பாகிஸ்தான் அரசுடன் 10 நாட்கள் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு பிப்ரவரி 9ஆம் தேதி அன்று இஸ்லாமாபாதிலிருந்து கிளம்பியது சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு. தற்போதுள்ள 7 பில்லியன் டாலர் கடன் திட்டத்தை மறுஆய்வு செய்வது குறித்தோ அல்லது நெருக்கடியில் இருக்கும் பொருளாதாரத்திற்கு உதவ புதிய தவணை கடன்கள் குறித்தோ எந்தவொரு முடிவையும் அது சொல்லவில்லை. இது ஒரு வழக்கமான நடைமுறை என்று சொன்ன ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, சர்வதேச நாணய நிதியத்தின் உள் செயல்முறை முடிந்ததும் கடனை நாடு எதிர்பார்க்கலாம் என்றும் சொன்னது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அரசு புதிய வரிகளை விதிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், மானியங்களைக் குறைப்பதாகவும், எரிபொருள் மீதான வரிகளை அதிகரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது அரசின் விரக்தி நிலையையே காட்டுகிறது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. நகர்ப்புறங்களில்கூட மின்தடை தொடர்கிறது, வருடாந்திர பணவீக்கம் ஜனவரியில் 27.5 சதவீதமாக இருந்தது (1975க்குப் பிந்தைய உட்சபட்ச உயர்வு இது). பாகிஸ்தானிய ரூபாய் ஒரு டாலருக்கு கிட்டத்தட்ட 270ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு 3 பில்லியன் டாலருக்கும் கீழே சரிந்திருக்கிறது. பிப்ரவரி 2014லிருந்து மிகக் குறைந்த கையிருப்பு இதுதான். கடன்களைத் திருப்பி அளிப்பதில் நெருக்கடி உண்டாக்கும் நிலையை இது ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரழிவான வெள்ளத்தின் தாக்கம் பொருளாதாரத்தின் மீது இப்போதும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பலர் போதுமான உணவின்றி இருக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியம் தன்னை இன்னொரு முறை மீட்டெடுக்கும் என்கிற கடைசி நம்பிக்கையில் நாடு ஏன் இருக்கிறது என்பதை பொருளாதாரத்தின் இந்த மோசமான நிலை காட்டுகிறது. நிதியம் அப்படி செய்தால், 2000வது ஆண்டு தொடங்கி ஆறாவது முறையாக இது நடக்கிறது. அப்படிச்செய்தால்தான், வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் பிற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய தொகையை அளிக்கவும் பாகிஸ்தானால் முடியும். இது தவிர, மேற்காசியாவில் உள்ள பாரம்பரியமான நட்பு நாடுகள் மற்றும் சீனாவின் ஆதரவும் பாகிஸ்தானுக்குக் கிடைக்கலாம்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் வெள்ளத்தின் தாக்கம் ஆகியவை ஒருபுறமிருக்க, பொருளாதார பிரச்சினைகளின் சுழற்சித் தன்மை மற்றும் நெருக்கடிகளின்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை நாடு மீண்டும் மீண்டும் நம்பியிருப்பது ஆகியவை நிர்வாகத்தின் தோல்வியை சுட்டிக்காட்டுகின்றன. இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பது, ஏற்றுமதியில் போட்டியிடும் திறன் குறைவாக இருப்பது மற்றும் மோசமான நிதி மேலாண்மை ஆகியவை அதிர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரத்தில் தொடர்ச்சியான நெருக்கடிக்கான காரணங்களாக இருக்கலாம். ராணுவம் மேலாதிக்கம் இருக்கும் ஒரு நாட்டில் ஜனநாயக அரசுகள் தாங்கள் விரும்பியபடி செய்யக்கூடிய அதிகாரம் இல்லாத நிலையின் மறைமுக விளைவு என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் செயல்முறையில் தலையிட விரும்பும் ராணுவத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நம்பிக்கை எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல செய்தி இல்லை. பொருளாதாரத்தில் உள்ள நீண்டகால கட்டமைப்பு சார்ந்த பலவீனங்களை சரி செய்து, இந்தியா போன்ற அண்டை நாடுகளுடான உறவை சீர் செய்வதில் நிர்வாகம் கவனம் செலுத்தாவிட்டால், பொருளாதார பிரச்னைகளின் சுழற்சித்தன்மை நீடிக்கவே செய்யும். ஆனால் அதெல்லாம் நடக்க ராணுவ நிர்வாகம் பின் வாங்க வேண்டும். இடைக்காலத்தில் அது நடப்பது போல தெரியவில்லை.
This editorial has been translated from English, which can be read here.