக்கு ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் அதை கையாள்வதற்கு வான் வெளி காலியாக இருக்க வேண்டும் என்பதுதான். தியோகரில் சூரிய அஸ்தமனம் மாலை 6.03 மணி என்பதையும் விமானம் புறப்பட்ட நேரம் மாலை 6.17 மணி என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற ஒரு விமான நிலையத்தில் ஒரு பறவையின் மோதல் அல்லது எஞ்சின் செயலிழந்து போவது போன்ற அவசர சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால், விமான பணியாளர்கள் சந்திக்க கூடிய கடுமையான விளைவுகளை பற்றி விலாவரியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்தி நேரத்தில் பறவைகளின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். தவிர ஜார்கண்ட் நிறைய பறவைகளை கொண்ட ஒரு இடம். திசை மாறிச் செல்ல ஏதுவாக அந்த பகுதியில் உள்ள விமான நிலையங்களும் அருகாமையில் இல்லை. கூடுதலாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அமைத்திருக்கும் குழுவின் அங்கமாக இருக்கும் ஒரு அரசியல்வாதி பாதுகாப்பு எல்லைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவில் குறிப்பாக சின்ன விமான நிலையங்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை கையாள்பவர்கள் மற்றும் அதிகாரிகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் இந்த விவகாரம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. சர்வதேச விமான போக்குவரத்து துறை அமைப்பின் ஒரு உறுப்பினராக, அதன் கடுமையான விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய இந்தியா எல்லா வழிகாட்டுதல்களும் சரியாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். தவிர, முழுமையான நியாயமான ஒரு விசாரணையும் அதன் அடிப்படையில் விமான போக்குவரத்துத் துறையின் செயல் இயக்குனர் மற்றும் விமான போக்குவரத்துத் அமைச்சரவை தண்டனைகள் விதிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசியல் இதிலிருந்து முற்றாக விலக்கப்பட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.