தேசிய புள்ளிவிவர அலுவலம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளின்படி, அக்டோபர்-டிசம்பர் 2022 காலாண்டில் வளர்ச்சியில் கூடுதலான சரிவு இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது, இந்த மந்தநிலைக்கு பெரும்பாலும் முந்தைய காலகட்ட புள்ளிவிவரங்களில் மேல்நோக்கிய திருத்தமே காரணம் என அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் (Chief Economic Adviser - சிஇஏ) கூறியிருக்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய காலாண்டிருந்து 4.4 சதவீதமே வளர்ந்திருக்கிறது. இது முந்தைய மூன்று மாதங்களில் பதிவான 6.3 சதவீதம் என்ற வேகத்திலிருந்து குறிப்பிடத்தக்க சரிவு. தவிர அக்டோபர்-டிசம்பர் 2021 காலகட்டத்தில் பதிவான 5.2 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும்கூட குறைவுதான். மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (ஜி.வி.ஏ) வளர்ச்சி இரண்டாவது காலாண்டின் 5.5 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. உற்பத்திக்கான மதிப்பீடுகள் ஜூலை-செப்டம்பர் சுருக்கத்தை (மைனஸ் 3.6 சதவீதம்) விட குறுகியதாக இருந்தாலும், தொடர்ச்சியான பின்னடைவு இருப்பதை (மைனஸ் 1.1 சதவீதம்) சுட்டிக்காட்டின. வரிசையாக பார்த்தாலும் உற்பத்தி குறைந்துவருவது தெரிகிறது (மைனஸ் 2.4 சதவீதம்). ஐந்து சேவைத் துறைகளில் முக்கியமாகக் கருதப்படும் மூன்று துறைகளான வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நிதி, கட்டுமான தொழில், மற்றும் தொழில்முறை சேவை பிரிவுகள் ஆகிய துறைகளில் உள்ள வளர்ச்சியும் இரண்டாவது காலாண்டில் இருந்ததைவிட கடுமையாகக் குறைந்துள்ளன. இதன் பொருள் என்னவென்றால், ஆள் தொடர்புகள் சம்பந்தப்பட்ட துறைகள் கோவிட்-19 தொற்று நோயால் மோசமாக பாதிக்கப்பட்டு, தேவைகள் தேங்கியிருந்தன. கோவிட் காலத்திற்குப் பிறகு, அந்தத் தேவைகள் தீர்க்கப்பட்டு, உற்பத்தி குறையத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். செலவினங்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் சதவீத பங்கு முந்தைய காலாண்டில் 63 சதவீதத்திலிருந்து 61.6 சதவீதமாகக் குறைந்ததால், முக்கிய தனியார் இறுதி நுகர்வு செலவினம் சிறிது வேகத்தை இழந்திருக்கிறது. நுகர்வு செலவு பொதுவாக உச்சத்தில் இருக்கும் பாரம்பரிய விழாக்கால காலாண்டில் இது நடந்தது என்பது கவலைக்குரிய ஒன்று. சில்லறை பணவீக்கத்தின் இடைவிடாத உயர்வு நுகர்வுத் திறனைக் குறைப்பதையே இது காட்டுகிறது. ஆனால் வருடாந்திர வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் முந்தைய ஆண்டின் உற்பத்தி வெளியீட்டுத் தரவு திருத்தப்படாமல் இருந்திருந்தால், என்.எஸ்.ஓ மதிப்பீடுகள் காட்டும் 1.1 சதவீத சுருக்கத்திற்கு பதிலாக, இந்தத் துறை உண்மையில் 3.8 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் என்று சி.இ.ஏ சொல்லியிருக்கிறார். இதேபோல், திருத்தத்திற்கு முந்தைய தரவு பயன்படுத்தப்பட்டிருந்தால், சமீபத்திய என்.எஸ்.ஓ வெளியீடு சுட்டிக்காட்டும் 2.1 சதவீத வளர்ச்சிக்குப் பதிலாக, தனியார் நுகர்வு செலவினங்கள் மூன்றாம் காலாண்டு வளர்ச்சியை சுமார் 6 சதவீதமாக பதிவு செய்திருக்கும் என்று அவர் உறுதிபட சொல்லியிருக்கிறார். அப்படியே அவர் சொல்வதைப்போல நுகர்வு செலவின வளர்ச்சி 6 சதவீதமாக இருந்தாலும், இரண்டாவது காலாண்டில் இருந்த 8.8 சதவீத வளர்ச்சியைவிட அது குறைவாக இருக்கும் நிலையில், வளர்ச்சி வேகம் குறைந்துவருவதையே இது காட்டுகிறது. புதிய திறனில் வணிகங்களின் முதலீட்டை பிரதிபலிக்கும் மொத்த நிலையான மூலதன உருவாக்கம், தொடர்ந்து சுருங்கியது. ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 34.2 சதவீதத்திலிருந்து 31.8 சதவீதமாக சரிந்தது. சர்வதேச தேவை கணிசமாக பலவீனமடைந்து 2023ம் ஆண்டிலும் மீள வாய்ப்பில்லை என்கிற நிலையில், இன்னும் சாதகமற்ற வானிலை நிலைமைகளால் ஏற்படும் அபாயங்கள் வரவிருக்கும் மாதங்களில் விவசாய உற்பத்தியில் நிச்சயமற்ற தன்மையை எழுப்புகின்றன. இந்த நிலையில், உள்நாட்டு தேவையை ஊக்கப்படுத்த கொள்கையை வகுப்பவர்கள் அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். மத்திய வங்கியின் அதிகாரிகள் அவ்வபோது சுட்டிக்காட்டுவதைப்போல தரவுகளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சரியான முடிவுகளுக்கு வருவதை இன்னும் கடினமாக்கியிருக்கின்றன என்பது கொள்கை ரீதியான தீர்வுகளை வகுப்பதில் உள்ள சவால்களை குறிப்பிட்டு காட்டுகின்றன.
This editorial has been translated from English, which can be read here.