பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுப்பது “மன்னிக்க முடியாத குற்றம்” என்று ஈரானின் உச்சகட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியிருப்பது, இஸ்லாமிய குடியரசு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான சிறுமிகள் விஷ தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்திகளை உறுதிப்படுத்துகிறது. ஈரானிய குர்திஷ் பெண் மஹ்சா அமினி, ஒழுக்கக் காவல்துறையின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பெண்களின் போராட்டங்களுக்கு மத்தியில், புனித நகரமான கோமில் இதுபோன்ற முதல் சம்பவம் நவம்பரில் பதிவானது. அதன் பின்னர், ஈரானின் மொத்தமுள்ள 31 மாகாணங்களில் குறைந்தது 25 மாகாணங்களில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் விஷத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் சொல்லப்பட்டன. முதலாவது, பெண்கள் பள்ளிக்குச் செல்வதை எதிர்க்கும் மதத் தீவிரவாதிகளின் செயலாக இது இருக்கலாம் என்றும், இரண்டாவதாக உளவியல் காரணிகள் சில சந்தர்ப்பங்களிலாவது காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றன. ரசாயன விஷம் பயன்படுத்தப்பட்டிருப்பதன் சாத்தியங்களையும்கூட அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருவதைதான் திரு. கமேனியின் கருத்து தெரிவிக்கிறது. இந்த செய்திகள் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. இதனடிப்படையிலேயேகூட உச்சத் தலைவர் இந்த அறிக்கையை வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆட்சி சும்மா விடாது என்று திரு. கமேனி திங்களன்று கூறினார். ஆனால் அதே நாளில், விஷம் குறித்து செய்தி வெளியிட்ட கோம் பத்திரிகையாளர் அலி பூர்தபதாபாய் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானைப் போலல்லாமல், பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்த வரலாறு எல்லாம் ஈரானில் இல்லை. 1979ம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஆட்சி பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்த அதேநேரம் அவர்களின் கல்வியையும் பணியில் சேருவதையும்
ஊக்குவித்தது. உலக வங்கியின் கூற்றுப்படி, 1976ஆம் ஆண்டில் 26 சதவீதமாக இருந்த பெண்களின் கல்வியறிவு 2021ல் 85 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக, ஈரானின் பல்கலைக்கழகங்களில் ஆண்களைவிட பெண்கள் தொடர்ந்து அதிகமாக இருக்கிறார்கள். இந்த வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, புரட்சியின் உச்சத்தில்கூட குறிவைக்கப்படாத பள்ளி மாணவிகள் இப்போது குறிவைக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பள்ளி மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் அதிக சுதந்திரம் கோரி வரும் நிலையில், பள்ளி மாணவிகள் குறிவைக்கப்படுவது தற்செயலானது அல்ல. ஆனால் ஆட்சியின் எதிர்வினை மிக மோசமாக இருக்கிறது. ஆனால், பொருளாதார, சமூக நெருக்கடிகள் தொடர்ந்தால், ஏற்கனவே எதிர்ப்பு அலைகளைக் கண்டு வரும் ஒரு ஆட்சியை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்பதை முல்லாக்களும் உணர வேண்டும். நாட்டின் இளைஞர்களுக்கும் அதன் வயதான புரட்சியாளர்களுக்கும் இடையில் வளர்ந்து வரும் இடைவெளியில், விஷத் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும். இதற்கு காரணமானவர்களை இந்த ஆட்சி, நீதியின் முன் நிறுத்த வேண்டும். ஆனால் ஈரானின் அமைப்புக்குள் சீர்திருத்தங்கள் இல்லாததும், அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான விரிசல்கள் விரிவடைவதும் மிகப் பெரிய பிரச்சினை. எதிர்ப்பு அலை, அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக இருப்பதைப் போலவே ஆட்சிக்கும் ஒரு சவால். முல்லாக்கள் பிந்தைய பிரச்னையை ஏற்றுக் கொண்டு முந்தைய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.