வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இந்த வார ரஷ்ய பயணம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தியாவும் ரஷ்யாவும் சந்திப்புகளை வெற்றிகரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செய்ய மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளிலிருந்து தெளிவாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு வருடத்திற்கு நீண்ட விரிவான ராஜதந்திர முயற்சிகளின் முடிவில், ஐந்து நாள் பயணம் என்பது வழக்கத்திற்கு மாறாக நீண்டதாகத் தோன்றும். குறிப்பாக ரஷ்யாவில் விடுமுறை காலத்திற்கு முந்தைய இந்த காலகட்டத்தில், உயர்மட்ட வெளிநாட்டு பயணங்களை ரஷ்யத் தலைமை பொதுவாக கண்டிருக்காது. திரு. ஜெயசங்கரை சந்தித்ததுபோல கீழ்மட்ட வெளிநாட்டு அதிகாரிகளை ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதின் சந்திப்பதும் அசாதாரணமானது. 2000ல் துவங்கி 2021வரை தொடர்ந்து நடந்துவந்த பாரம்பரியமான வருடாந்திர உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி இரண்டு வருடங்களாக தவிர்த்து வரும் நிலையில், யுக்ரைன் போருக்குப் பிறகு இந்தியா-ரஷ்யா உறவின் ஆரோக்கியம் குறித்த பல ஊகங்களுக்கு அது வழிவகுத்தது. ரஷ்யாவை விமர்சிக்கக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்தாலும், பாதுகாப்பு விநியோகங்கள் குறைவது குறித்த கவலைகள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மூன்றாவது நாணயத்தில் பணம் செலுத்துவதில் நீடித்துவந்த தொடர்ச்சியான சிக்கல்கள் மற்றும் பிற இருதரப்பு தொடர்புகளில் ஏற்பட்ட பொதுவான சரிவு ஆகியவை நீடித்து வருகின்றன. திரு.ஜெய்சங்கர் மேற்கொண்டிருக்கும் பணியின் பெரும் பகுதி, வேறுபாடுகள் குறித்த கண்ணோட்டத்தை இலகுவாக்குவதுதான் என்பது தெளிவு. எதிர்காலத்தில் வரும் கூடங்குளம் அணுமின் திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இணைப்பை ஊக்குவித்தல், வர்த்தகம் மற்றும் யூரேசிய பொருளாதார ஒன்றியம்-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல் மற்றும் கூட்டு ராணுவ உற்பத்தி உள்ளிட்ட இந்த பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், இருதரப்பு உறவுகளும் சீரான பாதையில் இருப்பதைக் குறிக்கின்றன. பலதரப்பு ஒத்துழைப்பும் அப்படித்தான் இருக்கிறது. குறிப்பாக அடுத்த வருடம் விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்த ரஷ்யா திட்டமிட்டிருக்கும் நிலையில் இந்தியாவும் ரஷ்யாவும் ஐ.நா மற்றும் எஸ்.சி.ஓவில் நிலைப்பாடுகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகின்றன. ரஷ்யா மீது மேற்கு நாடுகளின் தடைகள் இருந்தபோதிலும் ரஷ்ய ஹைட்ரோ கார்பன்களின் இறக்குமதி தொடர்ந்து அதிகரிக்கும் என்று திரு ஜெய்சங்கர் அறிவித்திருப்பது, “அரசியல் ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல்” தொடரும் உறவுகளின் வலிமையைக் குறிக்கிறது.
வருடாந்திர தலைமை உச்சி மாநாடு 2024ல் மீண்டும் தொடங்கப்படும் என்று திரு. ஜெய்சங்கர் உறுதியளித்திருப்பது, உறவில் எந்தவொரு தேக்கத்தையும் அகற்ற இருதரப்பும் வேலை செய்வதை குறிப்பதுபோலதான் இருக்கிறது. கடந்த அறுபதாண்டுகளாக “உலக அரசியலில் ஒரே நிலையான விஷயமாக” இந்தியா-ரஷ்யா உறவு இருப்பதாக அவர் சொல்லியிருப்பதை குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும் கவனிக்காமல் இருந்திருக்காது. பன்னுன் விசாரணை காரணமாக இந்திய-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டிருக்கும் சிக்கலோடு குடியரசு தினத்திற்கான திரு. மோதியின் அழைப்பை ஏற்க மறுக்கும் அமெரிக்க அதிபர் ஜோசப் பைடனின் முடிவோடு ராணுவ மோதல் காரணமாக இந்தியா-சீனா உறவுகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு ஒரு வருடம் முடிந்திருக்கும் நிலையில் இந்த கூற்று முக்கியமானது. இந்த நல்லுறவு ரூபாய்-ரூபிள் கட்டண பொறிமுறையில் உறுதியான நகர்வைக் கொடுக்குமா அல்லது எஸ்-400 ஏர் சிஸ்டம் யூனிட்டுகளை தாமதமாக வழங்குவதை விரைவுபடுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அவரது பயணம் மற்றும் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான “புவிசார் அரசியல் மற்றும் வியூகரீதியிலான ஒருங்கிணைப்பு” ஒரு பன்முக உலகில் “மறுசீரமைக்கப்படுகிறது” என்ற அவரது கூற்று இந்த உறவை ஆதரிப்பவர்களும் விமர்சகர்களும் மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.