இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் (ஐஎஸ்சி) எனப்படும் இந்திய அறிவியல் மாநாடு ஒரு வருடாந்திர நிகழ்வு. இந்திய அறிவியல் சமூகத்தின் ஒரு பகுதியினர் இதில் கூடி, அறிவியல் குறித்த ஆய்வுகளையும் தகவல்களையும் முன்வைப்பதோடு, அவற்றைப் பற்றி விவாதிக்கவும் செய்வார்கள். ஒவ்வொரு மாநாடும் பிரதமரால் துவக்கி வைக்கப்படுவதோடு, நோபல் பரிசு பெற்ற ஒன்று அல்லது இரண்டு அறிஞர்களும் கலந்துகொள்வார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த சிலர், குறிப்பாக பிற விஷயங்களில் அதீத தேசியவாதத்தை முன்வைக்கக்கூடியவர்களில் சிலர் போலி அறிவியல் கருத்துகளை முன்வைக்க ஒரு தளமாக அமைந்ததால் ஐஎஸ்சியின் மரியாதை கெட்டுப்போயிருக்கிறது. தற்போது ஐஎஸ்சியின் 109வது கூட்டம் 2024ல் லக்னௌ பல்கலைக்கழகத்தில் நடைபெற வேண்டும். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதியுதவி அளிக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும் அந்தத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ஐஎஸ்சி அசோஸியேஷனுக்கும் இடையில் மோதல் நிலவி வருவதால் பல்கலைக்கழகம் நிகழ்ச்சியை நடத்துவதில் இருந்து விலகிக் கொண்டது. இதனால் ஜலந்தரில் உள்ள லவ்லி ஃப்ரொஃபஷனல் பல்கலைக்கழகத்தை ஐஎஸ்சி தேர்வு செய்தது. ஆனால், தெளிவாகக் குறிப்பிடப்படாத ‘நிதி முறைகேடு’ குற்றச்சாட்டுகள் உட்பல சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இதனை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு தலையிடுவதாகக் கூறி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு எதிராக ஐஎஸ்சி அசோசியேஷன் நீதிமன்றத்தை நாடினாலும் லவ்லி பல்கலைக்கழகமும் நிகழ்ச்சியை நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டது. 2024ஆம் ஆண்டின் மாநாட்டை நடத்த ஆர்வமுள்ள பிற பல்கலைக்கழகங்கள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்யலாம் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐஎஸ்சி அசோசியேஷன். புதிய இடத்தைக் கண்டறிய ஒரு கமிட்டியையும் அமைத்துள்ளது.
ஐஎஸ்சியின் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளி, ஐஎஸ்சியின் அவசியம் குறித்து யோசிக்க ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது. 2014ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ஐஎஸ்சியின் நிகழ்ச்சிகளை ஒரு ‘சர்க்கஸ்’ எனவும் இந்தியாவில் அறிவியலுக்கு ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் சில மரியாதைக்குரிய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆகவே, இந்த நிச்சயமற்ற நிலை அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தவில்லை. ஆனால் கற்றுக்கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஐஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்து செயல்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் சில உரைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. ஆகவே, நல்ல விஷயங்களை வைத்துக் கொண்டு மோசமானவற்றை தூக்கியெறிவதுபோல எளிதான விஷயமல்ல இது. தன் விருப்பத்திற்கு பேச்சாளர்களைத் தேர்வுசெய்வது, தொடர்பில்லாத செயல்திட்டங்கள், அர்த்தமுள்ள வகையிலான விவாதங்களுக்கு வழிவகுக்காத நெருக்கடிமிக்க நிகழ்ச்சிநிரல் ஆகியவற்றோடு இந்திய அறிவியல் மாநாடே தவறாகதான் செயல்படுகிறது. 2015ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா ஒன்றை நடத்திவருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், நில அறிவியல் அமைச்சகம், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை, சங்க பரிவாரங்களோடு தொடர்புடைய விஞ்ஞான பாரதி ஆகியவை ஒன்று சேர்ந்து இதனை நடத்துகின்றன. ஆகவே, இந்திய அறிவியல் மாநாடு என்பது சுயாதீனமான, அடிக்கடி நடக்கக்கூடிய, தனியார் துறையில் உள்ள விஞ்ஞானிகள் உட்பட இந்திய அறிவியல் சமூகத்தினர் என்ன செய்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்யக்கூடிய நிகழ்வாக இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு அரசியல் தலைவர்களைப் பங்கேற்கச் செய்வதும், நோபல் அறிஞர்கள் பங்கேற்பதும் வெறும் அலங்காரமாகத்தான் முடியும்.
COMMents
SHARE