உலகெங்கும் கிட்டத்தட்ட 1.35 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரவியுள்ள நிலையில், புலம்பெயர்ந்த மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். பெரும்பாலானவர்கள் குறுகிய கால பணிகளுக்காக நாட்டை விட்டுச் செல்கிறார்கள். இந்தியாவின் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைகளை அவர்கள் தவற விட முடியாது. தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு குடிமக்களை அவர்கள் எங்கு வெளிநாட்டு வாக்காளராக பதிவு செய்துள்ளார்களோ, அந்த தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கிறது. நேரடியாக வந்துதான் வாக்களிக்க வேண்டுமென்பதால், அதற்கான செலவின் காரணமாக வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை. இது 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் அத்தகைய வாக்காளர்கள் எவ்வளவு பேர் வாக்களித்தார்கள் என்ற எண்ணிக்கையிலிருந்தே தெளிவாகத் தெரியும். பதிவு செய்திருந்த வெளிநாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கையே மிகக் குறைவுதான். வெறும் 99,844 பேர். இதில் 25,606 பேரே வாக்களித்தார்கள். 2014ல் வெளிநாட்டு வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தக்கூடிய வழிகளைப் பற்றி ஆராய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு அந்த நபருக்கு பதில் வேறொருவர் வாக்களிப்பதுதான் (பிராக்சி வாக்களிப்பு)தான் சாத்தியமான ஒரு வழி என்று முடிவு செய்தது. ஆனால் அந்த யோசனைக்கு சில எதிர்கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்தன. இந்த முறையை கொண்டு வருவதற்காக 16வது மக்களவையில் (2014-19) ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அது காலாவதியாகிவிட்டது. 2020ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி கோரி மத்திய அரசை நாடியது தேர்தல் ஆணையம். ஏற்கனவே ராணுவ பணிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அந்த முறை அமலில் இருக்கிறது. அதாவது மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குசீட்டு முறை. இதை பதிவிறக்கம் செய்து தங்களது வாக்கை செலுத்தி தொகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிக்கு திருப்பி அனுப்பலாம். மேலோட்டமாக பார்த்தால், தூதரக அதிகாரிகள் மீது சுமையை அதிகரிக்க கூடும் என்றாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்குமுறையை அனுமதிப்பதுதான் நல்ல நடவடிக்கையாகவே இருக்கும். வாக்குகளை செலுத்துவதற்கு பதிலிகளை நியமிப்பதைவிட இது நம்பகமான ஒரு வழியும் கூட. ஒவ்வொரு தொகுதியிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கும் ராணுவ வீரர்களுக்கு இந்த முறை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பொறுத்தவரை சில மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 2014ல் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த உரையாடல்களில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் ஒரு வசதி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கிடைக்குமா என்கிற கேள்வியை சில கட்சிகள் எழுப்பியிருந்தன. ஆனால் இந்தியாவுக்குள்ளான போக்குவரத்து செலவோடு ஒப்பிடும்போது வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து செல்லும் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மின்ணனு தபால் வாக்கெடுப்பு வசதியை அளிப்பது ஒரு நியாயமான விஷயமாகவே இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் தங்களது குடிமக்களுக்கு பல ஜனநாயக நாடுகள் இந்த வாய்ப்பை தருகின்றன. ஆனால் இந்தியா கையாள வேண்டியது போன்ற ஒரு எண்ணிக்கையை எந்தவொரு நாடும் கையாள வேண்டியதில்லை என்பதும் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை விரிவுபடுத்தும் போது கையாளப்பட வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், நீண்ட காலத்திற்கு புலம்பெயர்ந்தவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதுதான். காரணம், அவர்கள் இருப்பிடம் சார்ந்து அந்தத் தொகுதிகளுக்கு மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற திட்டம் இதில் பலனளிக்காது. அதனால் தபால் வாக்குமுறை உண்மையில் செயல்பாட்டுக்கு வந்தால், நாட்டிலிருந்து எவ்வளவு காலம் வெளியே வாழ்கிறார்கள் என்பதை பொறுத்து வாக்காளர்களுக்கான தகுதி விதிகள் தெளிவாக தீர்மானிக்கப்பட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.