முதல்முறையாக, ஒரு விண்கலத்தை மோதவிடுவதன் மூலம், விண்கல்லின் பாதையை சிறிய அளவில் மாற்றுவதில் வெற்றியடைந்திருக்கிறது நாசா. செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 4:44 மணிக்கு டார்ட் (Double Asteroid Redirection Test - இரட்டை விண்கல் தடம்மாற்றும் சோதனை) என்கிற சிறிய விண்கலத்தை டைமோர்போஸ் என்ற விண்கல் மீது ஏவியது நாசா. டைடிமோஸ் என்கிற பெரிய விண்கல்லை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த 169 மீட்டர் அகலமான விண்கல் இது. இந்த இரண்டு விண்கற்களும் பூமியிலிருந்து 11.2 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் சூரியனை வலம் வந்து கொண்டிருந்தன. இரண்டு விண்கற்களுமே தமது வாழ்நாளில் 6.4 மில்லியன் கி.மீ தாண்டி பூமியை நெருங்கியிருக்க முடியாது என்பதால், அவை எவ்விதமான அச்சுறுத்தலையும் முன்னிறுத்தவில்லை. ஆனால் கைனெடிக் இம்பாக்டர் என்று சொல்லக்கூடிய இந்த தொழில்நுட்பம் வாயிலாக விரும்பத்தகுந்த அளவில் ஒரு விண்கல்லின் பாதையை மாற்ற தேவையான ஒரு உந்துதல் கிடைக்குமா என்பதை பார்க்கும் சோதனையாக இது இருந்தது. இந்த இரண்டு விண்கற்களையும் பத்து நாட்களுக்கு மேல் ஆராய்ந்த பிறகு, சிறிய விண்கல்லின் பாதை சிறிய அளவில் மாறியிருப்பதாக நாசா அறிவித்தது: தொடக்கத்தில் டைடிமோஸை சுற்ற டைமோர்போஸ் எடுத்துக் கொண்ட காலம் 11 மணி நேரம் 55 நிமிடங்கள். இந்த சோதனையால் விளைந்த தாக்கத்துக்கு பிறகு, சுற்று நேரத்தில் 32 நிமிடங்கள் மாற்றம் ஏற்பட்டு இப்போது அது 11 மணி நேரம் 23 நிமிடங்கள் என்கிற அளவிலேயே இருக்கிறது. பூமியை நோக்கி வரும் விண்கற்களை, அதனால் தாக்கம் ஏற்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே, கைனெடிக் இம்பாக்டர் தொழில்நுட்பம் மூலம் ஒரு உந்துதலைச் செலுத்தி பூமியிலிருந்து திசை திருப்புவது எப்படி என்பதை புரிந்து கொள்ளவே இந்த சோதனை. இது கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சியில்லை. மேலும் ஒரு எச்சரிக்கை: எல்லா விண்கற்களும் ஒரே மாதிரி இல்லை. அதனால் இந்த தொழில்நுட்பம் முழுமையாவதற்கு இன்னும் நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அமெரிக்கா மட்டும் இந்த சோதனையில் ஈடுபடவில்லை. பூமியைக் கடக்கவுள்ள 40 மீட்டர் அகலமுள்ள விண்கல்லான 2020 பிஎன்1ஐ 2026க்குள் திசைதிருப்ப சீனாவும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. சிறிய விண்கல் மீதான உராய்வுகூட மிகத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியின் மீது விழுந்த 10 கிமீ அகலமான விண்கல்லின் தாக்கம் எப்படி பூமியின் 75 சதவிகித தாவர, மிருக உயிர்கள் அழிந்துப் போவதற்கு காரணமாக இருந்தது என்பதற்கான நினைவுறுத்தலாக சிக்சுலப் பள்ளம் (Chicxulub crater) இருக்கிறது. 100 மீட்டர் அகலமான விண்கலுடனான உராய்வு ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தில் சென்னை போன்ற ஒரு நகரம் அழிந்துவிடக்கூடும். மிக அதிக கனிம வளங்கள் கொண்ட விண்கற்களை திசைத்திருப்பி அவற்றை தோண்டி எடுப்பதற்கு வசதியான இடங்களுக்கு அருகில் கொண்டு வர இந்த உத்தியை பயன்படுத்த முடியுமா என்பது இன்னொரு கேள்வி. இதுவரை எந்தவொரு நாடும் இதை வெளிப்படையான இலக்காக வைத்திருக்கவில்லை. ஒரு விண் பொருளின் போக்கை மாற்றும் நாசாவின் இந்த முதல் நடவடிக்கை, ஒரு புனைவு அல்லது திரைப்படத்துக்கான சரியான ஒரு கரு. வெகு சமீபத்தில் “டோண்ட் லுக் அப்” என்கிற திரைப்படம் நேரடியாக இந்த கருவைக் கையாண்டது. ஆனால் பூமியின் மீது உயிர்களுக்கான அச்சுறுத்தல்களாக பல விஷயங்கள் இருக்கின்றன. காலநிலை மாற்றம் உடனடியான, திட்டவட்டமான ஒரு அச்சுறுத்தல். பொறியியல் மற்றும் அறிவியலின் இந்த ஆற்றலை நிறுவுவதன் மூலம் அதை, பிற பேரழிவுகளின் தீவிரமான தாக்கத்தை தடுப்பதற்கான ஒரு வழியையும் கண்டடைய விரிவுப்படுத்த முடியும் என்று நம்பலாம்.
This editorial has been translated from English, which can be read here.