சட்டத்தின் கடுமையும் அரசியல் சோதனைகளும் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பீடித்திருக்கிறது. 2019ன் தேர்தல் காலத்தில், “எப்படி எல்லா திருடர்களின் பெயர்களிலும் மோதி இருக்கிறது?” என்று அவர் கிண்டலாக சொன்ன விஷயம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறானது என்று அறிவிக்கப்பட்டது. குற்றவியல் அவதூறுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான இரண்டு வருட சிறை தண்டனை திரு. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு, மக்களவையின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் பதவி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். இந்த குற்றசாட்டு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதும் தண்டனையும் சட்டரீதியான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த கருத்து, குறிப்பாக யாரையாவது இழிவுப்படுத்தும் வகையிலோ ‘மோதி’ என்கிற குடும்பப் பெயரை கொண்ட மக்களை இழிவுப்படுத்தும் வகையிலோ இருக்கிறதா? இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499ல் பயன்படுத்தப்பட்டுள்ள ‘நபர்களின் தொகுப்பு’ என்ற சொற்றொடர், அவதூறாகப் பேசப்படக்கூடியவர்களைக் குறிக்கும் வகையில், அடையாளம் காணக்கூடிய வகுப்பு அல்லது குழுவாக இருக்க வேண்டும் என்றும், அவதூறுக்காக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கும் குறிப்பிட்ட நபர், குற்றம் சாட்டப்பட்ட அவதூறு கருத்தால் தனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தீங்கு அல்லது காயத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் சட்டம் சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட குறிப்பிடப்படும் மூன்று தனிநபர்களை மட்டுமல்லாமல் அந்த குடும்பப் பெயரைக் கொண்ட அனைவரையுமே அது பாதிக்கிறது என்கிற வாதத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். தவிர, புகாரளித்திருக்கும் பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோதி தனிப்பட்ட முறையிலோ அல்லது ‘மோதி’ குழுவைச் சேர்ந்த உறுப்பினராகவோ இந்த அவதூறு என்று சொல்லப்படும் கருத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை நிறுவியிருக்கிறாரா என்பதும் தெளிவில்லை. அதிகபட்ச தண்டனையும் பிரச்னைக்குரியது. குற்றத்தின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்க ஏதுவாக தங்களது அறிவுடமையை விசாரணை நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும்
என்பதால் சட்டங்கள் அதிகப்பட்ச சிறைத் தண்டனைகளை பரிந்துரைக்கின்றன. தீர்மானிக்கப்படாத ஒரு குழுவை தாக்கும் ஒரு பொதுவான கருத்தை அவதூறாக கருதலாமா என்பதே கேள்விக்குறி. அப்படியே அவதூறு என்றாலும் அதிகபட்ச தண்டனையை கோருமளவுக்கு மோசமான அவதூறா என்பது இன்னொரு கேள்வி. மேல்முறையீடு இந்த தீர்ப்பின் சரித்தன்மையை முடிவு செய்யும். ஆனால் மக்களவையிலிருந்து திரு. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும், அவரை தேர்தலில் போட்டியிடாமல் தடை செய்யும் இந்த தீர்ப்புக்கு அரசியல் ரீதியாக அவர் தர வேண்டிய விலைக்கு நீடித்த தாக்கம் இருக்கும். இதை தடுப்பதற்கு தண்டனையை இடை நிறுத்துவதற்கான உத்தரவை மட்டுமல்லாமல் தண்டனை மீதே தடையை பெற வேண்டும். அரசியலின் குற்றத்தன்மை, ஊழல், வெறுப்புப் பேச்சுகள் பற்றியெல்லாம் வருத்தம் கொள்ளும் ஒரு நாட்டில் குற்றவியல் அவதூறு ஒரு முக்கியமான தலைவரின் அரசியல் வாழ்வை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டிருப்பது நகைமுரண்தான். எந்தவொரு நவீன ஜனநாயகமும் அவதூறை குற்றச்செயலாக கருதக்கூடாது. அதிகாரத்தை நோக்கி கேள்வியெழுப்புவதை கடுமையான குற்றமாக கருதிய ஒரு காலத்தின் மரபு அது. சமகாலத்தில், குற்றவியல் அவதூறு முக்கியமாக அரசு ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் முறைகேடுகள் மீதான விமர்சனங்களை அடக்குவதற்கான கருவியாகவே செயல்படுகிறது. பேச்சு சுதந்திரம் மீது அதற்கு இருக்கக் கூடிய சில்லிட வைக்கும் விளைவு பற்றிய போதிய கவனம் இல்லாமல் 2016ல் உச்ச நீதிமன்றம் குற்றவியல் அவதூறு செல்லும் என்று சொன்னது. அதோடு அரசியல் எதிர்ப்பையும் எதிர்ப்புணர்வையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். திரு. காந்திக்கு எதிரான தீர்ப்பு பற்றி அதிருப்தி தெரிவிக்கும் எதிர்கட்சிகள் தங்களது செயல்திட்டத்தில் கிரிமினல் அவதூறை ஒழிப்பதையும் சேர்க்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - March 25, 2023 11:12 am IST