இறுக்கமான சமநிலை 

புவிசார் அரசியல் பிரச்னைகளில் தன் சமநிலைத் தன்மையில் எந்தவொரு மாற்றத்தையும் இந்தியா கொண்டுவருவது சாத்தியமில்லை.

March 22, 2023 11:24 am | Updated 11:24 am IST

2006ஆம் ஆண்டிலிருந்து “வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக” இந்திய பிரதமர் ஜப்பானுக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கும் பயணம் செய்து வந்திருக்கிறார்கள். இருதரப்பு உறவின் போக்கை வழிநடத்தும் ஒரு சந்திப்பாக இது இருந்து வந்திருக்கிறது. ஆனால் இந்த வாரம் தில்லிக்கு ஒரு அவசரமான “அதிகாரப்பூர்வ பயணத்தில்” வந்திருந்தார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா. அவரது நோக்கத்தின் மையமாக இருந்தது இந்திய-ஜப்பான் சிறப்பு வியூக மற்றும் சர்வதேச கூட்டாண்மை இல்லை. அவரது கவனம் இரண்டு விஷயங்களில் இருந்தது: ஒன்று, யுக்ரைன் மோதலில் இருந்து உருவாகும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த ஜி -7 மற்றும் ஜி -20 செயல்திட்டங்களை ஒருங்கிணைப்பது. இரண்டாவதாக, கடன் சிக்கல்களை தவிர்ப்பது, உள்கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் கடல், வான்வழி பாதுகாப்பை அதிகரிப்பதன் பொருட்டு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கிற்கான (எஃப்ஓஐபி) ஜப்பானின் 75 பில்லியன் டாலர் திட்டத்தை வெளியிடுவதுதான். ஜப்பான் மேற்குலக நாடுகளுடன் இணைந்திருக்கும் நிலையில் ரஷ்யா மற்றும் சீனா முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள முக்கியமாக இந்தியாவை உள்ளடக்கிய சர்வதேச கருத்தொற்றுமையின் தேவையை திரு. கிஷிடா வலியுறுத்துவதைப் போல தோன்றுகிறது. பிரதமர் நரேந்திர மோதியுடனான பேச்சுவார்த்தையின்போது ஜி-20 தலைமைப் பொறுப்பில் இருக்கிறது என்கிற முறையில் இந்தியா யுக்ரைன் பிரச்னையை தீர்ப்பதற்கும் “ரஷ்ய ஆக்ரமிப்பை” விமர்சிப்பதற்குமான ஜி-7 திட்டங்களுடன் இணைந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது என்பதை வெளிப்படையாக அவர் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் நேரடியாக சீனாவை குறிப்பிடவில்லை என்றாலும், அண்டைப் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகள் ஜப்பானை கவலையடைய செய்திருக்கின்றன என்பது தெளிவு. அவரது எஃப்ஓஐபி திட்டத்தில் இந்தியா ஒரு “தவிர்க்க முடியாத கூட்டாளியாக” இடம் பெற்றிருக்கிறது. அவரது பயணம் மேற்கொண்ட காலகட்டமும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சீன அதிபர் ஷி ஜின் பிங் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டார். செவ்வாய் அன்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை திரு. ஷி சந்தித்து தங்களது வலிமையை பறைசாற்றியபோது, திரு. கிஷிடா கீவுக்கு பறந்துசென்று யுக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்தார். போர் தொடங்கிய பிறகு கிஷிடா மேற்கொண்ட முதல் பயணம் இது.

இருதரப்பு மற்றும் பலதரப்பு (குவாட்) ஒத்துழைப்பு என்கிற முறையில் ஜப்பானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, திரு. கிஷிடா வரவேற்புக்குரிய ஒரு விருந்தினர்தான். மிகவும் தாமதத்துக்குள்ளாகியிருக்கும் “புல்லட் ரயில்” திட்டத்திற்காக ஜப்பான் தரும் கடன் மற்றும் வங்கதேசத்தை இந்தியாவின் வடகிழக்குடன் இணைக்கும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்கள் உள்பட இரு நாடுகளுக்கு இடையிலும் பல கூட்டு செயல்பாடுகள் இருக்கின்றன. ஜி-20 மற்றும் ஜி-7ன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இரு நாடுகளும் தமது முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலமாகவும் இரு உச்சி மாநடுகளிலும் சர்வதேச தெற்கு நியாயமான பங்கை பெறுவதை உறுதிசெய்வதன் மூலமாகவும் பெறும் ஆதாயங்கள் நிறைய. யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதும் அண்டைப் பகுதிகளில் சீனாவின் ஆக்ரமிப்பை தடுத்து நிறுத்துவதும்கூட இருதரப்புக்கும் பொதுவான குறிக்கோள்கள்தான். ஆனால், இரு தரப்பும் இந்த பிரச்னைகளில் ஒரே மாதிரியான நிலைப்பாடுகளை கொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதும் தவறு. இந்தியாவைப் போலல்லாமல் ஜப்பான், அமெரிக்க கூட்டணியில் இருக்கிறது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதிப்பதில் ஜப்பான் இணைந்திருக்கிறது. ஆனால் இந்தியா இணைய மறுத்துவிட்டது. அசலான எல்லைக் கட்டுபாடு கோட்டுக்கு அருகில் சீன நடவடிக்கைகளைப் பற்றிய கவலைகளை இந்தியா வெளிப்படையாக பேசினாலும் தென் சீனா, தைவான் நீரிணை போன்ற பகுதிகளில் சீன நடவடிக்கையை நேரடியாக விமர்சிப்பதில் தயக்கம் இருக்கிறது. மே மாதத்தில் ஜி-7 கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள ஹிரோஷிமா செல்லவிருக்கிறார் திரு. மோதி. பின்னர் திரு. ஷி மற்றும் திரு. புதினை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்கு வரவேற்கவிருக்கிறார். இந்த நிலையில் புவிசார் அரசியல் பிரச்னைகளில் ஒரு இறுக்கமான சமநிலையை கடைபிடித்து வரும் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும் என்பது மிகையான விஷயம். நெருங்கிய கூட்டாளியான ஜப்பான் சொன்னால் கூட நடக்காது.

This editorial has been translated from English, which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.