தொழிலாளர்களின் போக்குவரத்து குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் இந்த காலகட்டத்தில் தங்கள் தாய்நாட்டில் துன்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணங்களை மேற்கொள்ளும்போது பெரிய ஆபத்துகளை எதிர்நோக்குவதற்கு மத்தியிலும் வளர்ந்த நாடுகளில் வாய்ப்புகளைத் தேடுவதில் ஆச்சரியமில்லை. ஃப்ரான்ஸ் நாட்டு விமான நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 303 இந்தியர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட சமீபத்திய நிகழ்வு அத்தகைய மற்றொரு சம்பவமாகவோ அல்லது அதைவிட மோசமான மனிதக் கடத்தலாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் சுமார் 20 பேர் ஃப்ரான்சில் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். மற்றவர்கள் செவ்வாய்க்கிழமை மும்பை திரும்பினார்கள். ஆனால் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி இந்த வருடம் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 1,00,000 பேர் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. இது முந்தைய வருடத்தின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம் என்றும் அந்த தரவுகள் சொல்கின்றன. இந்த முயற்சிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பலத்த பாதுகாப்புள்ள மெக்சிகன் எல்லை வழியாக நடந்தன. மீதமுள்ள முயற்சிகள், பாதுகாப்புக்கு குறைவான ஆட்களைக் கொண்ட கனேடிய எல்லையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டவை. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரிசோனா பாலைவனத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் இறந்து கிடந்தபோதுதான், மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய இந்தியர்கள் ஒரு மோசமான வழியைப் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்தது. இது கோவிட் - 19 தொற்றுக்கு சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு நடந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் பொது சுகாதாரத்தைக் கையாளும் அமெரிக்க சட்டத்தின் அரிதாகப் பயன்படுத்தப்படும் தலைப்பு 42ஐப் பயன்படுத்த வழிவகுத்தது. அதாவது புகலிடக் கோரிக்கையாளர்களை விசாரணை இல்லாமல் திருப்பி அனுப்ப எல்லை அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது. கோவிட் -19 வருடங்கள் முடிவுக்கு வந்து பைடன் நிர்வாகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது போன்ற புலம்பெயர்வு முயற்சிகள் மீண்டும் சீராக அதிகரிக்கத் தொடங்கின. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளாக மாறுவதற்காக இந்தியர்கள் அபாயங்களை எதிர்கொள்ளவும் பெரும் சிரமங்களை சுமக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அவர்கள் விரக்தியில் அப்படிச் செய்கிறார்கள் அல்லது தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பது போலதான் இருக்கிறது.
கடந்த காலங்களில் பதிவான இது போன்ற வழக்குகளில் இருக்கும் அதே மாதிரியான அறிகுறிகளை இந்த வழக்கு பற்றிய ஆரம்பகால அறிக்கைகளும் கொண்டிருக்கின்றன - விமான பயணிகளில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்; சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறார்கள் தனியாகப் பயணித்தார்கள். இத்தகைய இடப்பெயர்வுகளுக்கான உடனடி காரணங்களாக சில சீக்கியர்கள் மத துன்புறுத்தல்
என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் விவசாயத்தில் உள்ள துயரத்தை சொல்லியிருக்கிறார்கள். காரணங்கள் எதுவாக இருந்தாலும், இந்திய அரசு இப்போது கிராமப்புற பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் பரவலாகியிருக்கும் இந்த மனிதக் கடத்தல் பற்றி கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் ஒரு சிறந்த எதிர்காலம் பற்றிய பொய்யான வாக்குறுதிகளுக்கு இங்குள்ள அப்பாவி மக்கள் பலியாகிறார்கள். வீழ்ச்சியடைந்திருக்கும் வருமானம், அதிகப்படியான சுரண்டல் மற்றும் துண்டு துண்டான விவசாய நிலங்கள் ஆகியவற்றால் விவசாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. தொழில் சந்தையில் சுரண்டும் நோக்கம் கொண்ட இடைத்தரகர்கள் மீதான கடும் நடவடிக்கை என்பது ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்க முடியும்.