ஜூன் 2024 வரை ஜே.பி.நட்டாவின் தலைமைப் பொறுப்பை நீட்டித்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற் குழு அடுத்த பொதுத் தேர்தலுக்கான தனது செயல் திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறது. அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் தோற்றாலும், திரு.நட்டாவின் தலைமையின் கீழ் கட்சியின் தேர்தல் செயல்பாடுகள் சிறப்பானதாகவே இருந்திருக்கின்றன. பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை குறித்து “மரியாதையும் கௌரவமும் நிறைந்த ஒன்று” எனவும் கூடவே “மிகப் பெரிய பொறுப்பு” எனவும் திரு.நட்டா சொல்லியிருக்கிறார். பா.ஜ.கவைப் பொருத்தவரையில் தலைவரின் பதவி என்பது அந்த பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது. கட்சியில் இறுதி முடிவு எடுப்பவர்களாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதுதான் திரு.நட்டாவின் வலிமை. இது கட்சிக்கு ஒன்றும் புதிதில்லை. கட்சித் தலைவர்களைவிட அ.பி.வாஜ்பாயியும் எல்.கே. அத்வானியும் பலம் பொருந்தியவர்களாக இருந்திருக்கிறார்கள். 2023ல் நடக்கவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெறும் நோக்கில் உழைக்க அதன் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது கட்சி. திரிபுராவில் தனித்தும் நாகாலந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணியோடும் அதிகாரத்தில் இருக்கிறது பா.ஜ.க. இந்த மூன்று மாநிலங்களுக்கும் புதன் கிழமையன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக தெலங்கானாவில் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான ஒரு தீவிரமான போட்டியாளராக உருவாகவும் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் ராஜஸ்தானிலும் சட்டீஸ்கரிலும் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் கட்சி முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒரு புதுவிதமான அரசியலை முயற்சித்து வரும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் 2023ல் முதல் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
“ஒரு நிறைவான அரசியல் மற்றும் நிறைவான நிர்வாகத்தை” அது கடைபிடிப்பதாக பா.ஜ.க. சொல்லியிருக்கிறது. பல்வேறு தரப்பினரையும் இலக்காகக் கொண்ட அரசுத் திட்டங்கள் பற்றிய தீவிரமான பரப்புரைகளைப் பற்றி அப்படி சொல்லியிருக்கலாம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரிகள், ரஃபேல் பாதுகாப்பு ஒப்பந்தம், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு என எந்தவொரு தவறான நடவடிக்கையும் சர்ச்சையும் கட்சியை பாதிக்கவில்லை என்று தேசிய செயற்குழுவில் மகிழ்ச்சியுடனேயே குறிப்பிட்டது கட்சி. மோதி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த எதிர்கட்சிகள் மேற்கொண்ட தோல்வியடைந்த முயற்சிகள் என்று கட்சி அவற்றைக் குறிப்பிட்டது. இந்திய ஒற்றுமைப் பேரணி மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பா.ஜ.கவுக்கு எதிரான ஒரு புதிய அரசியலை நிறுவ முயற்சித்தாலும் எதிர்கட்சி அரசியல் குழப்பத்திலும் போட்டிகளிலும் சிக்கியிருக்கிறது. மீண்டும் தொடர் வெற்றிகளையும் இறுதியில் 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியையும் பெற திரு.மோதியின் செல்வாக்கையே பா.ஜ.க. அதிகம் நம்பியிருக்கிறது. அணிதிரட்டுவதற்கும் கட்சி ஒரு தெளிவான உத்தியை வைத்திருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின - பழங்குடியினர் மற்றும் தலித் மக்களை சென்றடைய கட்சியின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து திரு.நட்டா வலியுறுத்திப் பேசினார். பாரம்பரியமாக உயர்சாதி ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்றாலும், பா.ஜ.க. பிற பிரிவுகளிலும் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. தன்னை விரிவுப்படுத்திக் கொள்ள மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற புதிய பகுதிகளின் மீதும் தனது கவனத்தை செலுத்துகிறது. வெற்றி பா.ஜ.கவை மந்தமாக்கிவிடவில்லை.
This editorial was translated from English, which can be read here.