வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கான சட்டத்தை ஒருங்கிணைப்பது மத்திய அரசின் நீண்டகால நோக்கமாக இருந்து வருகிறது. இதை அடைவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது தொலைத்தொடர்பு மசோதா, 2023ன் அறிமுகம். இது தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்புகளை பெரும்பாலும் அப்படியே வைத்திருக்கும் 46 பக்க சட்டத்தோடு, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கான உரிமங்கள் மற்றும் அனுமதிகளுக்கு விண்ணப்பிப்பது போன்ற அதிகாரத்துவ நடைமுறைகளை எளிதாக்குகிறது. உரிம செயல்முறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவிருக்கின்றன. தவிர, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் உரிம விதிமுறைகளுக்கு இணங்காததைக் கையாள்வதற்கான ஒரு புதிய வழி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பொது மற்றும் தனியார் சொத்துக்களில் தங்கள் உபகரணங்கள் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்குகளை அமைக்கும் போது அனுமதிகள் மற்றும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகளை அணுகும் வாய்ப்புகளும் அவர்களுக்கு இருக்கின்றன. குறைந்தபட்சம் சில தொலைதூரப் பகுதிகளுக்காவது நெட் இணைப்பைப் பெறுவதற்கான ஒரு வழியாக நீண்ட காலமாகக் கூறப்படும் செயற்கைக்கோள் இணையத் தொழில்துறைக்கு இந்த மசோதா சற்று ஆசுவாசத்தை அளிக்கிறது. காரணம், அது ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கத் தேவையில்லை என்கிற நிலை இதில் இருக்கிறது. இதனால் இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒத்த நிலையில் இந்த மசோதா வைக்கிறது. தங்கள் ஒழுங்குமுறை நிலப்பரப்பை நெறிப்படுத்துவதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் இந்த மசோதா உதவுவதால் தொழிற்துறை இதை வரவேற்றிருக்கிறது. தவிர, இது ஒழுங்குமுறை நிலைத்தன்மையையும் அடுத்த கட்ட தொலைத்தொடர்பு விரிவாக்கத்திற்கு மிகவும் தேவையான சாத்தியமான சூழலையும் வழங்கக்கூடும். இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இணைக்கப்பட்ட உலகின் விளிம்பில்தான் இருக்கிறார்கள் என்கிற நிலையில் இந்த மசோதா உதவியாக இருக்கக் கூடும்.
ஆனால் சிக்கல்கள் நீடிக்கின்றன: தொலைத்தொடர்பின் விரிவான வரையறை பலவிதமான சேவைகளை அதன் வரம்பிற்குள் கொண்டு வரும் நிலையில் அவற்றின் மீதான அரசு கொண்டிருக்கும் அதிகாரம், தனியுரிமை மற்றும் கண்காணிப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. இது அரசு உளவுப் பார்த்ததாக கடந்த கால குற்றச்சாட்டுகளை கணக்கில் எடுக்கும் அனுமானத்தின் அடிப்படையிலான கவலை மட்டுமல்ல. வரைமுறையற்று தேவையற்ற மின்னஞ்சல் குப்பைகள் பற்றிய கவலைகளை எதிர்கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில் இந்த மசோதா முன்மொழியும் தீர்வுகளுக்கு தனியுரிமை சார்ந்த கூடுதல் சமரசங்கள் தேவைப்படுகின்றன. கண்காணிப்பு சீர்திருத்தம் மற்றும் இணைய முடக்கம் போன்ற பிரச்சினைகள் பெரிய அளவிலான தாக்கங்களைக் கொண்டிருக்கும் நிலையில், அவை சர்ச்சைக்குரியவை என்பதாலேயே தவிர்க்கப்படக் கூடாது. மசோதாவின் உள்ளடக்கம் வழங்கும் பரந்த அதிகாரங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இந்த கவலைகளை திறந்த மனதுடன் தீர்க்க வேண்டும். கடைசி வரைவு பொதுவெளியில் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டபோது, தொழில்துறை அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பதில்கள் பரிசீலனைக்குட்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் நல்ல நோக்கங்களை பொதுமக்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் ஆலோசனையுடனும் விதிகளை உருவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்தின் பல விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறையால் அறிவிக்கப்பட்ட துணைச் சட்டம் தேவைப்படும் நிலையில் இது மிகவும் முக்கியமானது. 19ம் நூற்றாண்டில் தந்தி சட்டம் முதன்முதலில் நிறைவேற்றப்பட்டதிலிருந்து தொலைத்தொடர்பு நிலப்பரப்பு வியத்தகு முறையில் வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இணைய உலகின் ஒழுங்குமுறை மற்றும் சட்ட உருவாக்கம், இந்த டிஜிட்டல் பெருக்கத்தோடு வரும் அனைத்து சிக்கல்களையும் விரிவாக நிவர்த்தி செய்ய வேண்டும்.