கேப்டவுனில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதன் அற்புதமான நிச்சயமற்றதன்மைகளுக்காக சரியாகவே கொண்டாடப்படும் ஒரு விளையாட்டில்கூட, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகவே இருந்தது. எட்டாவது சீசனில் ஆஸ்திரேலியா பெற்ற 6வது வெற்றி இது. பன்னிரெண்டு மகளிர் கிரிக்கெட் (ஒருநாள்) உலகக் கோப்பைகளில் ஏழு போட்டிகளில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் - துரதிர்ஷ்டவசமாக, இப்போது பெண்களுக்கான டெஸ்ட் போட்டிகள் மிகக் குறைவு - ஆஸ்திரேலியா அனைத்து அணிகளிலும் சிறந்த வெற்றி சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. டி-20 வடிவத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்த நிலையில், உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு வந்தது. மூன்று ஆண்டுகளில், ஒரு முறை மட்டுமே அந்த அணி தோற்றிருக்கிறது. அதுவும் டிசம்பரில் நவி மும்பையில் நடந்த சூப்பர் ஓவரில் இந்தியாவிடம் தோற்றது. 26 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் அபாரமான ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததும் இந்தியாதான். 2021ல் அந்த வெற்றி ஆஸ்திரேலியாவின் சொந்த நிலத்தில்பெறப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையிலும் இந்திய மகளிர் அணிக்கு அதன் வலுவான எதிரணியின் வெற்றிகளை தடுத்து நிறுத்த ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரையிறுதியில், ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கில் சிக்கி ரன் அவுட் ஆகும்வரை சவாலான இலக்கை துரத்துவதில் அவர்கள் சிறப்பாகவே ஆடினார்கள்.
ஆனால், மற்றொரு அரையிறுதியில், போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்க அணி அதன் மண்ணில் வைத்து இங்கிலாந்தை தோற்கடித்தது எதிர்பாராத அதிர்ச்சி. இந்த போட்டிக்கு ஏற்கனவே நல்ல கூட்டம் இருந்த நிலையில், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இடம்பெற்றிருந்தது நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தை முழுமையாக நிரப்பியது. கடைசி கட்டத்தில் தென்னாப்பிரிக்க பெண்கள் தடுமாறினாலும், அவர்களுடைய ஆட்டம்தான் அநேகமாக உலக கோப்பையின் அசலான கதையாக இருக்கும். சர்ச்சைக்கு மத்தியில்தான் அவர்கள் போட்டிக்குள்ளேயே நுழைந்தார்கள். கேப்டன் டேன் வான் நீகெர்க் உடற்தகுதியின் அடிப்படையில் நீக்கப்பட்டார் (அவர் இரண்டு கிலோமீட்டர் ஓட்ட அளவுகோலை 18 வினாடிகளில் அடையத் தவறிவிட்டார்). தவிர தொடக்க ஆட்டத்தில் இலங்கை அவர்களை திகைக்க வைத்தது. ஆனால், சுனே லூஸ் தலைமையில் அபாரமாக ஆடத் தொடங்கிய அந்த அணி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் தென்னாப்பிரிக்க அணி – ஆண், பெண் இரு தரப்பிலும் - என்ற பெருமையைப் பெற்றது. நிறவெறிக் கொள்கைக்கு பெரும் விலை கொடுத்த தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, மகளிர் விளையாட்டிற்கும் இது ஒரு பெரிய உத்வேகமாக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலா, பிளவுபட்ட தேசத்தை ஒன்றிணைக்க 1995 ரக்பி உலகக் கோப்பையை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
This editorial has been translated from English, which can be read here.