நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் பதவிக்காலம் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டது. 2017ஆம் வருடத்தில் தனது 37வது வயதில் “முழுமையான, தலைகீழ் மாற்றத்தை” கொண்டு வருவதாகச் சொல்லி பதவிக்கு வந்தார் இந்த தொழிற்கட்சித் தலைவர். சுமார் ஆறு வருடங்கள் கழித்து அவர் பதவி விலகும்போது, கொரோனா, கிரைஸ்ட்சர்ச்சில் நடந்த தீவிர வலது பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற நெருக்கடிகளை கையாண்ட விதத்திற்காக அவர் நினைவுக்கூரப்படுவார். தார்மீக விழுமியங்களிலும் ஒத்த உணர்வாற்றலிலும் வேரூன்றிய ஒரு தலைமைக்கான மாதிரியை திருமிகு. ஆர்டெர்ன் முன்வைத்தார். கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டை அவர் கையாண்ட விதம் ஒரு உதாரணம். தொற்றுநோயை அவர் அணுகிய விதம் தொடக்கத்தில் மிக பிரபலமாக இருந்தது. 2020ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் தொழிற்கட்சி பெரும் வெற்றியைப் பெறவும் அது உதவியது. கோவிட்-19 நோயால் ஏற்பட்ட நியூசிலாந்தின் தனிநபர் இறப்பு விகிதம், வளர்ந்த நாடுகளின் இறப்பு விகிதத்திலேயே மிகவும் குறைவு. அவர் தனது ராஜினாமாவை அறிவித்தவிதமும்கூட பாராட்டைப் பெற்றது. அவ்வளவு எளிதாக அதிகாரத்தைக் கைவிட விரும்பாத தலைவர்கள் உள்ள ஒரு உலகில், உயர் பதவியில் தொடர தனக்கு “போதுமான ஆற்றல் இல்லை” என்று அவர் சொன்னதுகூட அவரை தனித்துக் காட்டியது. திருமிகு. ஆர்டெர்னின் அமைச்சரவையில் கோவிட்டை கையாண்ட முன்னாள் அமைச்சரும் பிரதமரின் ஆலோசகருமான கிறிஸ் ஹிபிகின்ஸ் அதிபராக பதவியேற்று 2023 தேர்தலில் தொழிற்கட்சியை வழிநடத்துவார்.
திருமிகு, ஆர்டென் பாணியிலான தலைமை பரவலாக, குறிப்பாக உலகெங்கும் உள்ள தாராளவாத பிரிவினரிடையே பாராட்டைப் பெற்றிருந்தாலும், வாக்காளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா என்ற கேள்வியும் எழுகிறது. வாழ்வதற்கு மிக செலவுமிக்க நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து இருக்கிறது. 2017ல் ஒரு லட்சம் வீடுகளை கட்டுவதன் மூலம் நாட்டின் வீட்டு வசதிக்கான நெருக்கடியை கையாள்வதற்கு திருமிகு. ஆர்டெர்ன் உறுதியளித்தார். ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது. வீடுகளின் விலைகள் தொடர்ந்து மிக அதிகமாக இருக்கின்றன. தவிர அதிகமான பணவீக்கம் குடும்பங்களின் வரவு - செலவுத் திட்டங்களை பாதித்திருக்கிறது. குழந்தை வறுமையையும் (வளர்ந்த நாடுகளில் குழந்தை வறுமை விகிதம் அதிகமுள்ள நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று) சமத்துவமின்மையையும் (நாட்டின் வீட்டு நிகர மதிப்பில் கிட்டத்தட்ட பாதியை உச்சத்தில் இருக்கும் பத்து சதவீதம் பேரே கட்டுப்படுத்துகிறார்கள்) கையாள்வதற்கு அவர் தந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தவிர அண்டை நாடான ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்னரும் நியூசிலாந்தில் நீடித்த ஊரடங்குகளும் கோவிட் கட்டுப்பாடுகளும் திருமிகு. ஆர்டெர்னின் தொடக்ககால அபிமானிகளில் ஒரு பகுதியினரை அவரிடமிருந்து விலக்கிவிட்டன. அவரது செல்வாக்கில் ஏற்பட்ட சரிவு தொழிற்கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கக்கூடிய நிலையில், அவரது தலைமை பற்றி கட்சிக்குள்ளேயே நிறைய கேள்விகள் எழுந்தன. டிசம்பரில் நடந்த கருத்துக் கணிப்பின்படி, தொழிற்கட்சியின் ஆதரவு நிலை 33 சதவீதமாகவும் பிரதான எதிர்க்கட்சியான மத்திய-வலது தேசிய கட்சிக்கு 38 சதவீத ஆதரவு நிலையும் இருந்தன. இந்த பின்னணியில்தான் திருமிகு. ஆர்டெர்ன் தனது ராஜினாமாவை அறிவித்தார். ஆட்சியை நிலைநிறுத்தி பொதுமக்களின் மனநிலையை மாற்றுவதற்கு திரு. ஹிப்கின்ஸுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. கடினமான பணிதான். நியூசிலாந்தின் பொருளாதார கட்டமைப்பின் சிக்கல்களை கையாளும் அதே வேளையில் அதன் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு திருமிகு. ஆர்டெர்னின் ஒத்தகருத்தாற்றல் அரசியலை தீவிரமான பொருளாதார பார்வையோடு திரு. ஹிப்கின்ஸ் ஒன்றிணைக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.