பணவீக்கத்துடனான இந்தியாவின் போராட்டத்தைப் பற்றி இந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாகப் பேசினார். பணவீக்கம் என்பது இனிமேலும் மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டிய பிரச்சனையில்லை என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது வளர்ச்சியை நிலைநிறுத்துவது, செல்வம் எல்லோரிடமும் பகிர்ந்தளிக்கப்படுவது ஆகிய பெரிய விஷயங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களில் பணவீக்கத்தை நிர்வகிக்கக்கூடிய அளவுக்குக் கொண்டுவந்திருப்பதன் மூலம், அரசு பணவீக்கத்தை எதிர்கொள்வதில் தனது திறமையைக் காட்டியிருப்பதாகச் சொன்னார்.
இந்த ஆண்டு ஏப்ரலில் நுகர்வோர் பணவீக்க விகிதம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவீதத்தை தொட்ட நிலையில், தற்போது ஓரளவுக்கு விலைவாசிகள் ஓரளவுக்குக் குறைந்திருக்கின்றன. ரிசர்வ் வங்கியும் அரசும் எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் காரணமாக, பணவீக்க அழுத்தம் ஒரு மட்டத்தோடு நிறுத்தப்படும் என நிதி அமைச்சகம் எதிர்பார்க்கிறது. ஜூலை மாதத்தில் பணவீக்கம் விகிதம் 6.71 சதவீதமாக இருந்தது நிம்மதியளித்தது என்றாலும், 6 சதவீதம் என்ற கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மேல்தான் இன்னமும் இருக்கிறது. இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் விலைவாசி உயர்வு என்பது அதிகமாகவே இருக்கிறது. அதாவது, அப்பகுதிகளில் பணவீக்கமானது 2022-23ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாத சராசரி 7.6 சதவீதமாகவும் 2022 முழுக்க 7 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் நுகர்வோர் பணவீக்கத்தைப் பொறுத்தவரை, முதல் நான்கு மாத சராசரி 7.14 சதவீதமாகவும் ஆண்டு சராசரி 6.79 சதவீதமாகவும் இருந்தது.
ஒவ்வொரு மாதமும் வெளிவரக்கூடிய புள்ளிவவரங்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், தொடர்ச்சியாக பணவீக்க விகிதம் அதிகமாக இருப்பது குடும்பங்கள் செலவுசெய்வதைக் கடுமையாக பாதிக்கும். தொழில்துறைக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் தேவை மற்றும் வளர்ச்சி தொடர்பான தூண்டுதல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். பருவமழை ஏறுக்குமாறாக பெய்திருப்பது கிராமப்புறங்களில் தேவையை இன்னும் குறைக்கும். நெல் மற்றும் தானியங்களின் விதைப்பு குறையும் என்ற அச்சத்தால் கடந்த சில வாரங்களில் அவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன.
பணவீக்கம் இந்தியாவில் உச்சத்தைத் தொட்டுவிட்டது என ரிசர்வ் வங்கி கருதுகிறது. பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், லாபம் கிடைக்குமா என்பதில் நிலையில்லாத தன்மை நீடிப்பதால் விலைவாசி கட்டுக்குள்ளேயே இருக்கும் என்பதில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மிச்செல் பத்ராவுக்கு சந்தேகம் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடுத்த வாரம் வெளியாகிவிருக்கிறது. இது பணவீக்கத்தை மறுபடியும் 7 சதவீதம் அளவுக்கு எடுத்துச் செல்லக்கூடும் என சிலர் கருதுகின்றனர். காரணம், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் கணக்கீட்டில் 45 சதவீதம் உணவுப் பொருட்களின் விலையை வைத்துத்தான் முடிவுசெய்யப்படும் நிலையில், அவற்றின் விலை உயர்ந்திருப்பதுதான். ஜூலை மாதத்தில், இந்த விலை ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவாக இருந்தது. இப்போது அவை மீண்டும் அதிகரித்திருக்கின்றன.
மோசமான காலகட்டம் கடந்துவிட்டது என நம்பிக்கையோடு இருக்கலாம் என்றாலும், அலட்சியமாக இருந்துவிட முடியாது. வட்டி விகிதத்தை உயர்த்துவது போன்ற நிதிக் கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடாது என வியாழக்கிழமையன்று திருமிகு நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். வளர்ச்சி தடையின்றி இருக்க வேண்டுமென்பதால் உலகின் வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டு செயல்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கியை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட போக்குவரத்து, நிதி, வர்த்தகக் கொள்கை முடிவுகள், அரிசிக்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி உள்ளிட்ட பலமுனை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவது சரிதான்.
மாநிலங்களின் பணவீக்க விகிதத்தில் வேறுபாடுகள் இருப்பதையும் சில மாநிலங்களில் பணவீக்க விகிதம் அதிகமாக இருப்பதற்கு பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்காமல் இருப்பதுதான் காரணம் என்று சொல்வதும் அரசியலாக இருக்கலாம். ஆனால், விலைவாசி உயர்வைக் க்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கை குறித்து அரசு விரைந்து செயல்பட வேண்டும். கட்டுப்பாட்டில் உள்ள பணவீக்க விகிதம் நீண்ட நாட்களுக்கு அதே நிலையில் நீடிப்பதை இதன் மூலம் உறுதிசெய்ய முடியும். மேலும் அதனை மீண்டும் செயலாக்குவதன் மூலம் எதிர்கால கொள்கை மாற்றங்கள் துரிதமானவையாகவும் உறுதியானவையாகவும் இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.