இந்தியாவிலிருந்து தொல்லுயிரியல் ஆய்வாளர்கள் புதிரான கண்டுபிடிப்புகளை எப்போதாவதுதான் செய்கிறார்கள், ஆனால் அதை உறுதியாக செய்கிறார்கள். ஜனவரியில், ஒரு குழு டைட்டானோசோரஸின் 256 புதைபடிவ முட்டைகளைக் கொண்ட 92 டைனோசர் கூடு கட்டும் இடங்களைக் கண்டறிந்தது. 100-66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதன் வகைகளில் மிகப்பெரியது இது. அப்போது இந்தியா யூரேசிய நிலப்பரப்பில் இணையாமல் தனியாக ஒரு கண்டமாக இருந்தது. இதேபோல்தான், குஜராத்தின் கட்ச் பாலைவனங்களும் மகாராஷ்டிராவின் தக்காணப் பகுதிகளும் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் பரந்துப்பட்ட புவியியல் மற்றும் வரலாறு ஆகியவற்றை வடிவமைத்த சக்திகளுக்கு சாட்சியாக உள்ளன. தொல்லியலில் இருந்து கலாச்சார வரலாறு மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்களைப் பாதுகாப்பதற்கான தேடலைப் போலல்லாமல், பாறை அமைப்புகள், வண்டல் மற்றும் புதைபடிவங்கள் போன்ற இந்த இயற்கையான ‘புவி-வரலாற்றை’ பாதுகாக்கவும் தொடர்பு கொள்ளவுமான முயற்சி மிகவும் குறுகியதாகவே இருக்கிறது. இந்த புறக்கணிப்பு, வரலாற்றை மக்கள் மனதில் இருந்து அழிக்கவும், இயற்கை வளத்தை அழிக்கவும், அபகரிக்கவும் வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பல பத்தாண்டுகளாகவே எச்சரித்து வருகிறார்கள். அந்த வகையில், சுரங்க அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட வரைவு புவி-பாரம்பரிய தளங்கள் மற்றும் புவி-நினைவுச்சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, 2022, ஒரு பாதுகாப்பு செயல்முறையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவின் விதிகள், சுரங்க அமைச்சரவையின் துணை அமைப்பான இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) இயக்குநர் ஜெனரலுக்கு, எந்த ஒரு தளங்களையும் ‘புவி-பாரம்பரிய’ மதிப்பு கொண்டவை என்று அறிவிக்கவும், தனியார் கைகளில் இருக்கும் நினைவுச்சின்னங்களை (புதைபடிவங்கள், பாறைகள்) கையகப்படுத்தவும், அத்தகைய இடத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவுக்கு கட்டுமானங்களைத் தடுக்கவும் அதிகாரம் இருக்கிறது. தவிர ஜிஎஸ்ஐயின் இயக்குனர் ஜெனரலின் உத்தரவுகளை மீறுதல், நாசவேலைகளில் ஈடுபடுதல், சேதப்படுத்துசல் போன்றவற்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் தேவைப்பட்டால் சிறை தண்டனை விதிக்கவும் அதிகாரம் இருக்கிறது. இது மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஜிஎஸ்ஐக்கு வெளியே பணிபுரியும் வல்லுநர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது. ஜிஎஸ்ஐக்கு மட்டுமே இத்தகைய முழுமையான அதிகாரங்களை வழங்குவது தொல்லியல் ஆராய்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். தளங்களை ‘புவிசார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்று அறிவிப்பது குறித்தும், கலைப்பொருட்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாப்பது என்பது குறித்தும் இன்னும் ஜனநாயக ரீதியாக முடிவு செய்யக்கூடிய தேசிய புவி மரபுரிமை ஆணையம் போன்ற ஒரு அமைப்பு வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. மசோதா நாடாளுமன்றத்தில் இப்போதைக்கு தாக்கல் செய்யப்படாது என்ற நிலையில் அரசு பல அம்சங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆட்சி நிர்வாகம் குறித்த அணுகுமுறையில் சாதக-பாதகங்கள் இருந்தாலும், சட்டம் என்பது ஒரு வேலியாக செயல்படும் அதே வேளையில் சுயாதீன விசாரணையை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக மாறிவிடக் கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். நிலங்களுககும் இந்தியாவின் பொருளாதாரத் தேவைகளுக்கும் இருக்கும் முன்னுரிமை காரணமாக, பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகளில் மோதல் இருக்கும். ஆனால் எந்தவொரு சட்டமும் இந்த சக்திகளை சமநிலைப்படுத்தவும் ஒருமித்த கருத்தை கொண்டு வரவும் முயற்சிக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.