சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிகளை ஊக்கப்படுத்த உதவும் வகையிலான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடற்ற இறக்குமதி செலவுகளை கட்டுப்படுத்துவதற்கும் உதவும் ஒரு புதிய வர்த்தக கொள்கையை வரும் வாரத்தில் அரசு வெளியிடுகிறது. தற்போதைய வர்த்தக கொள்கை 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்ளை நோயின் போது அமல்படுத்தப்பட்ட தேசிய அளவிலான ஊரடங்கு முடிந்த ஒரு வாரத்தில் அதன் ஐந்தாண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, அப்போது நிலவிய சூழ்நிலையை ஒரு காரணமாக முன்வைத்து ஒரு வருடத்துக்கு அந்த கொள்கை நீட்டிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 2021க்கு பிறகும் அதே கொள்கையை நீட்டித்ததும், குறிப்பாக செப்டம்பர் 30வரை நீடிக்கும் இப்போதுள்ள ஆறு மாத கால நீட்டிப்பும் புரிந்து கொள்ள முடியாதவை. பாரம்பரியமாக புதிய தொடக்கமாக கருதப்படும் புதிய நிதியாண்டில் செய்யாமல் நிதியாண்டின் மத்தியில் ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்துவதென்பது சரியான விஷயம் இல்லை. தவிர, கொரோனாவுக்கு பிறகான மீட்சியை ஊக்கப்படுத்தும் எஞ்சினாக ஏற்றுமதிகள் இருக்கும் ஒரு நிலையில் சரக்குகள் வெளியேறுவதை வலுப்படுத்தும் ஒரு கொள்கையை தள்ளி வைப்பது என்பது திகைப்பை ஏற்படுத்தியது. சீனாவின் மீதான சார்பை குறைக்க நினைக்கும் உலகை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள விரும்பும் இந்தியா, தனது வியூகத்தை தெளிவாக முன்வைத்தால், ஏற்றுமதியாளர்களும் (இறக்குமதியாளர்களும்)கூட தமது முதலீடுகளை முன்னதாகவே திட்டமிட உதவியிருக்கும். கடந்த ஜனவரியில், உலக வர்த்தக அமைப்புக்கு இணக்கமான ஏற்றுமதி ஊக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளூர் வரிகள் திருப்பியளிக்கப்பட்டன. ஆனால் அதற்கான விகிதங்கள் பல மாதங்கள் கழித்துதான் அறிவிக்கப்பட்டன. இதனால் சில துறைகள் விடுப்பட்டுபோயின. முற்றிலும் தவிர்த்திருக்கக்கூடிய இந்த நிச்சயமற்ற நிலையையும் மீறி, 2021-22ல் சரக்கு ஏற்றுமதிகள் 422 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை தொட்டது. இந்த வருடம் சரக்கு ஏற்றுமதிகள் குறைந்தது 450 பில்லியன் டாலரை எட்டும் என்று அரசு எதிர்பார்க்கும் நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்டில் வளர்ச்சி மிகக் குறைந்த ஒற்றை எண்ணிக்கையில் விழுந்தது. ஆனால் மார்ச் தொடங்கி இறக்குமதிகள் மாதம் தோறும் 60 பில்லியன் டாலருக்கும் மேல் இருந்திருக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களும் நம்பிக்கைக்குரிய குறியீடுகளாக இல்லை. விற்பனைக்கான ஆர்டர் புத்தகங்கள் நிறைந்திருந்தாலும், வாங்குபவர்கள் நிறைய பேர் பட்டுவாடாவை தள்ளிப்போட முனைகிறார்கள். இந்த புதிய கொள்கை ஏற்றுமதிகளுக்கு உதவும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். தவிர அதிகரித்து வரும் வட்டி விகிதங்களின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தொழிற்துறையின் முக்கியமான கவலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வருவாய்கள் எழுச்சியுடனேயே இருக்கும் நிலையில், மருந்தகம், இரசாயனம், இரும்பு மற்றும் எஃகு போன்ற முக்கிய, வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளை வரிக் குறைப்பு திட்டத்திலிருந்து விலக்கிவைக்கும் முடிவையும் பரிசீலிக்க வேண்டும். இந்தோ-பசிஃபிக் பொருளாதார கட்டமைப்பின் வர்த்தக பாதையிலிருந்து இப்போதைக்கு விலகியே இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நிறைய நாடுகள் கோரும் போதும் புதிய தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு தன்னிடம் ‘எந்த அலைவரிசையும்’ இல்லை என்று அரசு அழுத்தமாகச் சொல்வதும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் பேச்சுவார்த்தையை மெதுவாக எடுத்தச் செல்ல கோருவதும் தேவையில்லாதவை. உண்மையான இடர்பாடுகள் என்று எதுவும் இருந்தால் அதற்கு தீர்வை தேட வேண்டும். எஞ்சிய அலைவரிசையோடு இருக்கும் பொருளாதார கொள்கை வகுப்பவர்களை அரசு இந்த பணிகளில் ஈடுபடுத்தலாம். எவ்வளவு சிறிதாக இருந்தாலும் கூட்டணி நாடுகளாக மாறுவதற்கான சாத்தியமுள்ள நாடுகளை விரட்டுவதை விட, இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை வலியுறுத்த இன்னும் சிறந்த வழிகள் நிச்சயம் இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.