புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்தியை சாத்தியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 17,490 கோடி ரூபாய் அளவிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்திருக்கிறது. அம்மோனியா உற்பத்தி தொடங்கி, எஃகு மற்றும் சிமெண்ட் தயாரிப்பு, பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் எரிபொருள் செல்களை இயக்குவது வரையில் பல விதமான பயன்பாடுகளைக் கொண்ட ஹைட்ரஜன் ஒரு அத்தியாவசியமான, தொழில்துறை சார்ந்த எரிபொருள். ஆனால், இதை உற்பத்தி செய்வதற்கான மலிவான வழி எதுவென்றால் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருளை சார்ந்திருப்பதுதான். இது கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகிறது. புவி வெப்பமயமாதல் குறித்த கவலைகளும் மாற்று எரிபொருட்களை நோக்கி படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் உலகம் நகர்வது, ஹைட்ரஜனை, சூரிய சக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்த ஆதாரங்களில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்வது பற்றி உலகின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஆனால், இது ஒப்பீட்டளவில் செலவுமிக்கது. நிலக்கரியிலிருந்து ஒரு கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய 0.9 டாலரிலிருந்து முதல் 1.5 டாலர் வரை செலவாகும். அதே நேரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து அதனை உற்பத்தி செய்ய ஒரு கிலோவுக்கு 3.5 டாலரிலிருந்து 5.5 டாலர் வரை செலவாகும். இந்தியாவில் சூரிய சக்தி மின்சாரத்திற்கான கட்டணங்கள் இப்போது நிலக்கரி மின்சாரத்தின் விலையைவிடக் குறைந்துவிட்டதைப் போலவே, புதைபடிவ எரிபொருள் மூலங்களிலிருந்து ஹைட்ரஜனை தயாரிப்பதற்கான தற்போதைய விலையை விட ‘பசுமை ஹைட்ரஜன்‘ அல்லது முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் குறைவாக இருக்கும் என்று அரசு நம்புகிறது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து சில முக்கியமான மையங்களிலிருந்து பல்வேறு தொழில் பயன்பாடுகளுக்காக சில உற்பத்தி மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு தொழில்துறைக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கித் தருவதே தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் நோக்கம். தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரோலைசர்களின் உற்பத்திக்கு நிதியளிக்க இந்த திட்டம் உறுதியளித்துள்ளது. அது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. 2030ஆம் ஆண்டிற்குள், வருடத்துக்கு குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, 60-100 ஜிகாவாட் எலக்ட்ரோலைசர் திறன், பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பரிமாற்ற கட்டமைப்புக்கான 125 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் ஆகியவைதான் இலக்கு.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் ஏற்படும் செலவுகள் காரணமாக, சர்வதேச அளவில் ஹைட்ரஜன் உற்பத்தியில் பசுமை ஹைட்ரஜனின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. ஆனால், இந்த வகை ஹைட்ரஜனின் சர்வதேச தொழில் மையமாகவும் ஏற்றுமதியாளராகவும் மாற இந்தியா எண்ணியிருக்கிறது. இது முக்கியமான ஒரு லட்சியம்தான். ஆனால் உயர்தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாறுவதில் இந்தியாவின் செயல்பாடு, இந்த லட்சியத்தை 2030க்குள் எட்ட முடியுமா என்பது பற்றிய சந்தேகங்களை எழுப்புகிறது. கொள்கைகள் இருந்தபோதிலும், சூரிய மின்கலங்கள், குறைகடத்திகள் அல்லது காற்றாலைக்கான பாகங்களின் நிகர ஏற்றுமதியாளராக இந்தியாவால் இருக்க முடியவில்லை. இதற்கு காரணம், இந்தியாவின் அடிப்படை உற்பத்தி தளம் தொடர்ந்து பலவீனமாக இருப்பதும் சர்வதேச மூலதனத்தை திறமையுடன் ஏற்கவும் பயன்படுத்தவும் அது தவறிவிட்டதும்தான். அதன் லட்சியங்களை அடைய வேண்டுமென்றால் இந்தியா அதன் சிறு உற்பத்தி மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பெரு நிறுவனங்களைவிட அதுவே பசுமைப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.
This editorial was translated from English which can be read here.