காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் கணிக்கப்பட்டபடி வெற்றி பெற்றிருக்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே. அக்டோபர் 26ஆம் தேதி அவர் பொறுப்பேற்பார். இந்த போட்டி முன்வைத்த சவால், நாட்டின் மிக பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் அவருக்கான காலகட்டத்திற்கு அவரை தயார் செய்திருக்காது. கட்சிக்கு இப்போது மிகத் தீவிரமாக தேவைப்படுவது கலக செயல்பாடுகளைக் கொண்ட ஆற்றல். ஆனால் திரு.கார்கே துடிப்புடன் இருப்பதைவிட நிலைத்தன்மையை தக்க வைப்பதில் நம்பிக்கை கொண்டவர். கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை மட்டுமன்றி தடுமாறிக்கொண்டிருக்கும் கட்சி விரைவிலேயே தன்னை மீட்டுக்கொள்ளும் என்று இந்தியாவில் உள்ள பலரது நம்பிக்கையின் சுமையையும் அவரது வயதான தோள்கள் சுமந்து கொண்டிருக்கின்றன. அதிகார மையத்தின் பிரதிநிதி என்கிற முத்திரையை திரு. கார்கே உதற வேண்டும். ஒரு சில குடும்பங்கள் மட்டும் நிறைய அரசியல் பதவிகளில் இருக்கும் வழக்கத்தை மாற்றுவதற்கு உறுதிபூண்ட கட்சியின் உதய்பூர் பிரகடனம்தான் அவரது தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும். கட்சியை இளையவர்களுக்கும் இன்னும் பரந்துப்பட்ட வகை மக்களுக்கும் அவர் திறந்துவிட வேண்டும். போட்டியில் வென்ற பிறகு வெளியான முதல் புகைப்படத்தில் காங்கிரஸ் அரசியல்வாதியான அவரது மகன் இருந்தது சரியான தோற்றத்தை அளிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் முற்றதிகார அரசியலுக்கு சரியாக சவால்விட வேண்டுமென்றால் பல சாதிகள், பாலினங்கள், பிராந்தியங்கள், மற்றும் தொழில்ரீதியான, சமூகரீதியான பின்னணிகளிலிருந்து நியாயமான, சீரான பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் உறுதிப்படுத்த வேண்டும். கட்சியின் புதிய தலைவராக திரு. கார்கே, காங்கிரஸை போட்டிக்குத் தயார் செய்ய வேண்டும். அதே போல, கட்சிக்கு புதுப்பிக்கப்பட்ட சித்தாந்தத்தையும் அறம் சார்ந்த ஒரு நோக்கத்தையும் தெளிவாக முன்வைப்பதன் மூலம் கூட்டணிக்கு சாத்தியப்பாடு உள்ளவர்களையும் பொதுமக்களையும் அவர் தொடர்பு கொள்ள வேண்டும்.
தொடக்கத்தில் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாடை தலைமைப் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்கிற திட்டம் தோல்வியடைந்தாலும் காந்தி குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் சொல்வதே காங்கிரஸில் இறுதி வார்த்தையாக இருக்கும் என்பதற்கு சமீபத்திய சான்று, திரு.கார்கேவின் தேர்வு. உட்கட்சி ஜனநாயகத்தின் தரநிலைகளை உயர்த்தியது பற்றி காங்கிரஸ் பெருமைப்பட்டுக் கொண்டாலும், திரு.கார்கேவுக்கு ஆதரவாக கட்சியின் பல அதிகார மட்டங்கள் செய்த முயற்சிகள், சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இருந்தன. திரு.கார்கேவுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் காந்தி குடும்பத்திடமிருந்து வந்தது. சசி தரூரின் திறமையான போட்டியும் தேர்தல் முறைக்கு மாண்பைச் சேர்த்தது. தேர்தல் நடைபெற்ற போதும் காந்தி குடும்பத்துக்கான தங்களது விசுவாசத்தை திரு.தரூரும் அவரது ஆதரவாளர்களும் தெளிவாகவே வலியுறுத்தினார்கள். திரு. தரூர் பெற்ற ஆயிரத்து சொச்சம் வாக்குகளிலிருந்துதான் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது மிக தேவையான ஆற்றலை காந்தி குடும்பமும், திரு. கார்கேவும் கட்சியும் தேட வேண்டும். காங்கிரசுக்கு தேவை பலதரப்பட்ட அளவில் திறன் வாய்ந்த தலைவர்கள். இயக்கரீதியான வேர்களையும் அனுபவங்களையும் கொண்ட திரு.கார்கே போன்ற தலைவர்களும் தேவை. பரந்த ஆளுமைத் திறனும் மாற்றைத்தையும் கனவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.தரூர் போன்ற தலைவர்களும் தேவை. வெற்றியாளரின் திறமைக்கும் அவர் தரும் நம்பிக்கைக்கும் முதல் சோதனை என்பது தோல்வியடைந்த போட்டியாளரை அவர் எப்படி நடத்துகிறார் என்பதுதான். மாற்றுக் கருத்துக்கான, உரையாடலுக்கான வெளி தொலைந்துவிடக்கூடாது.
This editorial has been translated from English, which can be read here.