செய்திகளை வெளியிடுவதில் ஒரு மோசமான முடிவு எடுக்கப்பட்டு தவறான செய்தி வெளியிடப்படும் போது என்ன நடக்கும்? செய்தி, அரசியல் செல்வாக்கு செலுத்தும் ஒரு நபருக்கு எதிரானதாகவும் செய்தி நிறுவனம் அரசை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் ஒரு நிறுவனமாகவும் இருக்கும் பட்சத்தில், அதன் விளைவுகள் பொருத்தமில்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருக்கும். இது போன்ற ஒரு சிக்கலில்தான் டிஜிட்டல் செய்தித்தளமான தி வயர் இப்போது இருக்கிறது. இதில் வெளிவந்த ஒரு கட்டுரைத் தொடர், இந்தத் தளத்தின் ஆலோசகர்களில் ஒருவர் தந்த போலி சான்றுகளின் அடிப்படையில் வெளியானதாக தி வயர் ஒப்புக்கொண்டிருக்கிறது. சமூக ஊடக பெருநிறுவனமான மெட்டாவின் ‘XCheck’ திட்டத்தின் பயனராக இருப்பவர் என்று சொல்லப்படுபவர் பெறக்கூடிய சிறப்புரிமைகள் பற்றிய செய்திகள்தான், இப்போது மிகப்பெரிய சங்கடமாக மாறிவிட்டது. எந்த கேள்வியுமின்றி எந்தவொரு பதிவை பற்றியும் புகாரளித்து, அதை நீக்குவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைதான் கட்டுரைத் தொடர் பேசியது. ஒரு குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கியதாகச் சொல்லப்பட்ட ஆளும் பா.ஜ.கவின் ஐ.டி. பிரிவு தலைவரான அமித் மாளவியா காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். மோசடி மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க தி வயர் சதி செய்ததாக அதில் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். போலியான டிஜிட்டல் ஆதாரங்களைத் தந்து விரிவான ஒரு ஏமாற்று வேலையை நிகழ்த்தியதாக தனது ஆலோசகர்களில் ஒருவரான தேவேஷ் குமார் மீது தி வயர் தந்த புகாரும் அதே தில்லி காவல்துறையிடம்தான் இருக்கிறது. ஆனால் காவல்துறை உடனடியாக தி வயர் செய்தித் தளத்தின் ஆசிரியர்களின் வீடுகளை சோதனை செய்ததுடன் லேப்டாப் மற்றும் தொலைபேசிகளை கையகப்படுத்தியது. எதிர்குரல் எழுப்புபவர்களை கையாள்வதற்கு தற்போதைய அரசு நிர்ணயத்திருக்கும் தராதரங்களை வைத்துப் பார்க்கும் போது கூட, காவல்துறை காட்டிய அவசரமும் கையகப்படுத்தலும் அதிர்ச்சிகரமானது. தி வயர் நிறுவனத்தை உதாரணமாகக் காட்ட எடுக்கப்படும் முயற்சிகள் போலவே அவை தோன்றுகின்றன.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில் ஒரு மோசடித் தன்மை இருந்தாலும், தி வயர் நிறுவனத்தை இழிவு செய்வதற்கான சதித் திட்டத்திற்கான சாத்தியக்கூறும் இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. தன்னைப் பற்றி ஆரம்பத்தில் வெளிவந்த கட்டுரைகளை எழுதியவர்கள் மீதும் தி வயரின் நிறுவனர்கள் மீது மட்டுமே புகாரளித்திருக்கிறார் திரு.மாளவியா. அவர் திரு. தேவேஷ் குமார் மீது புகார் அளிக்கவில்லை என்பது, இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்கிற சந்தேகத்தை எழுப்பாமல் இல்லை. அவதூறு வழக்குகளை உண்மையிலேயே காவல்துறை கையாளக் கூடாது. காரணம், அவதூறு வழக்கு விசாரணை பாதிக்கப்பட்ட நபரின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்யக்கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக சொல்லியிருக்கின்றன. அவதூறு வழக்குகளை குற்றவியல் சட்டத்தின் கீழ் வைத்திருப்பதன் அபாயத்தை இந்த வழக்கு சுட்டிக்காட்டுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சிவில் தீர்வாக இல்லாமல் செல்வாக்கான, அரசு ஆதரவு பெற்றவர்களால் சுரண்டப்படக் கூடிய அளவிலேயே அவதூறு வழக்குகள் இருக்கின்றன. அவதூறு வழக்கை கிரிமினல் குற்றமில்லை என்று ஆக்குவதற்கு நீதிமன்றங்கள் மறுத்துவருவதால், ஊடகங்களில் எப்போதாவது ஏற்படும் தவறுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு அரசின் அதிகாரம் என்ற கூடுதல் ஆயுதத்தைத் தருகிறது. இது போன்ற வழக்குகளில் முக்கியமான தற்காப்பு வாதமான தீய நோக்கம் இல்லை என்பது தி வயர் வழக்கில் தெளிவு. காரணம் எந்தவொரு ஊடகமும் பின்விளைவுகளின் அபாயங்கள் குறித்து தெளிவாக இருக்கும் நிலையில், சித்தரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் போலியான நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் வேண்டுமென்றே ஒரு செய்தியை வெளியிடாது. அதே நேரம், ஒரு கட்டுரையை மதிப்பிடும்போது அதில் சார்புத்தன்மை இருப்பதும் மெத்தனப் போக்கு இருப்பதும் நடுவில் யாராவது குறுக்கிடுவதற்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஊடக நிறுவனங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.