ஆகஸ்ட் 2015ல் கைழுத்திடப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் நிபந்தனைக்குட்பட்ட பேச்சுவாரத்தையில் மீண்டும் ஈடுபடலாம் என்கிற கிளர்ச்சி அமைப்பான நாகலிம் தேசிய சோஷலிச கவுன்சிலின் (நா.தே.சோ.க- இசாக்-முவாஹ் கோஷ்டி) முடிவு வரவேற்கத் தகுந்த ஒன்று. சமாதான உடன்படிக்கைக்கான காலக்கெடுவாக விதிக்கப்பட்டிருந்த அக்டோபர் 2019 தொடங்கி பேச்சுவார்த்தையில் நிலவி வந்த தேக்கநிலையை அது உடைக்கிறது. நா.தே.சோ.க (இ.மு) மற்றும் நாகா தேசிய அரசியல் குழுக்களின் பிற நாகா அமைப்புகள் இணைந்து விடுத்த அறிக்கையில் “வெறுப்பு மனப்பான்மையை” கடப்பதென்று உறுதி பூண்டதும், உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை “முன்னோக்கி நகர்த்துவதற்கான உரையாடலில் ஈடுபட தயாராக இருப்பதாகவும்” சொல்லியிருப்பது, பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான சாத்தியங்களுக்கு ஊக்கமளித்தன. நா.தே.சோ.க (இ.மு) பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நடத்திய சந்திப்பின் காரணமாக – பலன் விளைவித்த நகர்வு அது - பேச்சுவார்த்தைக்கான மேடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2019 முதல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது அந்த செயல்பாடு. 2015ல் கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு பிறகு நிகழ்ந்த தவறுகள் என்ன என்பதை மத்திய அரசும் நா.தே.சோ.க (இ.மு)வும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவிர 1997ல் இரு தரப்புக்கும் இடையில் கையெழுத்தான மிக முக்கியமான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகான சிக்கல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
விரிவான சமாதான உடன்படிக்கை ஏற்பட விடாமல் தடுக்கும் ஒரு முக்கியமான கூறு, நாகா கிளர்ச்சியின் பிளவுப்பட்டத்தன்மை. அதனாலேயே மத்திய அரசு நா.தே.சோ.க (இ.மு) தவிர பிற குழுக்களையும் கையாள வேண்டியிருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல கிளர்ச்சியும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பலவீனமாகிவிட்டது. அதனால் பேரத்துக்குட்பட்ட ஒரு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளுக்கு வழி கிடைத்தது. இரண்டாவதாக நா.தே.சோ.க (இ.மு) உள்ளிட்ட பிற கலக அமைப்புகள் முன் வைத்த அகண்ட நாகலிம் என்கிற கோரிக்கை பிற மாநிலங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பேச்சுவார்த்தையை சிக்கலாக்கியது. ஏற்கனவே இருக்கும் இந்தியாவின் மாநிலங்களுக்கான எல்லைகளை மாற்றாமல் இருப்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், இனங்களுக்கிடையிலான உறவுகள் பிரச்னைக்குரியதாக இருக்கும் பிற வட கிழக்கு மாநிலங்களில் இது ஒரு பெருந்தீயை மூட்டிவிடும். உடன்படிக்கையை எட்டுவதற்கு பேச்சுவார்த்தையின் ரகசியத்தன்மை உள்பட மத்திய அரசு மேற்கொண்ட தந்திரங்கள் தேக்கநிலையில் ஒரு பங்காற்றியது என்றாலும் தனிக் கொடி மற்றும் நாகாவுக்கென்று அரசியல் சாசனம் போன்ற நா.தே.சோ.க (இ.மு)வின் பிடிவாதமான, சமரசத்துக்கிடமில்லாத கோரிக்கைகளும் தடைகற்களாக இருந்தன. முன்னாள் ஆளுநரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவருமான ஆர்.என்.ரவிக்கும் நா.தே.சோ.க (இ.மு)வுக்கும் இடையிலான பிரச்னை எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லை. மேற்சொன்ன பிரச்னைகளில் உள்ள கருத்து வேறுபாடுகளை நேரடியாக அரசுத்தரப்பும் நாகா அமைப்புகளும் சேர்ந்து கையாள வேண்டும். விளம்பரத்தின் பொருட்டு ஒரு தீர்வை உறுதியளிப்பது என்பது மட்டும் போதாது.
This editorial has been translated from English, which can be read here.