வகுப்புவாத ரீதியில் பலவீனமாக இருக்கும் கோயம்புத்தூரில் ஒரு கோவிலின் அருகே ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த விடியற்காலைக்கு முந்தைய கார் குண்டு வெடிப்புக்கு பின்னால் நடக்காமல் போன ஒரு தீவிரவாத சதித் திட்டம் இருந்ததற்கான ரகசிய சமிக்ஞைகளை கண்டறிந்திருக்கிறார்கள் புலனாய்வாளர்கள். இந்த விவகாரத்தை சரியான வகையில் அணுகவில்லையென்றால், சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசியல் தளங்களில் ஏற்கனவே இருக்கும் பதற்றங்களை இது அதிகரிக்கும். இந்த குண்டுவெடிப்பில் இறந்து போன கார் ஓட்டுனரும், குண்டுவெடிப்பின் மூளையாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுபவருமான ஜமீஷா முபின் தேசிய புலனாய்வு முகமையின் சந்தேக வளையத்தில் சற்று காலம் இருந்தார் என்கிற தகவல், ஒரு தீவிரவாத சதித் திட்டத்தை அறிந்து தடுப்பதில் உளவுத்துறையின் திறன்களை நிச்சயம் கேள்விக்குள்ளாக்கும். முபின் தீவிரவாத தாக்குதலை செயல்படுத்த எண்ணியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு முன்பாகவே எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறியது, இயற்கையின் நற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கடந்த மாதம் வலதுசாரி அமைப்புகள் மற்றும் நிர்வாகிகளை குறி வைத்து நடந்த தொடர் மொலடொவ் காக்டெயில் தாக்குதல்களையடுத்து இந்த விவகாரம் நடந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 24 மணி நேரத்துக்குள் பெரிய சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியதும், சதி வலையில் ஈடுபட்டதாக சந்தேகப்படப்பட்டவர்களை அடையாளப்படுத்தியதும் காவல்துறைக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம். கிட்டத்தட்ட அரை டஜன் சந்தேகத்திற்குரிய நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது புலனாய்வு திறன்களுக்கான சாட்சியாக இருக்கிறது. குண்டு வெடிப்புக்கு பிந்தைய காவல்துறையின் பாராட்டுதலுக்குரிய செயல்பாடுகளுக்குப் பிறகும், பிரச்னையின் தீவிரம் மற்றும் அரசியல் விளைவுகளை கருத்தில் கொண்டு தேசிய புலனாய்வு முகமைக்கு விசாரணையை மாற்ற பரிந்துரைத்ததன் மூலம் சரியான விஷயத்தையே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார். தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டதில் நிகழ்ந்த நான்கு நாட்கள் தாமதத்தைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் அது கள நிலவரத்தைப் பற்றிய தனிப்பட
மதிப்பீடு மற்றும் பார்வை சார்ந்த விஷயம். திரு.ஸ்டாலினுக்கு அரசியல்ரீதியாகவும் சில சவால்களை இந்த விவகாரம் முன் வைத்திருக்கிறது. அரசியல் பிரச்னைகளுக்கு வன்முறையை பதிலாக்கும் தீவிரவாதிகளை எந்தவிதமான சமரசத்துக்கும் இடமளிக்காமல் நிர்வாக ரீதியாக கையாள வேண்டிய தேவை மற்றும் சிறுபான்மையினரை காக்க வேண்டிய கடமை இரண்டுக்கும் இடையில் அவர் நுட்பமாக ஒரு சமநிலையை கைகொள்ள வேண்டும். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவும் அவருக்குத் தேவை. அந்த கட்சிகளும் இந்த சமநிலைக்கான தேவையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 1998 கோவை தொடர் குண்டு வெடிப்புகளின் காரணமாக தீவிரவாதத்தை மென்மையாக கையாள்வதாக ஒரு விமர்சனம் திமுக மீது இருக்கிறது. ஆனால் அதிமுக ஆட்சி செய்த காலகட்டத்திலும் கூட தீவிரவாதம் தனது கொடும் முகத்தை காட்டியிருக்கிறது (1993 ஆர்.எஸ்.எஸ் அலுவலக தாக்குதல்). இந்த பிரச்னையை ஒரு உந்துதளமாகக் கொண்டு மதரீதியான உணர்வுகளை தூண்டும், வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். பா.ஜ.கவின் ஒரு சில தலைவர்கள் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம் இந்த நிலைமையை பயன்படுத்திகொள்ள அக்கட்சி நினைக்கிறது. இது அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்திருப்பதுடன், அரசியல்ரீதியாக திரள வேண்டிய தேவையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இப்போது உண்மையில் தேவை, தேசிய புலனாய்வு முகமையும் அரசும் சதிகாரர்களை உறுதியாக கையாள்வதுதான். மேலும், தீவிரவாதம் அரசியல்ரீதியாக மதரீதியாக மாறுவதற்கான வாய்ப்பை தராமலும் இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - October 29, 2022 11:31 am IST