பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் புதிய சட்டமன்றங்களை தேர்ந்தெடுக்கும். திரிபுராவில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் மற்ற இரண்டு மாநிலங்களில் ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளிகளாக தொடரவும் விரும்புவதால், பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தல்கள் மிக முக்கியமானவை. மேகாலயாவில் முதல்வர் கான்ராட் கே சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), நாகாலாந்தில் முதல்வர் நெய்பியூ ரியோவின் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) ஆகியவற்றுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் வட கிழக்கில் பிரதானமான கட்சியாக இருந்த காங்கிரஸ், நாகாலாந்தில் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. திரிபுராவில் நிலைத்து நிற்க முயன்று கொண்டிருக்கிறது. மேகாலயாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியால் சோதனைக்குள்ளாகியிருக்கிறது. வடகிழக்கில் உள்ள பிராந்திய கட்சிகள் பொதுவாக மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்கவே விரும்பும். சமீப வருடங்களில் பா.ஜ.க. இந்த பகுதியில் தனது தடத்தை கணிசமாக விரிவுப்படுத்தியிருக்கிறது. 2018ல் பா.ஜ.கவின் வெற்றி, திரிபுராவில் இருபது வருட கால இடதுசாரி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால் அதிகாரத்தில் இருப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அதன் முதல் முதல்வர் பிப்லப் குமார் தேப்புக்கு பதில் 2022 ஆம் ஆண்டில் பல் அறுவை சிகிச்சை நிபுணரான மாணிக் சஹா நியமிக்கப்பட்டார். கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதை சரிகட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. ஏப்ரல் 2021ல் திரிபுரா பழங்குடிப் பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற திப்ரா மோத்தா என்ற பிராந்தியக் கட்சியின் தோற்றம் அதன் பகுதியில் உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் சூழலையே மாற்றியுள்ளது. இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிக்குகூட வாய்ப்பு இருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வடகிழக்கில் காலூன்ற முயற்சித்தாலும் அவரால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. மேகாலயாவில் 2021ல் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு சென்றார்கள். ஆனால் அதன் வலிமை குறைந்து வருகிறது. பிராந்திய உணர்வுகள் வலுவாக உள்ள ஒரு கட்சியில் திரிணாமூல் காங்கிரஸ் ஒரு வங்காளக் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் காரோ மலைகளில் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. நாகாலாந்தில், பா.ஜ.க. தனது தற்போதைய பங்காளியான என்.டி.பி.பியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அறிவித்துள்ளது. மேகாலயாவில் பா.ஜ.கவும் என்.பி.பி.யும் தனித்தனியாக போட்டியிடுவது மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று கடுமையாக மோதிக்கொண்டிருக்கின்றன. வழக்கமாக தேர்தலுக்குப் பிறகுதான் மாநிலத்தில் கூட்டணிகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் என்.பி.பி. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. தவிர, வடகிழக்குக்கான பா.ஜ.கவின் முக்கியஸ்தரான அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அங்கு நிறைய செல்வாக்கு செலுத்துகிறார். வழக்கம் போல நாகாலாந்தில் உள்ள பழங்குடி குழுக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளன. பழங்குடிகளின் உச்ச அமைப்பான கொன்யாக் யூனியன், எல்லைப்புற நாகாலாந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது உச்சத்திற்கு வந்திருக்கிறது. எதிர்கட்சிகளின் தாக்குப்பிடிக்கும் திறன் சோதனைக்குள்ளாக்கப்படும் இந்த தேர்தல்களில் பா.ஜ.க. பிராந்தியவாதத்தை கையாள்வதில் தனது புதுமைகளை தொடர வாய்ப்பிருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.