இந்திய கடற்படையின் எட்டு முன்னாள் வீரர்களுக்கு அக்டோபரில் வழங்கப்பட்ட மரண தண்டனையை குறைப்பது என்ற கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு, அந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு பெரிய நிவாரணமாக வந்திருக்கிறது. இந்த கருணைக்காக ராஜதந்திர வழிகளை பின்பற்றிக் கொண்டிருந்த அரசுக்கும் இது ஒரு நிம்மதியை அளிக்கிறது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இப்போது அரசும் அந்த வீரர்களின் குடும்பங்களும் கத்தாரின் உச்சபட்ச நீதி அமைப்பான காசேஷன் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்பு தங்கள் சட்ட வியூகத்தையும் வீரர்கள் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். நீதித்துறை மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வழிகளும் தீர்ந்துவிட்டால், அரசுக்கு மூன்று வழிகள் இருக்கும். முதலாவதாக, கத்தாரின் ஆளும் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் தண்டனையை மறுபரிசீலனை செய்ய தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அது தோல்வியுற்றால், கத்தார் ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் வழங்கியதுபோல வீரர்கள் இப்போதும் பொதுமன்னிப்பு கோரி கருணை மனு தாக்கல் செய்யலாம். தண்டனை பெற்ற நபர்களை மாற்றிக் கொள்வதற்கான 2015ஆம் ஆண்டின் இருதரப்பு ஒப்பந்தத்தின்படி சிறைவாச காலம் தெளிவுபடுத்தப்பட்டவுடன், வீரர்கள் இந்தியாவில் தங்கள் சிறைக் காலத்தை கழிப்பது மூன்றாவது வழி. ஆனால், தண்டனை மாற்றத்தக்கதல்ல என்பதை ஏற்கும் நிலையை இந்த வாய்ப்பு உருவாக்கும். இந்த செயல்முறையின் மூலம், வீரர்களுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்பதை வெளிப்படுத்த அரசு உயர் மட்டத்தில் ராஜதந்திர மற்றும் அரசியல் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோதி முதன்முறையாக வெளிப்படையாக கத்தாரின் தலைமையைத் தொடர்பு கொண்ட பிறகு இந்த நடவடிக்கை வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 1ஆம் தேதியன்று உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு - 28ல் அவர் எமீரை சந்தித்தார். ஆகஸ்ட் 2022ல் வீரர்கள் முதன்முதலாக கைது செய்யப்பட்ட பின்னர் உடனடியாக அத்தகைய அரசியல் தொடர்பை ஏற்படுத்தியிருந்தாலோ, அல்லது தோஹாவுக்கு ஒரு உயர்மட்ட தூதுக்குழு அனுப்பப்பட்டிருந்தாலோ கூடுதல் பயனுள்ளதாக இருந்திருக்குமா என்பது இப்போது ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கனடாவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எதிர்வினையாற்றியதைப் போல, இந்த வழக்குக்கு பகிரங்கமாக ஆரவாரமாக எதிர்வினையாற்ற வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக சில ஊடகங்களில் தோஹாவை குறிவைத்து வந்த செய்திகளின் பின்னணியில், இது மாதிரியான ஒரு நடவடிக்கை மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இந்த வீரர்கள் குற்றம்சாட்டப்பட்ட வழக்கு, இந்திய உளவுத் துறையுடன் எந்த வகையிலும் தொடர்புடையதாக இருக்குமென்றால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகள் குறித்தும் பொருத்தமான மறுஆய்வு செய்வது முக்கியம். காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி வரும் நிலையில், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு இந்த வழக்கை பணயமாக மாற்ற அனுமதிக்காமல் இருந்ததில் இந்தியாவும் நன்றாக செயல்பட்டிருக்கிறது. கத்தாரின் நுண்ணுணர்வுகளில் கவனம் காட்டியதோடு அமைதியான ஆனால் உறுதியான உந்துதலை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான, நிதானமான நிலைப்பாடு காரணமாக எட்டு இந்தியர்களும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.