1980களில் இலங்கையின் உள்நாட்டு பிரச்னையில் இந்தியாவின் மோசமான தலையீட்டோடு தொடங்கிய துயரமான அத்தியாத்தின் முடிவைக் குறிக்கிறது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சியிருந்த ஆறு பேரின் விடுதலை. விடுதலைப் புலிகளின் தலைமையால் கட்டளையிடப்பட்டு, தற்கொலை குண்டுவெடிப்பில் நிகழ்த்தப்பட்ட அந்த படுகொலை கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடைசியில் குற்றவாளிகள் என்று முடிவு செய்யப்பட்ட ஏழு பேரின் நீண்ட சிறைவாசம் காலப்போக்கில் பொதுமக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரப்புரை செய்யத் தொடங்கின. 2014ல் மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக குறைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2018ல் அரசியல் சாசனப் பிரிவு 161ன் கீழ் அவர்களை விடுதலை செய்து தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் மீது அப்போதிருந்த ஆளுநர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒருவழியாக அதை அவர் மத்திய அரசுக்கு அதன் கருத்துக்காக அனுப்பி வைத்தார். இந்த வருடத் தொடக்கத்தில் ஆளுநரின் செயலுக்கு எந்தவொரு அரசியல் சாசன அடிப்படையும் இல்லை என்பதை கண்டறிந்த நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி அ.ஞா. பேரறிவாளனின் விடுதலைக்கு உத்தரவிட்டது. இப்போது அந்த நற்பயன் மற்றவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஒரு சாரார் நம்புவதுபோல இது கொண்டாட்டத்துக்கான நேரமில்லை. ஆனால் புலம்புவதற்கான நேரமும் இல்லை. சதியை தீட்டியவர்கள் இறந்துவிட்டார்கள். இடையில் செயல்பட்டவர்களும் உள்ளூரில் ஒத்துழைப்பு நல்கியவர்களும்தான் கைது செய்யப்பட்டார்கள். 31 வருடங்கள் சிறை என்பது போதுமான தண்டனைதான் என்கிற உணர்வு இருக்கவே செய்கிறது.
அவர்களது விடுதலை, ஒரு துடிப்பான சட்ட அமைப்பில் உரிய செயல்முறையின் உச்சகட்டம். அந்த அமைப்பிலும் சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. 1998ல் குற்றம் சாட்டப்பட்டிருந்த 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்த ஒரு விசாரணை நீதிமன்றத்தின் சில்லிட வைக்கும் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்துக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சாட்சிகளை இன்னும் நிதானமாக மதிப்பிட்டதன் அடிப்படையில், 1999ல் 19 பேரை சதி திட்டத்துக்கான குற்றங்களிலிருந்து விடுவித்ததன் மூலம் அவர்களது விடுதலைக்கு வழி வகுத்தது உச்ச நீதிமன்றம். எஞ்சியிருந்த 7 பேரில் நான்கு பேருக்கு மரண தண்டனையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்கொலை குண்டு வெடிப்பாளர்களுக்கு உள்ளூர் துணையாக இருந்த நளினியின் மரண தண்டனை 2000த்திலேயே குறைக்கப்பட்டுவிட்டது. விடுதலைப் புலிகளின் உதவியோடு தமிழ்நாட்டில் தனியாக ஆயுதமேந்திய பிரிவினை இயக்கத்தை நடத்த விரும்பிய ரவிச்சந்திரனுக்கும் தண்டனை குறைக்கப்பட்டது. சிறை அமைப்பும் கூட அதன் சாதகமான பக்கத்தை காட்டியது. பெரும்பாலானவர்கள் புதிய கல்வி தகுதிகளை பெற்றிருந்தனர். இலக்கிய தேடல்களில் கூட ஒருவர் ஈடுபட கூடிய சூழல் இருந்தது. சட்ட நடைமுறைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதங்களின் அடிப்படையில் அவர்களது விடுதலை சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் அதே நேரம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நிறைய துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட கூடாது. அவர்களுக்கான உதவியோ ஆறுதலோ கடந்த ஆண்டுகளில் மிக குறைவாகவே கிடைத்தன. தண்டனை குறைப்பு முறை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான விதிமுறைகள் பற்றிய புதிய மதிப்பீடுகளுக்கான சூழலை இந்த துயர அத்தியாயம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த குறிப்பிட்ட வழக்கில் வெளிப்படையாக விடுபட்டவற்றைப் பார்க்கும்போது, குற்றவாளிகளின் தரப்பில் குற்றவுணர்வுக்கான வருத்தம் ஏதோவொரு அளவில் அறிகுறியாக இருப்பது ஒரு முன் கூட்டிய தேவையாக இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.