வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தற்போதைய இந்திய பயணமும் பிரதமர் நரேந்திர மோதியுடனான அவரது சந்திப்பும் நல்ல விளைவுகளுக்கும் ஏழு ஒப்பந்தங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது. 26 வருடங்களில் முதல் நீர் பங்கீட்டு ஒப்பந்தத்துக்கான முடிவு, தடையில்லா வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடக்கம் மற்றும் குறிப்பாக ரயில்துறையில் கட்டமைப்பு திட்டங்கள் போன்றவை இந்த ஒப்பந்தங்களில் அடங்கும். 12 வருடங்களுக்கு பின்னர் நடந்த முதல் கூட்டு நதிநீர் ஆணையத்தின் கூட்டத்துக்கு பின்னான குஷியாராவைப் பற்றிய நீர் பங்கீட்டு ஒப்பந்தம் நீர் மேலாண்மைப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரக் கூடிய நம்பிக்கையளிக்கும் ஒரு சமிக்ஞையாக இருக்கிறது. எல்லைகளை பகிரும் 54 நதிகளை உள்ளடக்கிய தீவிரமான பிரச்னை அது. இடைப்பட்ட காலத்தில் ஃபெனி நதியிலிருந்து 1.82 கண அடி நீரை எடுத்துக் கொள்வது பற்றிய சிறிய ஒப்பந்தம் இருந்தாலும், 1996 கங்கை நதி நீர் ஒப்பந்தத்துக்கு பிறகு முதன்முறையாக அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களை குஷியாரா ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்க மத்திய அரசால் முடிந்திருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்கத்தால் தாமதப்பட்டுக்கொண்டிருக்கும் 2011ன் டீஸ்டா ஒப்பந்தத்தில் திருமிகு.ஹசீனா பல முறை சுட்டிக் காட்டியது போல இப்போதும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. டீஸ்டா ஒப்பந்தத்தை சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும் என்றால் நிச்சயமாக மோதி அரசு இன்னும் கூடுதலான முயற்சிகளை எடுக்க வேண்டும் மற்றும் மமதா பானர்ஜீ தலைமையிலான மாநில அரசு இன்னும் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். மூன்று முறை ஆட்சியில் இருந்த பிறகு அடுத்த வருட இறுதியில் தேர்தலை நடத்தும் நிலையில் இருக்கும் திருமிகு ஹசீனாவுக்கு காலவரிசை மிக முக்கியம். வங்கதேசத்தின் அன்னிய நேரடி முதலீட்டில் இப்போது ஒரு சிறு பங்கை வகிக்கும் இந்திய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில்தான் அவரது பெரும்பாலான கவனம் இருந்தது. குறிப்பாக இந்திய தொழில் நிறுவனங்களுக்கான பிரத்யேகமான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மொங்லாவிலும் மிர்சாராயிலும் வருவதை திருமிகு. ஹசீனா குறிப்பிட்டு சுட்டிக் காட்டினார்.
2021இல் வங்கதேசத்துக்கு திரு மோதி மேற்கொண்ட பயணம், அதற்கு முன்பு 2017இல் திருமிகு.ஹசீனா இங்கு மேற்கொண்ட அலுவல்ரீதியான பயணம் ஆகியவற்றை தொடர்ந்து அவருடைய தற்போதைய பயணம் இந்திய-வங்கதேச உறவுகளை இன்னும் உறுதியான தளத்துக்கு நகர்த்தியிருக்கிறது. வணிகம் மற்றும் தொடர்புகளிலும் மற்றும் மக்களுடனான மக்கள் உறவுகளிலும் இன்னும் கூடுதல் நெருக்கமான செயல்பாடுகள் இதனால் சாத்தியப்படும். இந்த சாதகமான அம்சங்களின் தொடக்கம் இன்னும் பின்னோக்கிப் போகின்றன. திரு.மிகு ஹசீனா 2009இல் பதவியேற்றுக் கொண்டவுடன் தீவிரவாத பயிற்சி முகாம்களை அவர் தன்னிச்சையாக மூடிய முடிவுகள், 20 தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று சந்தேகப்படப்படுபவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்று அவர் செயல்பட்டார். எதிரியாக கருதப்பட்ட நாட்டுடனான உறவு மாறிய நிலையில் இது போன்ற செயல்களிலிருந்து லாபம் பெற்ற இந்தியாதான் இப்போது
வங்கதேசத்தின் கவலைகள் பற்றி நுண்ணுணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ரொஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றிய ஆளுங்கட்சி தலைவர்களின் கருத்துகள், சான்றுகள் இல்லாத அகதிகளை கரையான்கள் என்பது போன்ற கருத்துகள், குடிமக்கள் திருத்தச் சட்டம், சமீபகாலங்களில் அகண்ட பாரதம் என்கிற பெயரில் வங்கதேசத்தை இணைத்துக் கொள்வது என்கிற பேச்சுகள் இதையெல்லாம் மனதில் கொண்டு இன்னும் நுண்ணுணர்வோடு இந்தியா செயல்பட வேண்டும். தெற்காசியாவில் எல்லை கடந்த பிரச்னைகள் அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்படும் நிலையில், இந்தியாவும் வங்கதேசமும் எதிர்கால இணக்கமான உறவின் மீது கவனமாக இருப்பது முக்கியம். 1971இன் மனநிலை என்று சொல்லப்படும் கடந்த கால கூட்டாண்மையின் அடிப்படையில் அது இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.