நீதியுமல்ல, புத்திசாலித்தனமுமல்ல

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களை கண்மூடித்தனமாக குறிவைக்கக்கூடாது.

December 28, 2023 11:28 am | Updated 11:28 am IST

ஜம்மு-காஷ்மீர் (ஜே & கே) போன்ற மோதல் ஏற்படக்கூடிய எல்லைப்புற மாகாணத்தில், பாதுகாப்புப் படைகள் பயங்கரவாதத்தை மட்டுமல்லாமல், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் துல்லியமாகவும் நியாயமாகவும் ஈடுபட வேண்டிய சூழல் இருக்கிறது. பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களை உள்ளடக்கிய பிர் பஞ்சால் பள்ளத்தாக்கில், காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் இந்த வருடம் 28 வீரர்கள் மரணமடைந்தார்கள். டிசம்பர் 21ஆம் தேதியன்று பூஞ்ச்-ரஜோரி பகுதியில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதும், பாதுகாப்புப் படையினரின் சித்திரவதை காரணமாக மேலும் ஐந்து பொதுமக்கள் மோசமாக காயமடைந்ததும், அங்குள்ள பயங்கரவாத எதிர்ப்பு வியூகங்கள் மீதான கடுமையான ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொதுமக்களை குறிவைத்து பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் இதுபோன்ற கொடூரமான நடவடிக்கைகள் இரண்டு விஷயங்களில் நிச்சயமாக சிக்கலானவை. முதலாவதாக ஐந்து வருடங்களுக்கு மேலாக மாகாண தேர்தல்கள் நடத்தப்படாத யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆட்சி பற்றிய எதிர்மறை உணர்வை இது அதிகரிக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் மிகவும் அமைதியான ஒரு பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான அடி இது. சொல்லப்போனால், பதினைந்தாண்டுகள் நீடித்த ஒப்பீட்டளவிலான அமைதிக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிர் பஞ்சால் பிராந்தியம் பயங்கரவாதத்தை எதிர்கொண்டுவருகிறது. கடந்த வாரம் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சமீப காலமாக தீவிரவாதத்தை ஆதரிக்காத பிராந்தியத்தில் வசிப்பவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சமச்சீரற்ற போரில் போராளிகளின் நோக்கங்களில் ஒன்றாக பொதுமக்களுக்கு எதிராக உரிமை மீறல்களைச் செய்ய படைகளைத் தூண்டுவதும், தங்கள் சொந்த ஆதரவு தளத்தை விரிவுப்படுத்த அவர்களிடையே நிலவிய குறைகளையும் கோபத்தையும் பயன்படுத்துவதுமாக இருந்தது. பாதுகாப்புப் படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கு மிக வசதியாக மாறிவிடுகிறது. இரண்டாவதாக, பலவந்தத்தையோ வன்முறையையோ சட்டப்பூர்வமாக்குவதும் அரசு அதைப் பயன்படுத்துவதும், நடவடிக்கைகளின் நியாயத்தைப் பொறுத்தது. நியாயமான காரணமின்றி பொதுமக்களைக் குறிவைத்து வன்முறையைப் பயன்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவது மக்களின் பார்வையில் அந்த நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுமக்கள் இறந்ததைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஜம்மு - காஷ்மீர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தவிர, ராணுவம் மூன்று மூத்த அதிகாரிகளை பதவிநீக்கம் செய்து விசாரணைக்கு உறுதியளித்திருக்கிறது. இந்த இரு அமைப்புகளும் இப்போது விரைவாகவும் உறுதியான முறையிலும் நீதியை வழங்க வேண்டும். “போலி காவல்” மரணங்கள் மற்றும் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அமைப்புகளின் சித்திரவதைகள் அதிகரித்திருக்கும் நிலையில் பயங்கரவாதம் அதிகரிப்பதற்கு வழிவகுத்திருக்கிறது. தவிர, பொதுமக்களின் கோபம் காரணமாக பெரிய சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் பொதுமக்களின் கோபத்தை சமாளிக்க தடையில்லாத பாதுகாப்பை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பயன்படுத்த முயற்சித்திருக்கிறது. இந்த அணுகுமுறை சரியாக செயல்படவில்லை என்பதை எதிர் தாக்குதல் என்கிற பெயரில் மீண்டும் மீண்டும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.