இந்த முறை இந்திய-சீன எல்லையின் கிழக்குப் பகுதியில் உள்ள தவாங்கில் நடந்த சீன ராணுவத்தின் இன்னொரு அத்துமீறல், அசலான கட்டுப்பாட்டு கோட்டின் அருகே நிலைமை எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. எல்லையின் மேற்குப் பிரிவில் உள்ள லடாக்கில் சீன ராணுவமான மக்கள் விடுதலை ராணுவத்தின் அத்துமீறல்களோடு ஏப்ரல் 2020ல் இந்த நெருக்கடி தொடங்கியது. இப்போது இது அருணாச்சலப் பிரதேசம் வரை விரிவடைந்திருப்பது போலத் தெரிகிறது. இந்திய ராணுவம், சீன ராணுவத்தை அதன் நிலைகளுக்கு திரும்ப கட்டாயப்படுத்தியதாக நாடாளுமன்றத்தில் சொன்னார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து டிசம்பர் 13ம் தேதி அமைச்சர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பற்றி டிசம்பர் 12ஆம் தேதியன்று தி இந்து முதன்முதலில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. ராணுவ அறிக்கை ஒன்று மோதல் நடந்ததை உறுதிப்படுத்தியது. சீன எல்லை பிரச்னையில் நரேந்திர மோதி அரசின் தொடர்ச்சியான மெத்தனப் போக்கை விமர்சித்த எதிர்கட்சியினர், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகு வெளிநடப்பு செய்தார்கள். அருணாச்சல பிரதேசத்தில் இப்போது பிரச்னை வெடித்திருக்கும் நிலையில், லடாக்கில் நிலைமை இன்னும் சரி செய்யப்படாமலேயே இருக்கிறது. தற்காலிக இடைப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டிருக்கும் ஐந்து பின்வாங்கப்பட்ட பகுதிகளின் எந்தவொரு இடத்திலும் இந்தியா இன்னும் ரோந்து பணியை மீண்டும் தொடங்கவில்லை. அதே நேரம் அசலான எல்லைக் கோட்டின் இந்திய பகுதியில் உள்ள இரண்டு மோதல் ஏற்படும் வாய்ப்புள்ள புள்ளிகளான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் சீன ராணுவம் தொடர்ந்து இருக்கிறது. ஒரு விஷயம் தெளிவு. முன்பு பரஸ்பரம் சர்ச்சைக்குரிய பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களை இரு தரப்பும் எப்படி கையாள்கிறார்கள் என்பதை ஒருதலைபட்சமாக மாற்ற சீன ராணுவம் முடிவு செய்துவிட்டது. அதற்கான காரணங்களும் தெளிவில்லை. முப்பது ஆண்டுகள் நீடித்த ஒரு
அமைதிக்குப் பிறகு இப்போது பிரச்னைகுரியதாகியிருக்கும் ஒரு எல்லைப் பகுதியை நிர்வகிப்பதும், இந்த புதிய சூழலில் சீனாவுடன் ஒரு தற்காலிக உடன்படிக்கையை உருவாக்குவதும் இப்போது இந்தியாவின் முன்னுள்ள சவால். இது ராணுவம் மற்றும் அரசியல் என இருவகைப்பட்ட சவால். இதை எதிர்கொள்வதற்கு வெளிப்படைத்தன்மை முதலில் தேவை. எப்படிப் பார்க்கப்படுகிறோம் என்பது போன்ற பரிசீலனைகளால் வழிநடத்தப்பட முடியாத அளவு முக்கியமான பிரச்னை என்பதால் எதிர்கட்சிகளையும் பொது மக்களையும் கூட இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. பிரதமர் மோதியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் சமீபத்தில் நடந்த இரண்டு பல்தரப்பு உச்சி மாநாடுகளில் முறையான சந்திப்பை தவிர்த்த நிலையில், சீனாவுடனான உயர்மட்ட அரசியல் தொடர்பு தொடர்ந்து முடக்கப்படுவதற்கு இந்த பரிசீலனைகளும் ஒரு காரணி போல தோன்றுகிறது. ஜி-20 உச்சி மாநாட்டில் நலம் விசாரிப்புகள் தாண்டி இரு தலைவர்களும் மூன்று வருடங்களாக பேசவில்லை என்பது குறிப்பாக எல்லைகளில் ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்றுகொள்ள இயலாத ஒரு சூழல். பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினால் குறைந்தபட்சம் இந்தியாவுக்கு தனது கவலைகளை மிக உயர்ந்த மட்டத்தில் பதிவு செய்யும் ஒரு வாய்ப்பாகவாவது இருக்கும். எல்லைகளில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி பொது மக்களுக்கும் அதிகம் தெரியவில்லை. 2020ல் 20 இந்திய ராணுவ வீரர்களின் மரணத்துக்கு காரணமான விஷயங்களும் மக்களுக்குத் தெரியவில்லை. மௌனமாக இருந்தால் நெருக்கடி தானாகத் தீரும் என அரசு நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால், சமீபத்தில் நடந்திருக்கும் மோதல் நெருக்கடி முடிவுக்கு வரப்போவதில்லை என்பதற்கான எச்சரிக்கை.
This editorial has been translated from English, which can be read here.