கட்டாய மதமாற்ற எதிர்ப்பு என்ற பெயரில் நீண்ட காலம் நீடிக்கும் வழக்குகள் நீதிமன்றங்களின் மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. நாட்டில் நடக்கும் மோசமான மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குஜராத் அரசு பின்தங்கியிருக்க விரும்பவில்லை. அதன் மத மாற்ற தடைச் சட்டத்தில் “நேரடியாகவோ மறைமுகமாகவோ” செய்யப்படும் மதமாற்றத்துக்கு மாவட்ட நீதிபதியிடமிருந்து முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும் என்கிற விதிக்கான தடையை நீக்க வேண்டும் என்று அது கோரியிருக்கிறது. குஜராத் மத சுதந்திர சட்டம் 2003 (2021ல் திருமணத்தால் மதமாற்றம் சேர்ப்பதற்காக திருத்தப்பட்டது) பிரிவு 5ஐ குஜராத் உயர் நீதிமன்றம் சரியாகவே தடை செய்திருந்தது. அதேபோல, மத மறுப்பு திருமணங்களை சட்ட விரோத மதமாற்ற நிகழ்வுகளாக கருதும் பிற விதிகளின் செயல்பாடுகளையும் அது நிறுத்தி வைத்தது. முன்கூட்டிய அனுமதி பெறும் விதி என்பது ஒருவர் தன்னுடைய மத நம்பிக்கை அல்லது நம்பிக்கையில் மாற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்த ஒருவரை கட்டாயப்படுத்துவது போல என்று உயர் நீதிமன்றம் குறிப்பிடப்பட்டிருந்தது. அது திருமணம் மற்றும் நம்பிக்கை என்பது தனி நபர் தேர்வு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான போக்கு என்பதையும் குறிப்பிட்டிருந்தது. பிரிவு 5ன் மீதான தடையின் காரணமாக, எந்தவிதமான மோசடியோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாமல் இரு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் நடக்கும் திருமணங்களையும் பாதிப்பதாக குஜராத் அரசு சொல்வது விசித்திரமானது. இது போன்ற திருமணங்களை நடத்துபவர்கள் இந்தத் தடையால் அந்தத் திருமணங்களைச் செய்ய முடியாமல் போகிறது என்றும் அரசு சொல்கிறது. முன்கூட்டியே அனுமதி பெறப்படுவதால், இரு வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையிலான திருமணத்தின் விளைவாக நடக்கும் மதமாற்றம் குறித்து கேள்வி எழுவது தவிர்க்கப்படுகிறது என்ற அடிப்படையில் இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த விதி, தன்னார்வ மதமாற்றத்தை அனுமதிக்கிறது என்ற கூற்றை யாருமே நம்ப மாட்டார்கள். வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாலேயே எந்த கேள்வியும் எழுப்பப்படாதபோது, எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்கப்படாதபோது மட்டுமே மத சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. மதம் மாறும் எண்ணம் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்த ஒருவர் கட்டாயப்படுத்தப்படுவதென்பது, மனசாட்சியின் விடுதலையை மட்டுமன்றி தனியுரிமையையும் மீறுவது என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விஷயம். தவிர, உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவுகளுக்கு எதிராக ஒரு தனியான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, மத மாற்றத்துக்கு எதிரான பொதுநல வழக்கில் முன்கூட்டிய அனுமதியை மீண்டும் புதுப்பிக்கக் கோரும் ஒரு மனுவை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டிய தேவை இல்லை. பரந்த அளவில் பார்த்தால், “கவர்ச்சி“ அல்லது தொண்டு பணிகள் மூலம் செய்யப்படும் மதமாற்றம் ஒரு தீவிரமான பிரச்சினை என்று நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருப்பது, தேசிய அளவில் மதமாற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கொண்டு வர அரசாங்கத்தைத் தூண்டுவதைப்போல இருக்கிறது. நாடெங்கிலும் மோசடியான மதமாற்றங்கள் நடக்கிறது என்ற மிகைப்படுத்தப்பட்ட குற்றசாட்டுகளை நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது ஒரு கேள்வி. ஒரு வேளை அப்படி ஏதும் இருந்தாலும் பிரச்னையின் தீவிரத்தை அடையாளம் கண்டு மத சுதந்திரம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பணியை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.