புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை (டபிள்யூ.எஃப்.ஐ) மத்திய விளையாட்டு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இந்திய மல்யுத்தம் எதிர்கொண்டு வரும் பிரச்னையில் இது ஒரு புதிய திருப்பத்தை குறிக்கிறது. ஜனவரி 2023ல், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகதும் அப்போதைய டபிள்யூ.எஃப்.ஐ தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் கூட்டமைப்பின் பயிற்சியாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை சுமத்தியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார். தவிர, வன்தொடர்தல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக டெல்லி காவல்துறை அவர் மீது குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தது. ஆனால் கடந்த வியாழக்கிழமை, அவரது நீண்டகால விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்தப்பட்ட 15 பதவிகளில் 13 பதவிகளுக்கு சிங் மற்றும் அவரது சக பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது மட்டுமல்ல, ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. டபிள்யூ.எஃப்.ஐ அலுவலகமாகவும் செயல்பட்ட பிரிஜ் பூஷனின் வீட்டுக்கு வெளியே பெரிய மாலை அணிந்திருந்த அவரோடு சேர்ந்து சிங்கும் நின்று கொண்டு இருவரும் சேர்ந்து வெற்றி சின்னத்தை காட்டிய காட்சி, உண்மையில் கட்டுப்பாடு எங்கே இருக்கிறது என்பதற்கான போதுமான அறிகுறியாக இருந்தது. மல்யுத்த வீராங்கனைகளிடையே ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் நிலையில், சாக்ஷி தனது ஓய்வை அறிவித்தார். தற்போதைய அமைப்பில் எந்தவொரு பெண்ணும் மல்யுத்தம் பாதுகாப்பானது என்று நினைக்க மாட்டார் என்று சொன்னார் வினேஷ். பஜ்ரங் வெள்ளிக் கிழமையன்று எதிர்ப்பின் அறிகுறியாக தனது பத்மஸ்ரீ விருதை திரும்பித் தர முடிவெடுத்தார்.
இந்த தர்மசங்டகமான நிகழ்வுகள் கூட ஒரு வேளை அரசை இறுதியாக நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்திருக்கலாம். சிங் தரப்பில் அவசரமாக மற்றும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதையும் அமைச்சகம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அவர் டபிள்யூ.எஃப்.ஐ அரசியலமைப்பின்படி செயலாளர் ஜெனரலை (பிரேம் சந்த் லோசாப்) கலந்தாலோசிக்காமல் போட்டிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருந்தார். பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவராகக் கருதப்படாத இரண்டு டபிள்யூ.எஃப்.ஐ நிர்வாகிகளில் லோசாப் ஒருவர். “முன்னாள் நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வளாகங்களில் இருந்து, வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதே வளாகத்திலிருந்து” கூட்டமைப்பு விவகாரங்களை இயக்குவது இன்னொரு காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், இந்தியாவில் விளையாட்டு நிர்வாகத்தை பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் இந்தப் பிரச்னை அம்பலப்படுத்தியிருக்கிறது. தேசம் அதன் விளையாட்டுத் திறமையை பன்முகப்படுத்திக் கொண்டிருந்தாலும், விளையாட்டை நடத்தும் அதிகாரத்துவம் இன்னும் ஆதரவு அரசியலின் விரும்பத்தகாத பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. அதிகாரப் பதவிகளை வகிக்கும் முக்கியமான விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் தங்கள் உயர்வுக்கு உதவிய அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதும் எந்த விதத்திலும் உதவியாக இல்லை. மல்யுத்த வீராங்கனைகள் பிரச்னையிலேயே கூட பெரிதும் மதிக்கப்பட்ட பி.டி.உஷா தலைமையிலான இந்திய ஒலிம்பிக் சங்கம் தனது ஆரம்பகட்ட எதிர்வினையில் சுணங்கியது. புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் ஆணையம் அமைதி காத்தது. இந்திய தலைமை நீதிபதி தலையிட்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் அளவுக்கு பிரிஜ் பூஷனின் செல்வாக்கு இருந்தது. இப்போதும் பிரச்னைகளை முழுவதுமாக சரி செய்து சீர்திருத்தங்களைக் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகள் அதற்கு முழுவீச்சில் செயல்பட வேண்டும்.