யுக்ரைன் கதிரியக்கத்தை வெளியிடும் குண்டுகளான அழுக்கு குண்டுகளை (Dirty bomb) வீசத் திட்டம் தீட்டியிருக்கிறது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டு யுக்ரைன் விவகாரம் எந்த அளவு தீவிரமடைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ராஜ்நாத் சிங் உட்பட பல நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, யுக்ரைன் “அணுசக்தி பயங்கரவாதத்தில்” ஈடுபடும் சாத்தியம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். அழுக்கு குண்டு என்பது ஒரு அணுகுண்டு அல்ல, மாறாக கதிரியக்கப் பொருட்களைக் கொண்ட ஒரு நாட்டு வெடிகுண்டாகும். இதை வெடிக்கச் செய்வதன் மூலம் அந்த நிலப்பரப்பு பல தசாப்தங்கள் வாழ முடியாததாக மாற்றக்கூடும். யுக்ரைனும் யுக்ரைனுக்கு ஆதரவான மேலை நாடுகளும் ரஷ்யாவின் குற்றசாட்டுகளை நிராகரித்திருக்கின்றன. போரில் பல பின்னடைவுகளை ரஷ்யா சந்தித்திருக்கும் நிலையில் அந்த நாடு பொய்யான தாக்குதல் பற்றிய அடிப்படை ஆதாரமற்ற கூற்றுகளை முன்வைப்பதாக அவை கூறுகின்றன. ஒரு முழுமையான போரின் பின்ணனியில் மறைமுகமாக என்ன நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது கடினம். ஆனால் அழுக்கு குண்டுகள், அணுகுண்டு தீவிரவாதம் போன்றவற்றை பற்றிய பேச்சுகள் நன்மை பயப்பதாக இல்லை. 1945ல் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதலை நடத்தியதிலிருந்து, உலகம் அணுத் தாக்குதலுக்கான தேர்வை தடை செய்யப்பட்ட ஒன்றாகவே கருதுகிறது. 1962ல் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஒரு போரின் விளிம்பில் இருந்தபோது கூட அதன் தலைவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக தனது நாட்டை பாதுகாக்க ‘தன்னிடம் உள்ள எல்லா வாய்ப்புகளையும்’ பயன்படுத்துவேன் என்கிற விளாமிதிர் புதினின் அச்சுறுத்தலும் ஜோ பைடனின் ‘அணு ஆயுத இறுதிப் போர்’ பற்றிய எச்சரிக்கையும், தொடர்ந்து அதிகரித்து வரும் ஒரு மோதலின் நடுவில் அணு ஆயுத தேர்வை இயல்பானதாக்குவதற்கு சமமானது.
ஆச்சரியம் என்னவென்றால் போர் தொடர்ந்து மோசமாகி வரும் ஒரு சூழலில், எந்தவொரு தரப்பும் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கான முயற்சியை எடுக்கவில்லை என்பதுதான். பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா சொன்னாலும் அதற்கான உறுதியான முன்மொழிவுகள் எதையும் அந்நாடு தரவில்லை. தவிர, பகுதியளவு கட்டுப்பாட்டில் இருக்கும்
நான்கு யுக்ரைனிய பிராந்தியங்களை இணைத்துக்கொள்வதாக அறிவித்த பின்னர் ரஷ்யாவை நம்பவும் முடியாது. திரு.புதின் பதவியில் இருக்கும் வரையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று யுக்ரைன் சொல்கிறது. க்ரீமியா உள்ளிட்ட அனைத்து யுக்ரைனிய பகுதிகளும் விடுவிக்கப்படும் வரையில் போர் தொடரும் என்றும் அந்நாடு அறிவித்திருக்கிறது. எல்லாத் தரப்புமே அதீதமான நிலைப்பாடுகளை எடுக்கும் நிலையில், போர் விரிவடைவதற்கான ஒரு சூழலை உருவாக்கிக்கொண்டு உலகை பணயக் கைதியாக வைத்திருக்கின்றன. எட்டு மாதப் போர் ஏற்கனவே பொருளாதார ரீதியாகவும் மானுட ரீதியாகவும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, இரண்டு அணு ஆயுத சக்திகளான ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையில் நேரடியான மோதல் ஏற்படுவது பற்றிய அச்சங்களும் அதிகரித்திருக்கின்றன. தீவிரமான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு, இந்த போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இதைவிட வேறு என்னதான் வேண்டும்? கட்டுப்பாடு இல்லாமல் போர் பெரிதாகிக்கொண்டே போவதும், ரஷ்யா-நேட்டொ மோதலுக்கான சாத்தியங்களும் இந்த உலகையே அழிவுப் பாதையில் திருப்பி விடும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அவற்றின் புவிசார் அரசியல் இலக்குகளைவிட போர் அபாயங்கள் அதிகம். அணு ஆயுத தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்கள் பற்றிய வாய்மொழி பேச்சுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ரஷ்யா, யுக்ரைன் மற்றும் மேலை நாடுகள் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும். இதைவிட்டுவிட்டு வேறு ஏதாவது செய்தால் அது பேரழிவையே கொண்டு வரும்.
This editorial has been translated from English, which can be read here.