தொடரும் யுக்ரைன் போருக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமையன்று யுக்ரைனின் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியது ஒரு முக்கியமான குறியீடு. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் மோதி அவ்வப்போது பேசி வந்திருக்கிறார். கடந்த மாதம் அவரை சந்தித்தும் இருக்கிறார். ஆனால், 20,000 இந்திய மாணவர்களை யுக்ரைனில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மட்டுமே திரு.ஸெலன்ஸ்கியுடன் உரையாடினார் மோதி. புதினுடனான சந்திப்புக்கு சில வாரங்கள் கழித்து, ‘இது போருக்கான காலம் இல்லை’ என்கிற திரு.மோதியின் கருத்தை மேற்கத்திய தலைவர்களோடு சேர்ந்து திரு.ஸெலன்ஸ்கியும் பாராட்டிய பிறகு, இப்போதைய தொலைபேசி உரையாடல் நடந்திருக்கிறது. பதிலுக்கு திரு.ஸெலன்ஸ்கியிடம் இந்த பிரச்னைக்கு ராணுவத் தீர்வு இல்லை என்று சொல்லியிருக்கிறார் திரு.மோதி. பொது வாக்கெடுப்பு நடத்தி, டானெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஸிஸியா, கெர்சன் போன்ற பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்வது என்கிற ரஷ்ய அரசின் முடிவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிப்பது என்று முடிவெடுத்த மறு வாரம் இந்த உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இருவரும் இது பற்றி பேசிக்கொள்ளவில்லை. அணுமின் நிலையப் பாதுகாப்புக்கு அளிக்கப்பட வேண்டிய தீவிரமான முக்கியத்துவம் பற்றியும், குறிப்பாக பன்னாட்டு அணுசக்தி முகமைக்கு கவலையளிக்கக் கூடிய ஸபோரிஸிஸியா அணுவுலை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அணு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வலியுறுத்தி யுக்ரேயினுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தையை நடத்துவதில் முகமை ஈடுபட்டிருக்கிறது. சமீபத்தில் இணைக்கப்பட்டதாக திரு.புதின் அறிவித்த ஓபிளாஸ்ட் மாகாணத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அணுவுலை. போர் நடக்கும் இடத்தின் அருகில் இருக்கும் மாகாணம் அது. “அணுவுலைகளுக்கு ஏதும் அபாயம் நேருமென்றால் அதனால் பொது சுகாதாரத்துக்கும் சுற்றுசூழலுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகள் உண்டாகும் என்பதை திரு.மோதி வலியுறுத்தினார்” என வெளியுறவுத்துறை
அமைச்சரவை சொல்லியிருக்கிறது. ஆனால் எந்தப் பகுதியிலிருந்து ஆபத்து வரும் என்று அது தெளிவுப்படுத்தவில்லை. “எந்தவொரு சமாதான முயற்சியிலும் பங்கெடுக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதை” திரு. மோதி தெரிவித்திருந்தார். பதிலுக்கு திரு.ஸெலன்ஸ்கி “ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய அதிபரோடு” தான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என்றார். கடந்த ஏழு மாதங்களாக போர் மற்றும் அதன் எதிர்வினையாக மேற்குலக நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடைகள், சர்வதேச பாதுகாப்பு, உணவு, எரிவாயு மற்றும் ஆற்றல் பொருட்கள் வினியோகம் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் திரு.மோதி செய்தது போல திரு.புதின் மற்றும் திரு.ஸெலன்ஸ்கி ஆகிய இருவருடனும் தொடர்பில் இருப்பது முக்கியம். சர்வதேச அமைதியை உண்டாக்குவதில் இந்தியா ஒரு சாதனையை படைத்திருக்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாடுகளை தெளிவாக்கி, அதை சர்வதேச நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தினால் மட்டுமே இந்தியா அதன் பங்கை ஆற்ற முடியும். எண்ணை மற்றும் பாதுகாப்பு வர்த்தம் மீதான மேற்குலக பொருளாதாரத் தடைகளுக்கான இந்த அரசின் எதிர்ப்பை தேச நலனை பாதுகாப்பது என்பதன் பொருட்டு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குடிமக்கள் மீது குண்டு வீசுவது, தான் ஆக்ரமித்த பகுதிகள் இணைக்கப்பட்டதாக அறிவிப்பது உள்ளிட்ட ரஷ்யாவின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்தவொரு வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கு கொள்ளவில்லை. இந்த நிலையில், ஐ.நாவின் சாசனத்தை பின்பற்றுவது பற்றியும் நிலப்பரப்பின் இறையாண்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றியும் திரு.மோதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கருத்துகளை எந்த நிலையிலும் பொருத்திப் பார்ப்பது கடினம்.
This editorial has been translated from English, which can be read here.