தற்போது குடியரசு துணைத் தலைவராக இருக்கும் எம். வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நாளுக்கு அடுத்த நாள், அதாவது வியாழக் கிழமையன்று நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பார் ஜகதீப் தன்கர். சனிக்கிழமையன்று நடந்த குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் பதிவான 710 வாக்குகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான அவர் 528 வாக்குகளை பெற்றிருந்தார். எதிர்கட்சி வேட்பாளரும் காங்கிரஸ் தலைவருமான மார்கரெட் அல்வா 182 வாக்குகளை பெற்றிருந்தார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் அந்தக் கூட்டணிக்கே தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் தன்கரின் தேர்வு ஏற்கனவே நிச்சயமான ஒன்றாகவே இருந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் தலைவரான தன்கர் தில்லியிலும் தன் சொந்த மாநிலத்திலும் ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பல பதவிகளை வகித்திருக்கிறார். 2003ல் அவர் பா.ஜ.கவில் இணைந்தார். மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் மோதி, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்வதற்கான கடும் போட்டியில் பா.ஜ.க ஈடுபட்டிருந்த நிலையில் அம்மாநில ஆளுநராக தன்கர் நியமிக்கப்பட்டது அவர் மீது தேசத்தின் கவனத்தை திருப்பியது.
வழக்கறிஞராகவும் இருந்த தன்கர் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்க முதல்வருடனான மோதல்களில் சட்டரீதியான தர்க்க அறிவையும் அரசியல் சொல் வன்மையையும் வெளிப்படுத்தி கடுமை காட்டினார்.
ஒருதலைபட்சமாக அவர் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டாலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அவருடன் சமரசம் செய்து கொண்டதுடன் அது முடிவுக்கு வந்தது. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்ததன் மூலம் திருணமூல் காங்கிரஸ் கட்சி மறைமுகமாக அவருக்கு ஆதரவளித்தது. மார்கரெட் அல்வாவை நிறுத்துவது குறித்து தம்மிடம் விவாதிக்கவில்லை என்று காங்கிரஸ் மீது குற்றம் சாட்டியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. ஆனால், அந்த குற்றசாட்டு வலுவானதாக இல்லை என்பதோடு எதிர்கட்சியினரின் ஒற்றுமையில் இருந்த ஓட்டைகளையும் இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக்காட்டியது. தன்கரின் வெற்றி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான் என்றாலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உதவி இதில் ஒரு ரகசிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
குடியரசு துணைத் தலைவர் என்பவர் மாநிலங்களவையின் தலைவரும் கூட. இந்தப் பதவி எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்றாலும் அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் கடுமையான பகையுணர்வு நிலவும் இந்த காலகட்டத்தில் இன்னும் அதிக முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தடைப்பட்டிருக்கின்றன; நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தவிர ஆளும் பா.ஜ.கவிற்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலுமாக நின்றுவிட்டது. முக்கியமான சட்டங்களை உருவாக்கும்போது, அந்த மசோதாக்களின் சில கூறுகளை வைத்து அவற்றை நிதி மசோதாக்கள் என்று வகைப்படுத்தி, மாநிலங்களவையை ஈடுபடுத்தாமல் தொடர்ச்சியாக அந்த மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது அரசு.
குடியரசு துணைத் தலைவராக, தன்கர் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவையின் மாண்பையும் அதன் அரசியல் சாசன பங்கையும் உறுதி செய்வார் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மீது இருக்கிறது. இப்போதிருக்கும் நிலையில் அது எளிதான விஷயம் இல்லை. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட எல்லோரும் தன்கரின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பதை அறிய காத்துக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு துணைத் தலைவராக தன்கர் தேர்வுசெய்யப்பட்டிருப்பது பா.ஜ.கவுக்கு அரசியல் ரீதியாக உதவும்.
ஆனால், மாநிலங்களவைத் தலைவராக அவர் எதிர்கட்சிகளின் இடத்தை பாதுகாப்பதோடு, விவாதங்களையும், ஆளும்கட்சி பதிலளிக்க வேண்டியதன் பொறுப்பையும் உறுதி செய்ய வேண்டும். புதிய குடியரசு துணைத் தலைவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க செய்ய வேண்டும்.
This editorial in Tamil has been translated from English which can be read here.