சில நேரங்களில் ஒரு நல்ல திட்டத்திற்கான வளங்களை கண்டடையும் அரசின் திறனை அதன் நோக்கம் மட்டுமே கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவு திட்டம், பள்ளிக் கல்வியிலும் பொது சுகாதாரத்திலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கொள்கை முயற்சிக்கான உதாரணம். இந்தத் திட்டத்தின் அறிமுக நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதைப்போல காலை உணவு வழங்குவது இலவசம் இல்லை, ஆனால் எந்தவொரு குழந்தையும் பசியுடன் இருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மக்கள் தொகையின் அனைத்து தரப்பினருக்கும் அனைத்தையையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதியளிக்கும் முற்போக்கு திராவிட மாடலின் முக்கிய கூறுகளிலிருந்து தனது சொற்களையும் செயல்களையும் வகுத்திருந்தார் திரு. ஸ்டாலின். அதில் ஒரு அடிப்படையான அம்சம் குழந்தைகள் நலன். பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் தமிழ்நாடு தொடக்கக் காலத்திலிருந்து தந்த முக்கியத்துவத்தை அது விளக்கும். ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக காலை உணவுதான் இருக்கிறது என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயம். உலகளவிலான பல ஆய்வுகள் தொடர்ச்சியாக காலை உணவை உட்கொள்வது மாணவர்கள் மீது நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றன. அது அவர்களது கவனம் செலுத்தும் திறன் மீதும் தகவல்களை கற்றுக்கொண்டு அதை தக்கவைத்துக் கொள்ளும் திறன் மீதும் ஆக்கப்பூர்வமாக தாக்கம் செலுத்தும். இதனால் பள்ளியின் ஒட்டுமொத்த செயல்திறன் மேம்படும், அதோடு ஒழுங்கும், அறிவாற்றலும் கூட மேம்படும். தவிர, தொடர்ச்சியான காலை உணவு என்பது, ஒட்டுமொத்த உணவின் தரத்தையும், நுண்ணூட்டச் சத்துக்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதையும், குழந்தைகளிடத்தில் இருக்கும் இரத்த சோகை மற்றும் உயரம், எடை சார்ந்த பிரச்னைகளையும் சரி செய்யும். எதிர்காலத்தில் உடல் நிறை குறியீட்டு எண் (BMI) மீதும் அதன் தாக்கம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. நாளொன்றுக்கு 293 கலோரிக்களும் 9.85 கிராம் புரதச் சத்தும் பள்ளிக்குழந்தைகளுக்கு தர வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஏற்கனவே வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவரும் நாளொன்றுக்கு 553 கலோரிக்களும் 18 கிராம் புரதச்சத்தும் வழங்கப்படும் நிலையில், இப்போது பள்ளியில் உணவு உண்ணும் ஒவ்வொரு மாணவருக்கும் தினமும் 846 கலோரிக்களும் 28 கிராம் புரதச்சத்தும் கிடைக்கும். மத்திய அரசின் மதிய உணவு திட்டம் ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு 450-700 கலோரிக்களையும், 12 முதல் 20 கிராம் புரதச் சத்தையும் பரிந்துரைக்கிறது.
உள்ளூர் பொருட்களும் காய்கறிகளும் நிறைந்த ஒரு உணவு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் உணவு வகைப் பட்டியல், குழந்தைகளின் பசி, கலோரிகள், ஆற்றல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்யும். ஆனால் அதோடு ருசிக்கும் தர நிர்ணயங்களுக்கும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பல பத்தாண்டுகளாக மதிய உணவு திட்டம் வழங்கும் செறிவான அனுபவத்தைக் கொண்ட அரசு அதன் பாதையில் முன்பு தடைக்கற்களாக இருந்த இருப்பு குறைவு, உணவின் மோசமான தரம், நிதி ஒதுக்கீட்டில் தாமதங்கள், சாதி ரீதியான பிரச்னைகள் உள்ளிட்ட செய்கைகள், விடுபடுதல்கள் சார்ந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் ஒரு திட்டத்துக்கான நிதியை ஏற்பாடு செய்ததன் மூலம், மாநிலத்தின் நிதி நிலையை அதன் நல் நோக்கம் வெற்றி பெற அனுமதித்திருக்கும் தமிழ்நாடு அரசைப் பார்த்து பிற அரசுகளும் ஊக்கம் கொள்ள வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
To read this editorial in Hindi, click here
Published - September 17, 2022 11:53 am IST