விளையாட்டுத் துறை நிர்வாகிகள் செய்திகளில் இடம் பெறும்போது, பெரும்பாலும் அவை சரியான காரணங்களுக்காக இருப்பதில்லை. கடந்த சில மாதங்களாகவே இந்திய விளையாட்டுத்துறை நிர்வாகிகள் மிக அதிகமாகச் செய்திகளில் இடம் பெறுகிறார்கள். ஒருவர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்படுவது, இன்னொருவர் பதவி விலக நிர்பந்திக்கப்படுவது அல்லது இன்னொருவர் ஒரு பதவிக்கு உரிமை கோருவது போன்றவை நிகழாமல் ஒரு நாள் முடிவுக்கு வருவது அரிதாக இருக்கிறது. சமீபத்திய நிகழ்வில், செய்திகளில் இடம் பெற்றிருக்கும் விளையாட்டுத்துறை நிர்வாகி அனில் கன்னா. இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தற்காலிக தலைவராக இருந்த அவர் புதன் கிழமையன்று பதவி விலகினார். ஜூலையில் நரீந்தர் பத்ரா பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட பிறகு இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தற்காலிக அல்லது இடைக்காலத் தலைவரை அங்கீகரிக்க முடியாது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்திய ஒலிம்பிக் அமைப்புக்கான தேர்தல் வெகு காலமாக நடத்தப்படவில்லை என்பதில் சர்வதேச ஒலிம்பிக் குழு அதிருப்தியில் இருக்கிறது. இதன் பொருட்டு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சர்வதேச ஒலிம்பிக் குழு இந்தியாவைத் தடை செய்யலாம். அதன் பிறகு ஒலிம்பிக் விளையாட்டுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் இந்திய வீரர்கள் இந்தியாவின் பிரதிநிதிகளாக ஆட முடியாது. தவிர, சர்வதேச ஒலிம்பிக் குழுவிடமிருந்து இந்தியாவுக்கு நிதியும் கிடைக்காது. அப்படியொரு தடை அமலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்று ஒரு மாதத்திற்கு முன்புதான் கோகுலம் கேரளா கால்பந்து அணி அறிந்து கொண்டது. ஆசிய கால்பந்து கோப்பைக்கான பெண்கள் பிரிவு போட்டியில் பங்கு கொள்ள உஸ்பெகிஸ்தான் சென்ற விளையாட்டு வீரர்கள் அதில் பங்கெடுக்காமல் நாடு திரும்ப வேண்டியிருந்தது. இதற்குக் காரணம், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பை சர்வதேச கால்பந்தை நிர்வகிக்கும் அமைப்பான ஃபிஃபா தடை செய்ததுதான்.
தடை விலக்கப்பட்டு, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு தேர்தலையும் நடத்திவிட்டது. ஆனால் ஹாக்கி, டேபிள் டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகள் இப்போதும் நீதிமன்றங்களால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய விளையாட்டுத்துறை நிர்வாகத்தின் தற்போதைய குழப்பமான சூழலுக்கு முக்கியமான காரணம், 2011இல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தேசிய விளையாட்டு வளர்ச்சி விதிகளை ஏற்றுக்கொள்வதில் பல விளையாட்டுத்துறை அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு உள்ள தயக்கம்தான். அந்த விதிகள் நல்நோக்கம் கொண்டவை. நிர்வாகியின் வயது மற்றும் பதவிக் காலம் குறித்த கட்டுப்பாடுகளை விதித்ததது, விளையாட்டுக் கூட்டமைப்புகள் ஒரு சிலரின் அவற்றுள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாக இருப்பவர்களின், தனிநபர் சாம்ராஜ்ஜியங்களாக இருப்பதைத் தவிர்க்க உதவும். முன்னெப்போதையும் விட இந்திய விளையாட்டுத்துறை நம்பிக்கையளிப்பதாக உள்ள இந்தக் காலகட்டத்தில் – கிரிக்கெட்டை தவிர இந்த நாடு தருவதற்கு நிறைய இருக்கிறது என்பதை டோக்கியோ ஒலிம்பிக்ஸ், பிர்மிங்ஹாம் காமன்வெல்த் ஆட்டங்கள், தாமஸ் கோப்பை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போன்றவை நிரூபித்தன – நிர்வாகம் ஒழுங்காகச் செயல்பட வேண்டும். புதிய திட்டங்களோடு வரும் புதிய நிர்வாகிகளுக்குப் பதவியில் இருப்பவர்கள் நயத்தகு முறையில் வழிவிட வேண்டும். தவிர, முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்களை முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளில் அனுமதிக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.