அமெரிக்க கொலராடோ மாகாணத்தின் உச்ச நீதிமன்றம், முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதித்திருக்கிறது. அவர் “எதிர்ப்பு அல்லது கிளர்ச்சியில்” ஈடுபடுவது தொடர்பான அரசியலமைப்பு பிரிவை மீறியதாகக் கூறி இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 6, 2021 அன்று போராட்டக்காரர்களை தூண்டியதில் அவர் வகித்த பங்கிற்காக கொலராடோவில் அடுத்த ஆண்டு தேர்தல் வாக்கெடுப்பில் பங்கெடுப்பதற்கு திரு. டிரம்ப் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் 4-3 என்கிற பிளவுபட்ட தீர்ப்பில் கண்டறிந்தது. அந்தப் போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் பின்னர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கேபிட்டலின் கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். சட்டத்தின் 3 ஆவது பிரிவைப் பயன்படுத்தி அதிபர் வேட்பாளரை வாக்கெடுப்பில் இருந்து நீக்குவதன் மூலம் இந்த தீர்ப்பு ஒரு வரலாற்றுரீதியான முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த வழக்கைப் பொருத்தவரையில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பிரபலமான குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கி, தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஒருவரின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவின் படி (“கிளர்ச்சி பிரிவு”), அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிராக எதிர்ப்பு அல்லது கிளர்ச்சியில் ஈடுபடும் எந்தவொரு நபரும் காங்கிரஸ், ராணுவம், கூட்டாட்சி மற்றும் அரசுப் பதவிகள் உள்ளிட்ட பொது பதவிகளுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். 1868ல் அங்கீகரிக்கப்பட்ட 14 வது திருத்தம், முன்னாள் கூட்டமைப்புகள் காங்கிரசில் நுழைவதையும், அவர்கள் முன்பு எந்த அரசுக்கு எதிராகப் போராடினார்களோ அந்த அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தடை செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு திருத்தம். இதே போன்ற ஒரு உள்நாட்டுப் போருக்கு பிந்தைய வாதம், வாக்குச்சீட்டு வாக்களிப்புடன் தொடர்புடைய ஆனால் நிரூபிக்கப்படாத தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதைத் தடுப்பதில் திரு. டிரம்ப் ஆற்றிய பங்குக்குப் பொருந்தலாம் என்பது ஒரு நகைமுரண்தான். 14வது திருத்தம் அதிபர் பதவியை உள்ளடக்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்ற அடிப்படையில் திரு. டிரம்ப் போட்டியிடுவதைத் தடுக்க மறுத்த முந்தைய மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை கொலராடோ தீர்ப்பு ரத்து செய்திருக்கிறது.
அவரது சட்டக் குழு தொடங்கவிருக்கும் தவிர்க்க முடியாத மேல்முறையீடு வெற்றி பெறுமா என்பதையும் கொலராடோவில் போட்டியிட முடியாதது அடுத்த ஆண்டு அவரது ஒட்டுமொத்த வாய்ப்புகளை பாதிக்குமா என்பதையும் தாண்டி, இந்த தீர்ப்பு திரு ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்ச்சைக்குரிய கொள்கை நிலைப்பாடுகளைச் சுற்றி அமெரிக்க வாக்காளர்களின் மோசமான பிளவுகளைக் குறிக்கிறது. ஒருபுறம் பார்த்தால், அரசியல் மாண்பை அவர் நிராகரித்ததுதான் தேர்தல் தோல்விக்குப் பிறகு பதவி விலக மறுக்கும் ஒரு அதிபர் ஜனநாயகரீதியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. முந்தைய ட்ரம்ப் பரப்புரைகளின் வெறுக்கத்தக்க, பக்கச்சார்பான உரைகளுடன் இணைத்துப் பார்க்கும் போது, இந்த கணக்கிடப்பட்ட பிடிவாதம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் என்று சொல்லும் குடியரசுக் கட்சியினரின் அரசியல் கண்ணோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வெகுஜன பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள் முக்கியமானதாக நினைக்கும் விழுமியங்களுடன் இந்த உலகப் பார்வைக்கு பெரிதாக எதுவும் பொதுவானதாக இல்லை. இது எதிர்காலத்தில் ஜனநாயக உரையாடலின் தரம் மற்றும் தன்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக இருக்கும். இரு தரப்பு தலைவர்களும் இப்போது குறைவாக இருக்கும் இருதருப்பு ஒத்துழைப்பை உறுதி செய்ய முயற்சிகள் எடுப்பதற்கு பதிலாக தொடர்பற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருப்பதற்கான சாத்தியங்களையும் அதிகரிக்கும்.