அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 74வது ஆண்டு நிறைவுக்கு முன்னதாக நிகழ்த்தப்பட்ட தனது முதல், பாரம்பரிய குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசின் அடிப்படை லட்சியங்களை வலியுறுத்தினார். நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடி பெண் என்ற முறையில் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர், ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரமளித்தல் போன்ற குடியரசின் தொடர்ச்சியான பயணத்தின் ஒரு அடையாளமாக இருக்கிறார். நவீன தேசத்தின் மரபணுக்களில் அதன் நிறுவனத் தலைவர்கள் பதித்துவைத்த சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற விழுமியங்கள் எல்லாம் பண்டைய நாகரீகத்திடமிருந்து பெறபட்டவையே. குடியரசின் இந்த தன்மையை - புதுமை மற்றும் பழமை, பாரம்பரியம் மற்றும் நவீனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை – திருமிகு. முர்மு வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியது போல ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒற்றுமையான, அனைவரையும் ஒருங்கிணைத்த போராட்டம், “சுதந்திரத்தை வென்றெடுப்பதோடு நமது சொந்த விழுமியங்களை மீண்டும் கண்டடைவதையும் பொருட்டுதான்” நடந்தது. “இந்தியாவின் சாராம்சம்” என்பதை திருமிகு. முர்மு வலியுறுத்திப் பேசினார். ஒரே நேரத்தில் அது ஆழமானதாகவும் எளிதில் கணிக்கக் கூடியதாகவும் இருந்தது. “நாம் வென்றிருக்கிறோம். காரணம், பல மதங்களும் மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை. மாறாக ஒன்றிணைத்திருக்கின்றன.” இந்த கோட்பாட்டின் மீதான அர்ப்பணிப்புதான் நவீன தேசத்தை நீடிக்க வைத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பரிணாம வளர்ச்சியடைந்து, மாற்றங்களுக்கு உள்ளான நீண்ட, பண்டைய நாகரீகம் இது.
சிந்தனைகளும் யோசனைகளும் தோன்றத்தோன்ற, குடியரசு என்பது தொடர்ச்சியாக உருவாகி வரும் ஒரு செயல்பாடு என்றுகூட வாதிடலாம். புதிய லட்சியங்களால் நாடு ஊக்கமடையும்போது, சில அடிப்படை கொள்கைகள் வெற்றிக்கும் வாழ்வதற்குமான காலத்தின் அழியாத குறியீடுகளாக இருக்க வேண்டும். பல துறைகளில் குறிப்பாக பொருளாதாரத்தில் இந்தியாவின் வெற்றிகளை கொண்டாடும் அதே வேளையில் திருமிகு. முர்மு இந்த குறியீடுகளையும் வலியுறுத்தினார். சர்வதேச விவகாரங்களில் இந்தியா ஒரு செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்திருப்பதை குறிப்பிட்ட அவர், சர்வோதயா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் – அதாவது அனைவருக்குமான மேம்பாடு மற்றும் தற்சார்பு – ஆகிய விழுமியங்கள் முந்தைய அரசுகளைப் போலவே இப்போதிருக்கும் அரசை வழிநடத்துவதை பற்றி பேசினார். அடக்குமுறையும் கொடூரமான வறுமையும் பெரும்பாலான மக்கள் பிரிவினரை தொடர்ந்து நிலைகுலைய செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மேம்பாட்டை பற்றி நினைவு கொள்ளும் சந்தர்ப்பங்களில் இந்தியா இதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பல்வேறு கட்டங்களில், அரசியல் சாசனமும் தேசிய இயக்கமும் முன்வைத்த விழுமியங்களுக்கு அரசியல் சர்வாதிகாரம், குறுங்குழுவாத தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றால் சவால்கள் தோன்றியிருக்கின்றன. ஆனால் இந்தியா அவற்றை வெற்றிகொண்டது. இது மன நிறைவைத் தருகிறது என்றாலும் தொடர்ச்சியான கண்காணிப்பின் தேவையையும் முன்வைக்கிறது. குடியரசின் அடிப்படை கொள்கைகளை திருமிகு.முர்மு வலியுறுத்தி இருப்பதும் சக குடிமக்களுக்கு அவர் அளித்த நம்பிக்கையும், அரசியல் சாசனத்தின் புனிதத் தன்மை தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு காலகட்டத்தில் வந்திருக்கிறது. அரசியல் சாசனம் நிறுவும் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக அந்த அரசியல் சாசனத்தைப் பற்றிய விவாதங்கள் தேவை என்றாலும், அதன் அடிப்படை கொள்கைகளை கடைபிடிப்பதுதான் இந்திய மக்களை ஒற்றுமையாக வைக்கிறது. திருமிகு.முர்மு அதையே சொன்னார்.
This editorial was translated from English, which can be read here.